Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, October 31, 2007

ரஜினி (க்கு) பைத்தியம் புடிச்ச கதை தெரியுமா?

வணக்கம் என் இனிய இணைய தமிழ் மக்களே! என்னடா இவன் பதிவே போடாம, இவ்வளவு நாள் என்ன பண்ணிக்கிட்டிருந்தான்னு தானே கேள்வி கேட்கிறீங்க? ஆமா இந்த சபாட்டிக்கல், சபாட்டிக்கல்னு ஒரு வார்த்தை இங்கிலீஷ்ல இருக்கு, கேள்விபட்டிருக்கீங்களா, அதாவது தற்கால விடுமுறை, அதிலே போய்ட்டேன், நடுவுலே என்னோடய பழைய பதிவுக்கு வந்த பின்னுரை எல்லாத்துக்கும் கூட பதில் போடாம அப்படியே பப்ளிஸ் பண்ணிட்டு சும்மா இருந்த்துட்டேன். இதுக்கு முக்காவாசி காரணம் திடீர்னு வந்த வேலைப்பளு, அப்பறம் கூடவே ஒட்டிக்கிட்ட சோம்பேறித்தனம்! எல்லாம் ஒன்னா சேர்ந்துக்கிட்டு இந்த தமிழ் மணம் பக்கம் வரவுடாம பண்ணிடுச்சு! இதோ பண்டிகை தேதி எல்லாம் வருதே, ஒரு நடை வந்து உங்களை பார்த்துட்டு போலாமுன்னு தான் இந்த பதிவு எழுத உட்கார்ந்தேன், அதுவும் இந்த 'ஹாலோவின் டே' க்காக வீட்டுக்கு வர்ற போற பசங்களுக்கு மிட்டாய் கொடுக்கறப்ப, சரி போரடிக்ககம இருக்கிறதுக்கு ஒரு பதிவு எழுதலாமுன்னு தோனுச்சு, அதான் உட்கார்ந்திட்டேன்! சரி என்ன எழுதலாமுன்னு யோசிச்சப்ப, ரஜினி நடிச்ச தர்மயுத்தம் படத்தோட பாட்டு ஒன்னு பார்த்தப்ப தான், அப்ப ரஜினிக்கு புடிச்ச பைத்தியக்கார கதை பத்தி கொஞ்சம் எழுதலாமுன்னு தோணுச்சு! ரஜினி ரசிகர்கள் அடிக்க வர்றதுக்குள்ளே கதையை சொல்லி முடிச்சிடுறேன்!

அதாவது 70களின் கடைசி மற்றும் 80 களின் துவக்கம், ரஜினி நடிக்க வந்து ஒரு தன்னை ஹீரோவா எஸ்டாபிளிஷ் பண்ணின பிறகு, கொஞ்சம் புகழின் உச்சத்திலே இருந்த நேரம்! எப்பவும் பிரபல்யத்துக்கு பின்னாடி சுத்தி திரியம் பத்திரிக்கைகாரங்க தொல்லை ரஜினிக்கு விதி விலக்கல்ல! அப்ப ரஜினி எல்லாத்தையுமே போல்டா சொல்லி வந்தாரு, அதாவது பஸ் கண்டக்கடரா இருந்தப்ப அவரு பண்ணின சிலுமிஷம், அதாவது, தண்ணியடிக்கிறது, அப்பறம் 'அம்முவாகிய நான்' கதையை எல்லாம் சொல்லி 'நான் சிகப்பு மனிதன்'னு ரொம்ப வெளிப்படையா பேட்டி எல்லாம் கொடுத்து பத்திரிக்கைங்களுக்கு நல்ல தீனி போட்டிருந்த நேரம்! அது மட்டுமில்லாம, இப்பயும் நான் அப்படி இப்படி தான்னு சொல்லிக்கிட்டிருந்த நேரம்! இந்த மாதிரி ஓப்பனா பேசினது, நம்ம பத்திரிக்கை கும்பலுங்க அவரை வேவு பார்க்க எப்பவும் பப்பராசித்தனமா சுத்த ஆரம்பிச்சிங்காங்க! அங்க தான் சனியன் புடிச்சிது!

முதல்ல அவருக்கு உண்டான தனிமை போச்சு, அப்பறம் கண்ணா பின்னான்னு நம்மல பத்தி எழுதறங்கன்னு, ரொம்ப கடுப்பாகி, ஸ்டியோவிலேயே பத்திரிக்கையாளரை போட்டு அடிச்சி ராசாபாசாம ஆயிடுச்சி! அந்த நேரத்திலே தான் விடாம தொடர்ந்து ராத்திரி பகல்னு பார்க்காம நடிச்சது, இந்த மஞ்ச பத்திரிக்கை சமாச்சாரம் இது எல்லாம் போட்டு தாக்க, ரஜினிக்கு மண்ண்டை குழம்பி போச்சு! இது நடந்து முப்பது வருஷம் ஆச்சி! உங்கள்ல எத்தனை போருக்கு இந்த கதை தெரியும்னு எனக்கு தெரியாது! அப்ப தொடர்ந்து அவரோட படங்களை பூஜித்து வந்த ஆட்கள்ல நானும் ஒருத்தன்! அது மாதிரி ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பின்னனி கதை உண்டு! அப்படி வந்த கதையிலே தான் இந்த தர்மயுத்தம் படம் வந்தப்ப, வந்த கதை தான் 'ரஜினிக்கு புடிச்ச பைத்தியம்'!

ஆனா இதுல ஒரு ஒத்துமை பார்த்திங்களா, அப்ப சூப்பர் ஸ்டாரா இருந்த எம் கே டி பாகவதருக்கும் இதே மாதிரி ஒரு நிலமை ஏற்பட்டது, அதாவது பாகவதரு உச்சத்திலே இருந்த நேரம், அவருக்கிட்ட மயங்கி கிடந்து பெண்டுங்க எக்க சக்கம். அப்ப பாகவதரும் கொஞ்சம் ஷோக்கு பேர்வழி, அப்படி இப்படின்னு இருந்துட்டாரு, அதை எப்படியோ தெரிஞ்சு கதை பண்ணின பத்திரிக்கைகாரர் லஷ்மிகாந்தனை முடிச்சிட்டு, அந்த கொலை வழக்கிலே உள்ள போயி வெளியிலே வந்தவரு அப்பறம் எந்திரிக்கவே முடியிலே! பாகவதரு கதையை படிச்சிங்கன்னா ஒரே சோகம் தான்! (நான் சின்ன புள்ளையா இருந்தப்ப, எங்க கடையிலே இருந்த பெரிசு, இந்த பாகவதர் நம்ம ஸ்ரீரங்கத்திலே அவரை தேடி வந்த மாமிங்களைம், அப்ப அவருக்கிருந்த மவுசு பத்தியும் நிறைய சொல்ல கேட்டிருக்கேன்), பெரிசுங்க யாரவது ரொம்ப விவரமா இந்த பாகவதர் பதிவுக்கதையை போட்டா நல்லா இருக்கும்!

ஆனா ரஜினிக்கு பாகவதர் மாதிரி சோகமான கட்டம் ஒன்னும் வர்றல! ஆனா மனுஷன் டிப்பரஸாயி பைத்தியம் புடிச்ச நிலைமைக்கு போயிட்டாரு. அவரோட குரு நாதர் பாலசந்தர் எல்லாம் ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்து அவரு குணமாயி வந்தது ரெண்டாம் ஜென்மம் எடுத்து வந்த மாதிரி! அந்த காலகட்டத்திலே வந்த இந்த படம் தான் தர்மயுத்தம், அதனுடய எல்லா பாட்டுகளும் கலக்கலா இருக்கும், நம்ம ராஜா தான் ம்யூசிக்! இன்னொரு பிடிச்ச ஒன்னும் இந்த படத்திலே இருக்கும், அதாவது ஸ்ரீதேவி ரஜினிக்கு ஜோடி! நமக்கு என்னமோ ஆரம்பத்திலே இருந்து, அதாவது 16வயதினிலே, காயத்திரி, எல்லாம் இந்த வில்லத்தனமாவே ரஜினி நடிச்சிருந்த தாலே, எப்படா ஒன்னா அழகு ஜோடி போடுவாங்கன்னு எதிர்பார்த்த நேரத்திலே வந்த படம் இது, அதான் எனக்கு பிடிச்ச ஒன்னும் இருக்குன்னு சொன்னேன்!

இன்னொன்னும் இருக்கு, லதா அந்த காலத்திலே, இந்த கஷ்டமான காலகட்டத்துக்கு பிறகு உதவியா, ரொம்ப அன்பா, வாஞ்சையா இருந்ததாலேயே பிறந்தது அவங்க காதல்! ஆக ரஜினிக்கு பைத்தியம் புடிச்சி தெளிஞ்ச காலகட்டத்தை, இந்த படத்தோட பாட்டை பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு ஞாபகம் வரும், அதான் உங்களேட இந்த பதிவெழுதி பகிர்ந்துக்கிட்டேன். வெறுமனெ பதிவு போட்ட போதுமா, பாட்டில்லாமலா, அந்த பாட்டை பார்த்து கொஞ்சம் ரசிங்களேன்!

அப்பறம் தொடர்ந்து ரெகுலரா எழுத முடியும்னு நம்பறேன், திடீர்னு வேலைன்னு வந்தா இந்த மாதிரி சரியா உங்களை வந்து பார்க்க முடியாது! அதனாலே இப்பவே உங்கள் அனைவருக்கும் என்னுடய அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்!

Wednesday, April 04, 2007

புதிய வார்ப்புகள்- கிராமத்து யதார்த்தமும், காதல்காட்சிகளின் ஆளுமையும்!

புதிய வார்ப்புகள்- இந்த படத்தை பத்தி சின்னதா பாரதிராஜாவின் ஐந்து நட்சத்திரங்கள்னு நான் ஏற்கனவே பதிவு எழுதியிருந்தாலும், சமீபத்திலே இந்த படத்தை இன்னொருவாட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது! ஆஹா இப்ப எதார்த்தம்னு சேரன் எடுத்த தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் னு இப்ப சிலாகிச்சு சொல்லிக்கிட்டிருக்கோம், ஆனா அந்த காலத்திலே, அதாவது ஒரு 25 வருஷத்துக்கு முன்னேயே இவங்களுக்கு வழிகாட்டியா அழகா படம் புடிச்ச பாரதிராஜாவை இன்னொரு தடவை என்னால திரும்ப நினைச்சு சிலிர்க்காம இருக்க முடியிலே, அதானல இந்த படத்தி ஒரு பாட்காஸ்ட் போட்டேன்! அங்கு அதை ரிலீஸ் ஆக்கிட்டு, இப்ப தான் பதிவு எழுத வந்தேன். அதாவது படத்தை A,B சென்டர்ல முதல்ல ரிலீஸ் பண்ணிட்டு, C சென்டர், அதான் பதிவு போட இப்ப தான் வந்தேன்!

சரி படம் பத்தி சொல்லலாம்! இந்த படம் இப்ப இருக்கிற இளசுங்களுக்கு ரொம்ப பழையப்படம்! ஆனா அந்த காலத்திலே தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படம். இதனுடய அழகு என்னான்னா இந்த படத்து பாரதிராஜா அமைச்ச திரைக்கதை! அப்பறம் தன்னுடய கோஷ்டியிலே இருந்த பாக்யராஜ்க்கு இதிலே பெரிய லிஃப்ட் கொடுத்த படம், அதாவது பாரதிராஜா 'ஹீரோவா யாரபோட்டு நான் படமெடுத்தாலும் ஒடும்னு' நிரூபிச்ச படம். அப்பறம் வழக்கம் போல பாரதிராஜாவுக்கு கை கொடுத்தது நம்ம ராஜாவோட ம்யூசிக்! அதுவும் சண்முகப்ரியா ராகத்திலே போட்ட பாட்டு, கீழே வீடியோ கிளிப் பாருங்க, சும்மா கலக்கலா இருக்கும்! இந்த பாட்டை தம்பி கங்கை அமரன் எழுதி கொடுத்து ம்யூசிக் போட்டிருந்தாலும், அதுக்கு நல்ல கனவு காட்சியா ரத்தியை ரொம்ப அழகா காமிச்சிருப்பாங்க! இந்த பாட்டை பாடினது அப்ப ராஜா, சும்மா அழகான பாடல்கலை அள்ளி தந்து பாட வச்ச ஜென்ஸி பாடினது, கூட வசந்தா ன்னு இன்னொரு அம்மாவும் பாடி இருப்பாங்க!


இந்த பாட்கஸ்டல சீன் பை சீன் நல்லா பேசி காமிச்சிருக்கேன் அதை போட்டுக் கேளுங்க! அதுவும் பாக்யராஜ் பாரதிராஜா கோஷ்டியிலே சேர்ந்த கதை, கிராமத்து காட்சிகளின் யதார்த்தம், அப்பறம் எப்படி காதல் காட்சிகள்ல அவரின் ஆளுமை இருந்ததுன்னு இரண்டு பகுதியா பாட்காஸ்ட் போட்டிருக்கேன்! இந்த ஈஸ்டர் லீவுக்கு சும்மா கீழே தரவிறக்கம் பண்ணி மெதுவா கேளுங்க! அப்படி டைம் இல்லேன்னா பாட்டை வீடியோல பாருங்க! ஒரு சாம்பிளுக்கு இந்த வசனம் எப்ப எங்க வ்ரும்னு சொல்லுங்க, தெரியலைன்னா பாட்காஸ்ட் கேளூங்க!

"நேரம் ஆக ஆக இருட்டிக்கொண்டே வந்தது!
கானகத்தின் நடுவே நின்றிருந்த அந்த கன்னிப்பெண்ணை தென்றல் தாலாட்ட ஆரம்பித்தது!
ஜில்லென்ற பருவக்காற்று அவள் பருவத்தின் வனப்புகளை தொட்டு எழுப்ப ஆரம்பத்ததும் அவளுடய கண்கள் சற்றே சொருக தொடங்கன!
ஆஹா என்ன அற்புதமான காட்சி, அவள் மேலாடை சற்றே......."

புதிய வார்ப்புகள்-பாரதிராஜாவின் கிராமத்து யதார்த்தம்!


தரவிறக்கம் செய்து கொள்ள இதோ

புதிய வார்ப்புகள்-பாரதிராஜா கையாண்ட காதல் காட்சிகளின் ஆளுமை!



தரவிறக்கம் செய்து கொள்ள இதோ

பாடலை பார்க்க,கேட்க இதோ!

Sunday, March 18, 2007

தமிழ் சினிமாவின் தலைசிறந்த பத்து வசனங்கள்!

எத்தனையோ படம் பார்க்கிறோம், ஆனா அத்தனை படங்கள்லயும் பேசும் எல்லா வசனங்களும் நம்ம மனசிலே நிக்கறதில்லை! ஆனா பாருங்க சில வசனங்கள் காலத்தால் அழியாத வசனங்களா நம்ம மனசிலே நிலைச்சு நிக்கும். அப்படிப் பட்ட தலைசிறந்த பத்து வசனங்கள் என்னான்னு பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு.

10) "மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி" - இது பி எஸ் வீரப்பா பேசி நடிச்ச வசனம், மகாதேவி என்ற படத்தில்! மகாதேவியாக சாவித்திரி நடித்து, இந்த படம் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்தப்படம். இது ஒரு டிரேட் மார்க் வசனம். இந்த வசனம் பத்தி நினைக்கிறப்ப பிஎஸ் வீரப்பா உடனே நினைவில் வந்து நிறபது என்னவோ உணமை தான்!

9)"சபாஷ் சரியான போட்டி" - மறுபடியும் பிஎஸ் வீரப்பா பேசி நடிச்ச வசனம், வஞ்சிக்கோட்டை வாலிபன் என்ர படத்தில்! அந்த கால டான்ஸிங் சென்ஷேஷன்ஸ்னு சொல்லி புகழப்பட்ட வைஜெயந்தி மாலாவும், பத்மினியும் பரதநாட்டிய போட்டி நடனம் ஆடி கலக்குவாங்க! அப்ப பிஎஸ் வீரப்பா இந்த வசனத்தை சொல்லி உசுப்பேத்துவார். இந்த வசனம் நம்மகிட்ட நிலைச்ச ஒன்னு. இப்பயும் இரண்டு பெண்கள் எதாவது ஒரு விஷயத்திலே சண்டை போட்டு வாக்குவாதம் பண்ணிகிட்டு இருக்கிறப்ப, நம்ம எல்லாரும் இந்த வசனத்தை பிரயோகிச்சு உசுப்பேத்தி விடறது வழக்கம்! அதாவது ஆண்கள் விசலடிச்சு கொண்டாடும் இந்த தருணத்தில் உபயோகிக்கும் வசனம், எத்தனை காலமானாலும் மறக்க மாட்டாங்க!

8) "நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே!" - இது திருவிளையாடல் படத்தில் ஏபி என் நகாரஜன் பேசி நடிச்ச வசனம்! அதாவது மொழிப்புலமையிலே வரும் சண்டையிலே பரமசிவனுடன் சண்டை போடும் நக்கீரனாக நடிச்சி அசத்தி இருப்பார். இந்த வசனம் தான் 'நக்கீரன்'னு பத்திரிக்கை எல்லாம் பின்னாடி ஆரம்பிக்க ஏதுகோல இருந்தது! இது ஒரு மறக்க முடியாத வசனம்!

7)"நீ முந்திண்டா நோக்கு, நா முந்திண்டா நேக்கு" - இது 'வியட்நாம் வீடு' என்ற படத்திலே ப்ரிஸ்டிஜ் பத்மனாபனா நடிச்ச சிவாஜி கணேசன் பேசற வசனம்! அதாவது தன்னுடய பதவிகாலம் முடிஞ்சு ரிடெயர்மெண்ட் காலத்திலே தன்னை ஒதுக்கி வச்ச பிள்ளைகளை நினைச்சு, தனது மனைவியாக நடிச்ச பத்மினியிடம் பேசும் வசனம்! இந்த காட்சியை பார்த்து கண்ணை கசக்கும் பெண்களின்கூட்டம் அதிகமாக தியேட்டரில் அலை மோதியது ஒரு சரித்தரம்!

6)"பரட்டை பத்தவச்சிட்டியே பரட்டை"- இது நான் அடிக்கடி சிலாகிக்கும் பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' யிலே வர்ற ஒரு வசனம்! தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட படம்! மக்கள் எதை வேணும்னாலும் மறந்திருக்கிலாம், ஆனா இந்த கவுண்டமனி பேசிற இந்த டைலாக்கை மக்கள் மறக்க மாட்டாங்க. இந்த படத்திலே இன்னொரு முக்கியமான டைலாக, கமல் பேசற "ஆத்தா ஆடு வளத்துச்சு, கோழி வளத்துச்சு, ஆனா நாயி வளக்கல்ல, என்னத்தானே வளத்துச்சு" ன்னு உருக்கமா பேசும் இந்த டைலாக் பாப்புலரா இருந்தாலும், "இது எப்படி இருக்கு"ன்னு வசனம் பேசின நம்ம தலைவர் ரஜினி இழுத்த கூட்டம் தான் அப்ப அதிகம்! இருந்தாலும் கவுண்டமணிங்கிற நகைச்சுவை சகாப்தம், செந்தில் கூட சேர்ந்து ஜோடி போட்ட இந்த மறக்கமுடியாத தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜோடிகள்ல ஒருத்தரை அடையாளம் காட்டி கொடுத்த இந்த வசனம் மக்கள் மனதை விட்ட அகலாத ஒன்னு!

5)"நீங்க நல்லவரா கெட்டவரா" - இது நாயகன் படத்திலே கடைசி காட்சியிலே கமலோட பேரன் அவருகிட்ட கேட்கும் கேள்வி! இது படத்திலே சின்னபையன் பெரியவர் நாயக்கரை பார்த்து கேட்டாலும் கடைசியிலே மக்கள் முன்னே தத்வார்த்த்மா, டைரக்டர் வைக்கும் கேள்வி! இந்த இரண்டு ஷேட்ஸ்லயும் வர்றக் கூடிய வில்லன் கலந்த கதநாயகன் ஆரம்பத்தை மணி தொடங்கி வச்சது இந்த படத்திலே தான்! அது இப்ப வந்த குரு படம் வரை தொடருது! ஆக இந்த வசனமும் மறக்க முடியாத ஒன்னு!

4) "கடவுளே.. கடவுளே" - இது மறக்க முடியாத ரஜினியின் நகைச்சுவை உணர்வான நடிப்பினை வெளிபடுத்திய படம், 'அண்ணாமலை'! இதுல ரஜினி குஷ்புவை பார்க்ககூடாத கோலத்திலே பார்த்திட்டு அதை பாம்பை பார்த்து நடுங்கும் கோலத்தோட இணைச்சு அடிக்கும் இந்த காமடி டைலாக் சும்மா கிளாஸ்!

3) "மன்னிப்பு, தமிழ்ல எனக்குப் புடிக்காத வார்த்தை!" - இது நம்ம விஜயகாந்து ரமணாவிலே ஊழல் பண்ணும் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளை சுளுக்க எடுக்க பேசி நடிச்ச வசனம், மறக்க முடியாத ஒன்னு! அவரு கண்ணு சிவக்க பக்கம் பக்கமா அறிவுரை வசனம் பேசி நடிச்ச பல படங்கள் இருந்தாலும் இந்த ஒரு சிம்பிள் வசனம் அனைவரையும் கவர்ந்த ஒன்னு! இதை மக்கள் அடிக்கடி பொதுவிலே தான் பேசும் போது சேர்த்துக்கிட்டு பேசன ஒன்னு! அவ்வளவு பாப்புலர்!

2) "மாப்பு..வச்சிட்டான்யா ஆப்பு" - இது காமடி டைலாக்ல ஒரு சிகரம்! அதாவது அப்ப வந்த அபூர்வ சகோதரர்கள்ல ஜனகராஜ் பேசிற ஒன் லைன் டைலாக், 'சார் நீங்க எங்கயோ போய்ட்டீங்க' அப்படின்னு சொல்லும் அந்த ஒன் லைன் டைலாக்ல தியேட்டரே அதிரும். அப்படி தியேட்டரை அதிரவச்ச இந்த டைலாக்கை, வடிவேலு பேசி நடிச்ச சந்திரமுகியை, யாரும் மறக்க முடியாது!

1) "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" - இது பஞ்ச் டைலாக்குகளின் சிகரம். அதாவது ரஜினி பாட்ஷாவிலே பேசி நடிச்ச இந்த பஞ்ச் டைலாக் தான் அடுத்தடுத்து வந்த படங்களில் வரும் பஞ்ச் டைலாக்குகளுக்கு எல்லாம் தாய் பஞ்ச் டைலாக்! அதாவது இது "Mother of all panch Dailogue"! இந்த வசனத்தோட வீரியம் எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு ரஜினி படத்திலே பேசி நடிச்சப்பக் கூட நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு! ஆனா இதன் மந்திர சக்தி அப்படியே எல்லாரையும் கட்டி போட வச்சது! இதை வச்சு, சோகம், காமடி அப்படின்னு ஏகப்பட்ட வர்சன்ஸ் மக்கள் மத்தியிலே வந்து பிரயோகம் பட்டது! ஆக இது மறக்கவே முடியாத ஏன் மறக்கக் கூடாத, ஏன் எத்தனை காலம் மறினாலும் மக்கள் மனதில் நினைத்து நிற்க கூடிய ஒரு தலைசிறந்த வசனம்!

Sunday, March 11, 2007

மீண்டும் கோகிலா- இடுப்பை கிள்ளும் கமல்!

ரொம்ப நாளா இந்த ராகங்களின் பின்னே போய்ட்டதாலே மத்த எழுத நினைச்ச பதிவுகள் அப்படியே தங்கி போச்சு! அதிலே போன வாரம் பார்த்த ஓங்கி நடித்தவனை அடக்கி ஆண்டவரின் படம் பத்தி எழுதனும்னு நினைச்சேன், எதுன்னு தெரிஞ்சா மறுமொழி போடுங்க பார்க்கலாம், என்னோட கிசுகிசு பாணி சிலேடை உங்களுக்குப் புரியுதான்னு பார்ப்போம்! அப்படி எழுதனும்னு தோணுனதிலே முதல்ல இந்த மீண்டும் கோகிலா பத்தி கொஞ்சம் பார்ப்போம்! இந்த படம் ஆரம்பிச்சப்ப ஏகப்பட்ட அமர்க்களத்தோட இதிலே நம்ம ஜெமினி மாமா பொண்ணு ரேகா நடிக்கறதா இருந்தது. அப்ப கமலுக்கு வாணியோட கல்யாணமாயிருந்த நேரம்! அப்ப ரேகாவுக்கு கமலு மேலே கொஞ்சம் கிக்கு தான்! எங்க ஆம்புடையான் கையை வுட்டு போயிடுவானோன்னு வாணி மூக்கு சிந்துனதாலே, அந்த ஐடியா அப்படியே ட்ராப் ஆயி கடைசியிலே இந்த படத்துக்கு ரேகா பண்ண வேண்டிய ரோலை, அப்ப நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அப்ப வயசுக்கு மீறின வளர்ச்சியோட பார்க்க லட்சணமா இருந்த தீபாவும் ஏற்கனவே பாப்புலரா இருந்த கமல் ஸ்ரீதேவி ஜோடி அமர்க்களமா நடிச்சு 80களில் வெளி வந்தப்படம்.

மொத்தமா இது அக்ரஹாரத்து கதை,

'ஸ்ரீதேவி மாமி சமத்தா ஆக்கி போட்டுண்டு நல்ல வளைய வர்ற மாமி போங்கோ, அசித்திருப்பா. சட்டம் படிச்ச நம்மண்ணா கமலுக்கு சபலம் கொஞ்சூண்டு ஜாஸ்தி போங்கோ! அதினால குடும்பத்திலே வந்த குழப்பத்தை வச்சுண்டு ஒரே ஏக ரகளையா படம் போயிண்டிருக்கும் போங்கோ, நான் என்ன சொல்றது படம் கிடைச்சா வாங்கி போட்டு கொஞ்சம் பார்கிறேளா, நா சொல்றது உங்களு புரியும்! ஐயராத்து கதை சொல்றப்ப அவா மாதிரி பேசறது சகஜம் தானேண்ணா!

ஓகே வந்த விஷயத்துக்கு வருவோம். அப்ப நம்ம ராஜாவின் ஆரம்ப கால பருவம். ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம், புதுமைன்னு கொடுத்துண்டிருந்தார்,..ச்சீ பழக்க தோஷம், விடமாட்டேங்கிது! அப்படி இந்த படத்திலே போட்ட ஒரு அருமையான பாட்டு 'சின்னஞ்சிறு வயதில்' என்கிற பாட்டு. இதிலே அப்ப வித்தியாசக்குரல் வேணும்னு எஸ் பி சைலஜாவை வச்சு பாடவச்சார், கூட நம்ம தேன் மதுரகுரலுக்கு சொந்தக்காரான ஜேசுதாஸ் அவர்கள்,கேட்கணுமா, பின்னி எடுத்திருப்பாங்க. அதோட வீடியோ கிளிப்ஸ் இன்னக்கு உங்கள் சாய்ஸ்! கீழே பாருங்க!

இதிலே ரொம்ப முக்கியமான சமாச்சாரம் கமல் அடிக்கடி ஸ்ரீதேவி மாமி இடுப்பை கிள்றது தான்! அது தான் படத்தோட ஹைலைட். அந்த காலத்திலே நான் ரசிச்ச ஸ்ரீதேவி, பாவம் இடுப்பை வச்சுண்டு, நம்ம கமலண்ணாட்ட படதா பாடு பட்டிண்டிருப்பார்! எத்தனையோ கமல் ஸ்ரீதேவி ஜோடி போட்டு படங்கள் வந்திருந்தாலும், ஒரு சில படங்கள் மனசை விட்டு அகல்வதில்லை, அப்படி தான் இந்த படமும். அப்பறம் மூன்றாம் பிறை, ஆனா அந்த படத்தை பத்தி சொல்னும்னா, பதிவுக்கு 'பொன்மேனி உருகுதே' காத்துக்கிட்டிருக்கு! அது வேற விஷயம்!

இது ஒருவிதத்திலே கமலோட சொந்தபடம் மாதிரி, ஹாசன் பிரதர்ஸ் கதை இலாகா, கதை பண்ணியிருப்பாங்க! அப்பறம் உடைகள் 'வாணி கமலஹாசன்'ன்னு போட்டு வரும், இந்தம்மா அப்ப ஏபிஎன் எடுத்த 'மேல்நாட்டு மருமகள்'ல கமலோட ஜோடி போட்டு அப்பறம் கல்யானம் கட்டிண்டா! அப்பறம் சரிகாவை கமல் ஆராஞ்சதாலே விட்டுட்டு போயிட்டா, ஆனா பாருங்க, அவரு விட்டு போன டிப்பார்ட்மெண்ட், இந்த காஸ்ட்யூம்ஸ் தான், அப்பறம் கமல் சொந்த படங்களுக்கு சரிகா கமலஹாசன்னு போட்டு வரும், இப்ப யாரு அதை கவனிக்கிறாங்க, கெளதமியா??

இந்த பாட்டுல ஒரு வித்தியாச சங்கீத சப்தம், பாக்கு உரல்ல இடிக்கிறதை, காரி துப்புறமாதிரி வர்ற சப்தத்தை எல்லாம் கலவை செஞ்சு கேட்க சுகமா ஒரு ராகம் நம்ம ராஜா போட்டிருப்பார். கேட்டுக்கிட்டே இருக்கலாம். இது மாதிரி பாடல்கள் சுத்தமா நம்ம மறந்துட்டுமோன்னு படுது எனக்கு, நீங்க என்ன நினனைககிறேள்? அப்படி எதுவும் நினைக்கிலேன்னா நீங்க பொண்ணு பார்த்த படலத்தை ஞாபகபடுத்திண்டு சந்தோஷமாயிருங்கோ! சரி இப்ப ஒலியும் ஒலியும் பாருங்கோ! நான் சித்த போயிட்டு வந்துடுறேன்!

Thursday, February 22, 2007

கமலுக்கு கை கொடுத்த பரதம்!

ரொம்ப நாளாவே இந்த நடிப்பை பத்தி நான் எழுதி வர்ற பதிவுகள்ல எனக்கேத் தெரியாம அப்ப அப்ப கமலை கிரிட்டிஸைஸ் பண்ணி எழுதினேன், அதனாலே நம்ம ஜோவிலிருந்து கொத்தனார் வரை காட்டஞ்சாட்டமா பின்னோட்டம் போட்டு என்னா ஏது இப்படி சொல்றீங்களேன்னு கேட்டதுக்கு பதில் பதிவு போடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது அப்படியே தள்ளிப் போயிடுச்சி! அதுக்குத்தான் இந்த பதிவு!

கமல் வந்து ஒரு ச்சைல்ட் ஆக்டர், அதாவது சின்னபுள்ளேயிலிருந்தே நடிக்க வந்தவர். ஜெமினி மாமாவோட 'களத்தூர் கண்ணம்மா'ன்னு ஆரம்பிச்சி எம்ஜிஆரோட ஆனந்த ஜோதியிலே 'ஆர் எஸ் எஸ்' மாதிரி 'ஒரு தாய் மக்கள் நாம் என்போம்'னு ஆடிப்பாடி நடிக்க ஆரம்பிச்சவரு! பொதுவா பார்த்தீங்கன்னா இந்த ச்சைல்ட் ஆர்டிஸ்ட்ங்க வளர்ந்தபின்னாடி, பெரிய ஆளா வர ரொம்ப சிரமப்படுவாங்க, அப்படி கஷ்டபட்டு வந்தாலும் சரியா சோபிக்க மாட்டாங்க! உதாரணத்துக்கு நீங்க நெறைய பேத்தை எடுத்துக்கிடலாம். சின்ன புள்ளையிலே கொடிகட்டி பறந்த 'குட்டி பத்மினி' பத்தி உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரிஞ்சிருக்குமோ எனக்குத்தெரியாது, டிவியிலே எஸ் வீ சேகர் டிராமா 'வண்ணக் கோலங்கள்' பார்த்திருந்தீங்கன்னா, அதுல அம்மணி தான் ஹீரோயின்! அந்த அம்மா சின்ன புள்ளையா நடிச்சப்ப இருந்த பாப்புலாரிட்டி அவ்வளோ, வெறும் பத்மினின்னு பேரை வச்சுக்கிட்டு நம்ம பப்பிம்மா பத்மினிக்கே சவாலா, பேரிலதான், இருந்ததாலே இந்த 'குட்டி'ங்கிற அடை மொழி வந்துச்சு! அப்படி சின்னபுள்ளையிலே போடு போடுன்னு போட்ட பொண்ணு! ஆனா வளர்ந்து நிலைக்கிலே!

அது மாதிரி அவங்க அண்ணன், மாஸ்டர் பிரபாகர், அந்த காலத்திலே பிஸியா இருந்த ச்சைல்ட் ஆக்டர், வா ராஜா வா, இரு கோடுகள், அப்படின்னு எக்கசக்கப்படம் அப்ப வந்த எல்லா படத்திலேயும் கதைக்கே சம்பந்தமில்லாம சின்னபுள்ளைக்கூட்டத்திலே காமிக்கனும்னாலும், இல்லை சின்னப்புள்ளையிலே நடந்த ப்ளாஸ்பேக் சொல்லனும்னாலும் இவரு இல்லாம படமில்லைன்னு இருந்த காலம்! இவரு தான் எனக்கு 'ரோல்மாடல்' அப்ப, எனக்கும் நடிப்புன்னு வந்தப்ப, பூனை புலியை பார்த்து சூடுபோட்ட கதையா நானும் அலைஞ்சேன்! அந்த சோகக்கதையை நான் ஏற்கனவே எழுதின 'வா...ராஜா..வா..' பதிவிலே வேணும்னா போய் படிங்க! ஆனா பார்த்தீங்கன்னா இவரு வளர்ந்து பெரியவனாயி, என்ன கர்ணம் போட்டும் சினிமாவிலே தலை காட்ட முடியிலே! அதாவது எஸ்டாபிளிஸ்ட் ஆக்டரா ஆகமுடியிலே, அங்கொண்ணு இங்கொண்ணுன்னு நடிச்சிட்டு போயி சேர்ந்திட்டாரு!

அதே மாதிரி இன்னொரு எஸ்டாபிளிஷ்ட் ச்சைல்ட் ஆர்டிஸ்ட், மாஸ்டர் சேகர், எம்ஜிஆர் படத்திலே 'ஒளிவிளக்கு', சிவாஜி படத்திலே 'ராஜா' எல்லாம் நான் இவரை இன்னொரு தடவை பார்க்கணும்னு போய் அவருக்காக ஒரு முறை பார்த்த அனுபவம் உண்டு, அதாவது பொதுவா எம்ஜிஆர் படம் குறைஞ்சது மூணு தடவை பார்த்துடுவேன், ஆக அந்த கணக்கிலே இவரு கணக்கு ஒரு தடவை! ஆனாப் பாருங்க இவரும் பெரிய ஆளாயி ஒன்னும் சுகப்படலே! இவரு வயசுக்கு வந்து ஒரு பலானப்படம் வந்துச்சு 'மஞ்சள்முகமே வருக'ன்னு அதிலே தான் இப்ப அம்மாவா கலக்கிட்டு இருக்கிற 'சத்யகலா' அப்படியே ஏகப்பட்ட கவர்ச்சியோட நடிச்சு எங்களை சூடேத்தின அம்முணி! இதை ஏன் சொல்றேன்னா, இவங்க எல்லாம் 'எஞ்சோட்டு' பசங்க! அதுக்கப்பறம் இவரும் பெரிய ஆளா வந்து சுகப்படல!

ஏன் கொஞ்சகாலத்துக்கு முன்னே கலக்கிகிட்டு இருந்த காஜாஷரீப்பும், இப்ப விடலை முடிஞ்சு வாலிபம் வந்து ஒன்னும் சுகப்பட்ட மாதிரி தெரியலை! அப்படி சின்னவயசிலேருந்து நடிக்க வந்து வாலிபம் வந்து நடிக்க ஆரம்பிச்சு உருப்பட்டதிலே நம்ம கமலும்,ஸ்ரீதேவியும் தான்!அப்பறம் இப்ப வெற்றி பெற்றது 'ஷாலினி', ஏனோ அந்த அம்மாவும் தொடந்து நடிக்கல! ஆனா கமலு தன்னை நிரூபிச்சு நல்ல நடிகன்னு காமிக்கறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டாரு! அதைத்தான் நான் அப்ப சொல்ல வந்தேன்! அதாவது அவரும் வயசுக்கு வந்து நடிக்க ஆரம்பிச்சோன, முதல்ல பாலசந்தர், அவரை 'சொல்லத்தான் நினைக்கிறேன்'ல வில்லனா போட்டு அறிமுகப்படுத்தினாரு! அதுக்கு முன்னே அவரு மலையாளப்படத்திலே நம்ம ஷகீலா ரேஞ்சுக்கு அப்ப நடிச்சு ஒரு படம் வெளி வந்தது, அது 'ராஸலீலா'ன்னு! ரொம்ப ஞ்சூடேத்திரப்படம், பிரத்யோக காலைகாட்சிப்படம், பிட்டுப்படமாதிரி! அப்ப அது மாதிரி தான் நடிச்சிக்கிட்டு இருந்தாரு! பாவம் என்ட்ரீ கிடைக்காம கஷ்டபட்டுக்கிட்டு இருந்த நேரம், அப்ப!

அப்ப தான் சினிமாவிலே டான்ஸ் மாஸ்டர் வேலை செஞ்சுக்கிட்டு, அப்பறம் ஆர் சி சக்தியோட சுத்திக்கிட்டிருந்தப்ப தான் பாலசந்தர் ஒரு பிரேக் கொடுத்தாரு! வேணும்னா அந்த கால 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'அரங்கேற்றம்' படமெல்லாம் பாருங்க, ஆளு ஒல்லிப்பிச்சான் மாதிரி சரியான ஐயர்வூட்டு தயிர் சாதம் பையன் மாதிரி தான் இருப்பாரு! அப்ப தான் 'தண்டால், வெயிட்லிஃப்டிங்,அப்படின்னு தேகப்பயிற்சி செஞ்சு உடம்பை தேத்திக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா ஆளாகிக்கிட்டிருந்த நேரம். அவரை ஷேப் பண்ணைதிலே பெரும் பங்கு பாலசந்தரோடது! நீங்க இந்த வித்தியாசத்தை அபூர்வராகங்களுக்கும், அவள் ஒரு தொடர்கதைக்கும் இடையே பார்க்கலாம்!

ஆக இந்த இடைப்பட்ட நேரத்திலே சில மற்றவர்கள் படத்திலேயும் நடிச்சாரு, அழக்கூடத்தெரியாதுன்னு நான் சொன்னேன்ல, வேணும்னா தமிழ்ல எடுத்த ஹிந்திப்படமான 'மதர் இண்டியா', பேரு என்னான்னு தெரியலை, அதுல அவரு அழுது நடிக்கறதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு! அப்பறம் தேத்தின உடம்பை காமிச்சு அசத்திக்கிட்டு இருப்பாரு படத்துக்கு படம், இந்த சல்மான்கான் மாதிரி! கோகிலா, மரோச்சரித்திரா, மன்மதலீலை, அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்! ஏன்னா நடிப்புக்குறை ஏதும் இருந்தா அதை மறைக்கிறதுக்கு!

அப்பறம் அவருக்கு கிடைச்ச 'லவ்வர் பாய்' இமேஜ், அதிலே அவரு நல்லாவே கேப்டலைஸ் பண்ணினாரு! அதானாலேயே ஜொமினி மாமாவுக்கு, 'காதல் மன்னன்' பட்டம் கொடுத்திட்டாதினாலே இவருக்கு 'காதல் இளவரசன்' பட்டம் கொடுத்தாங்க! அப்ப இவருகிட்ட நடிச்ச எல்லா ஹீரோயினுக்கும் முத்தம் கொடுக்கலேன்னா தூக்கம் வராது! அப்ப தான் வயசுக்கு மீறுன வளர்ச்சியோட வந்த தீபாவை வச்சு நம்ம பாபிப்பட ஸ்டைல்ல ஒரு நீச்சல் டிரெஸ்ல ஒரு படம் வந்துது, முதன்முதல்ல கமல் அதுலே பாட ஆரம்பிச்சாரு, படம் பேரு தெரியலை, தெரிஞ்சவங்க பின்னோட்டம் போடுங்க! இப்படி நடிப்புல வெரைட்டின்னு ஒன்னும் காமிக்கல்லை அப்ப! உடம்பை காமிச்சும், காதல் பண்ணியும் ஒப்பேத்தினாரு! ஆனா அப்ப அவரு கொஞ்சம் எங்களுக்கெல்லாம் ரோல்மாடல் தான் ரொமான்ஸ் பண்ணறதுக்கு! என்னோட தேகப்பயிற்சி, பேரலல் பார், வெயிட்லிஃப்டிங் இப்படின்னு ஒரே தீவிரமா உடம்பை வச்சு பொண்ணுங்களை மயக்க முடியும்னு அடி போடவும் காரணமா இருந்தவரு! (அப்படி ஏதும் காரியம் ஆகலைங்கிறது வேறே விஷயம்!)

ஆனா அப்ப அவருகிட்ட புடிக்காத ஒன்னு என்னான்னா இந்த பரத நாட்டியத்தை எக்ஸ்போஸ் பண்ணுனது தான்! பொட்டபுள்ளைங்களுக்கு வேணும்னா, 'ஆகா என்னா அழகா, அம்சமா அபிநயம் புடிக்கிறாரு கமலு'ன்னு ஓ போட வச்சாலும், எனக்கென்னமோ நிழல் நிஜமாகிறதுலஒரு சீன்ல ஆடி காமிச்சது கடுப்பாதான் இருந்தது, இதை இந்தியிலே 'திகாவத்'ன்னு சொல்லுவாங்க! அதாவது தமிழ்ல'பீத்திக்கறது'ன்னு சொல்றது! அப்படி தான் எனக்கு தோணுச்சு! பொட்டபுள்ளைக்கு கத்துகுடுக்கறதை இவரும் கத்துக்கிட்டு ஆடுறாரு, இதிலெ என்னா இருக்குன்னு! ஒரு வேளை இது என்னோட ஆற்றாமையாக் கூட இருக்கலாம்! ஏன்னா தேகப்பயிற்சி பண்ணி உடம்பை தேத்திறதிலே எந்த சிரமம் இல்லை, அவரை காப்பி அடிச்சு, ஆனா பரதம் ஆடனும்னா, எங்கப்போறது?

இந்த மாதிரி பரதம் ஆடி வியக்க வைக்கிறதை அவரு 'சொல்லத்தான் நினைக்கிறேன்'லேயே செய்ய ஆரம்பிச்சிட்டாரு! அதாவது வராத நடிப்பை மறைக்க கைகொடுத்தது இந்த பரதம், ஆக மக்கள் தனித்துமா அடையாளம் கண்டு கொள்ள இது அவருக்கு உதவுச்சு!

ஆனா பார்த்தீங்கன்னா, பிறகு கொஞ்சம் கொஞ்சமா நடிப்பிலேமெச்சூரிட்டி வர ஆரம்பிச்சு, இந்த பரத்தை நல்ல நடிப்பா காட்டி அதை எக்ஸ்ட்ரீம் எக்ஸ்ப்ளாய்ட்டேஷன் பண்ணி வெளி வந்தப்படம் 'சலங்கை ஒலி'! சொல்லக்கூடாது சும்மா அசத்தியிருப்பாரு! அதுக்காக 'நிழல் நிஜமாகிறது' நல்லா இல்லேன்னு சொல்லலை, அது கேபியோட இன்னொரு மாஸ்டர் பீஸ், அதைப் பத்தி அப்பறமா எழுதுறேன்!

நீங்க இந்த வித்தியாசத்தை இந்த வீடியோ கிளிப்புலே பார்க்கிலாம்! ஆக எனக்கும் கமல்பிடிக்கும் தான்! ஆனா வெரைட்டி காட்றேன்னு கஷ்டபட்டு கெட்டப்பை மாத்தி, உழைச்சு நல்லா தான் நிறைய படங்கள்ல நடிக்கிறாரு! இருந்தாலும் நடிப்பிலே தன்னை வருத்திக்காமே வெரைட்டி காட்ட முடியாதாங்கிறது தான் என் ஆதங்கம்! இதோ பக்கத்திலே மலையாளத்திலே நடிச்சிக்கிட்டிருக்கிற மோகன்லால் படங்கள் நீங்கள் எத்தனை பேரு பார்ப்பீங்களோ எனக்குத் தெரியாது! அவரு மீசைக்கூட ஒதுக்கி உட்டுகிறது கிடையாது, ஆனா படத்துக்கு படம் அவ்வளவு வெரைட்டி நீங்கப் பார்க்கலாம்! அதைத் தான் நான் சொல்ல வந்தேன்! மற்றபடி எனக்கும் கமலை நல்லாவே புடிக்கும், அவர் நடிச்ச எத்தனையோ படங்களை அப்படியே சிலாகிச்சு ரசிச்சு சோறு தண்ணி இல்லாம, அப்ப அதை பத்தியே நினைச்சு மருகி காலேஜ் ஹாஸ்டல் காலம் தள்ளின காலங்களும் உண்டு! ஆக ஜோ, இலவசக் கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், ஏன் நம்ம கால்கிரி சிவாக்கூட கேட்டிருந்திரு, 'உங்களுக்கும் கமலுக்கும் முன் ஜென்ம பகையான்னு' உங்க எல்லாத்துக்கும் இந்த பதிவு என் பதில்! இப்ப வீடியோ கிளிப்பு பாருங்க!

Friday, February 16, 2007

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே - நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!

'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் போங்க! அதாவது எம்ஜிஆர் மக்கள் மனதிலே இடம் பெற்ற நடிகர், அதற்காக அவர் ஆரம்ப காலத்திலேருந்து வகுத்த இலக்கணங்கள் ரீல் லைஃப்க்கு மட்டுமில்லை, ரியல் லைஃப்க்கும் சேர்த்து தான். இதுல்ல ஒரு சோகம் என்னான்னா அவருடய இளமை காலங்கள் தான், அதாவது அவருடய பிறந்த தேதி குறித்து நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதாவது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலே இலங்கைக்கு பொழைக்க இடம் பெயர்ந்த தம்பதிகள் கோபால மேனன், மற்றும் சத்தியபாமா ஈன்றெடுத்த இரண்டாவது புத்திரன் தான் இந்த எம்ஜிஆர். அதாவது அந்த காலத்திலே அப்பா பேரை இனிஷியலா போடோற மாதிரி ஊரு பேரையும் போட்டுக்கிறது வழக்கம். அந்த காலத்திலே நிறைய பிரபலங்கள் பேரை பார்த்தாலே தெரியும், கரெக்டா ஊரு பேரு முன்னாடி நிக்கும்! உதாரணத்துக்கு, குன்னக்குடி வைத்தியநாதன், செம்மாங்குடி சீனிவாச அய்யர், லால்குடி சீனிவாசன், திண்டிவனம் ராமமூர்த்தி, அப்படின்னுட்டு போகும்! அந்த பழக்கம் ரொம்ப நாளாவே இருந்தது, அப்பறம் 60,70க்கு அப்பறம் இந்த ஊரு பேரை முன்னாடி போட்டுக்கிற பழக்கம் நம்மக்கிட்ட இருந்து போயிடுச்சு! இப்பயும் என்னோட ஒரு ஃபிரண்டு, டிஜி மோகன்னு, முதல்ல ஏதோ அவங்க அப்பா பேரு தான் இரண்டு எழுத்திலே வருதுன்னு நான் ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தா, அந்த முதல் எழுத்து 'டி'(T) குறிக்கிறது திருச்சியை! அப்படி எம்ஜிஆர் பேரு மருதூர் கோபல மேனன் ராமசந்திரன்! அவரு பொறந்தது இலங்கையிலே கண்டியிலே! முன்னாடி இருக்கிற ஊரு பேரு மருதூர்ங்கிறது கேரளாவிலே இருக்கிற ஊரு, அவருடய மூதாதையர்கள் வசித்தது, அந்த காலத்திலே!

ஆக அந்த காலத்திலே தேயிலை தோட்டத்திலே வேலைப் பார்க்க போனவங்க இவரு குடும்பம்! (எனக்கு இந்த இலைங்கைக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் சரித்திரம் கொஞ்ச தெரிஞ்சிக்க ஆசைப்படுகிறேன், அதுவும் தேயிலை, காப்பித்தோட்டங்களுக்கு! எங்காயவது இணையத்திலே எழுதி இருந்த சங்கதி இருந்தா, தெரிஞ்சவங்க சொல்லுங்க!) அதாவது அந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி இல்லாத நேரத்திலே பொறந்த இவரை வளர்க்க படாத பாடு பட்டுட்டாங்களாம்! அப்ப எல்லாம் குழந்தைங்க சரியா பொழைச்சு ஒரு பத்து வயசுவரை வந்தா உண்டு, இல்லை பொசுக்குன்னு ஆயுள் முடிஞ்சிடும். இதை நான் என்னோட வாழ்க்கையிலும் பார்த்திருக்கேன்! இந்த 50,60 கள்ல கூட குழந்தைகளை பேணி காப்பதுங்கிறது குதிரைக் கொம்பு தான். எங்க வீட்டிலேயே எனக்கு மூத்தவங்க இரண்டு பேரு தங்கலை, நான் தான் மூணாவது! அதனால என்னையை மத்தவங்களுக்கு தானம் கொடுத்து, அப்பறம் பிச்சையா கேட்டு வாங்கி வளர்த்தாங்கண்ணு சொல்வாங்க! அதுக்காகவே அந்த குழந்தைகளுக்கு மூக்கன், பிச்சை ன்னு பேரு வக்கிறது வழக்கம், ஆனா நம்ம பெரியம்மா வூட்டு அக்காமாருங்க கொஞ்சம் படிச்சவங்க, அதெல்லாம் வேணாமுன்னு கொஞ்சம் ஸ்டைலா நம்ம பேரை வச்சதா கேள்வி! இதை எதுக்கு சொல்றேன்னா எம்ஜிஆரோட உண்மையான வயது யாருக்கும் சரியா தெரியாது! அஃபிஷியல் ரெக்கார்டு எல்லாத்திலேயும் 1917ன்னு போட்டிருந்தாலும், அவரு ஒரு ஆறு ஏழு வருஷத்துக்கு முன்ன பொறந்தவருன்னு சொல்றாங்க!

எம்ஜிஆர் பொறந்த இரண்டு வருஷத்திலே அவரு அப்பா இறந்ததாலே, அவருடய விதவைத்தாயார், தன் மக்களை கூட்டிக்கிட்டு தமிழ்நாடு வந்து கும்போகோணத்திலே வந்து குடியேறினாங்க! அப்பறம் குழந்தை நடிகனா இருந்து படிப்படியா முன்னேறி, தன்னிகரில்லா நடிகர்னு ஒரு முப்பது ஆண்டுகள் தலைசிறந்த நடிகனா ஆட்சி புரிந்து, கடைசி பத்து வருஷம் தமிழக முதல்வரா இருந்து போய் சேர்ந்தாரு! ஆனா அவரு விட்டு போனது எத்தனையோ! கண்ணதாசன் அவருக்குன்னு எழுதனமாதிரி, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என் பேச்சிருக்கும்னு' இன்னைக்கும் அவரு பேரின் ம்ந்திரசக்தி எப்படிங்கிறதை சமீபத்தில திருப்பி ரீலீஸ் பண்ணின 'நாடோடி மன்னன்' படம் பதினாலு வாரங்கள் தொடர்ந்து ஓடினதே சாட்சி! அவ்ர் யானை மாதிரி, இருந்தாலும் ஆயிரம் பொண், இறந்தாலும் ஆயிரம் பொண், ஆயிரத்தில் ஒருவன்!

சரி உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!

அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு, அதுக்கப்பறம் மேஜையிலே பலம் யாரு காட்டறதுன்னு வைக்கும் ஸ்டெப்புகள், அப்பறம் கைநெகத்திலே கண்ணத்தை கிழிச்சு இரண்டு கட்டைவிரலை வச்சிக்கிட்டு சண்டை போட்டுக் காமிக்கும் லாவகமே தனி! அப்ப எல்லாம் இந்த மாதிரி புதுசா ஸ்டைலா சண்டை போட அவருக்கிட்ட புது ஆளுங்க வருவாங்க, அதிலே ஜஸ்டின் ஒருத்தரு, அப்பறம் மொட்டத்தலை ஷெட்டின்னு ஒரு நடிகர்! இதோ இப்ப இந்த இரண்டு கிளிப்பு, ஒன்னு மனோகரோட, இன்னொன்னு ஜஸ்டினோட! அப்பறம் எதிரியை அடிச்சி போட்டுட்டு ஓடறதுங்கிறது அவருடய வழக்கமே கிடையாது! அடிபட்டவன் திருந்தனும், அதுக்கு அடிச்சிட்டு அவனுக்கே தண்ணி எல்லாம் கொடுத்து சிகிச்சை பண்ணுவாரு!

அப்பறம் எதிரி பக்கம் நியாம் இருந்தா, அதுக்கு துணை போவாரு! இதிலேயும் அப்படிதான் அரைகுறையா ஆட சொல்லி வற்புறுத்தன ஜஸ்டினை அடிச்சிட்டு, அப்பறம் அவரு பக்கத்து நியாத்தை தெரிஞ்சு பணத்தை கொடுத்துட்டு சந்திரகலாவை மீட்டு காதலிப்பார்! இது மாதிரி ஆபத்துகள், ஆக்ஸிடண்டான கட்டங்கள்ல கதாநாயகியை காப்பாத்தி, கடைசியிலே அவங்களையே காதலிச்சி கல்யாணம் பண்ணி அவங்களுக்கு கலங்கம் எதும் வரமா பார்த்துக்கிற எம்ஜியார் ஃபார்முலாவை தான் கமலு தேவர் மகன்லேயும் செஞ்சு காமிச்சிருப்பாரு, ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிப்பற! ஆக இன்னைக்கு எந்த நடிகர்களா இருந்தாலும் சரி, அன்னைக்கு சில நல்ல வழி என்ற எம்ஜிஆர் போட்டு கொடுத்த ஃபார்முலாக்களை விட்டு அகன்றதே இல்லை!

அது மாதிரி காதல் கொள்வதில் அவருக்கு உண்டான பிரத்யோகமான ட்ரேட் மார்க்குகள் உண்டு! இந்த படத்திலே சந்திரகலாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கு ஆசீர்வாதம் வாங்குகிற காட்சிகள் அமைப்பு சமுதாயத்தின் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும்! இந்த படத்திலே கல்யாணம் முடிச்சு ஜேசுதாஸ் வாயஸ்ல ஒரு அருமையான பாட்டுக்கு ஹாங்காங் சுத்தி போட்ல ஆடிப்பாடி காட்சிகள், அப்பறம் இந்த வெளி நாடு போன அங்கே அப்ப அதியமா இருந்த டால்ஃபின் மீன் காட்சிகள், டிஸ்னிலேன்டு, எக்ஸ்போ 70, இது எல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி படம் புடிச்சு கொண்டு வந்தாங்க! இப்ப இந்த மாதிரி பொருட்காட்சி, தீம் பார்க்குல புடிச்சா அவ்வளவு சுவராசியம் இல்லை,ஏன்னா அந்த காலத்திலே ஜனங்க ஊரை விட்டு வெளியே போகலை, இது மாதிரி படக்காட்சிகளை 'பே'ன்னு விழிபிதுங்க பார்த்தாங்க, ஆனா இப்ப சும்மா நாலு கோடு எழுதப்போறேன்னு உலகத்தை சுத்தி வர்றவங்களுக்கு இதெல்லாம் ஒரு ஆச்சிரியமே இல்லை! முக்காவாசி பேரு பார்த்திருப்பாங்க! மேற்கொண்டு மக்கள் கையிலே காசு பொறள ஆரம்பிச்சிருச்சி, அவங்களே போய் பக்கத்திலே சிங்கப்பூரு, மலேசியா, ஹாங்காங்குன்னு பார்த்துட்டு இந்த அதிசியங்களை பார்த்துட்டு வந்துடறாங்க! அதனாலே தான் இப்ப வெளிநாட்டுல போயி படம் புடிச்ச நம்மூருல் இருக்கிற நெருக்கடியான ரோட்டை காமிக்கிற மாதிரி, 'நியூயார்க் நகரிலே'ன்னு தெருத்தெருவை காமிக்கிறாங்க!

அப்பறம் இன்னொன்னு நம்ம மக்கள் திலகத்துக்கு எப்பவுமே புதுசா புதுசா, இளசா ஹீரோயின்கள் வேணும்! நம்ம ஊரு பத்தலைன்னு, வெளியிலே தாய்லேந்துல படம் புடிக்க வந்து அந்தவூரு பொண்ணை போட்டு கனவு காண வச்சு ஒரு துள்ளலா பாட்டு ஒன்னயும் பாடவச்சி தூள் கிளப்பி இருப்பாரு நம்ம தலைவரு! கடைசியிலே அந்தம்மாவை தங்கச்சியாக்கிட்டு போயிடுவாரு! எம்ஜிஆருக்கிட்ட இருந்த ஒரே கெட்ட பழக்கம், அவரு படத்திலே வர நாயகிகளை தான் கனவு கான சொல்லுவாரு! அதுல ஜிகினா டிரெஸு போட்டுக்கிட்டு ஆடி மயக்கியிருப்பாரு! இந்த ஃபார்முலாவுக்கு ஒரு காரணம் இருக்கு, அடுத்த பதிவிலே சொல்றேன், இப்ப பாட்டை பாருங்க, என்னாமா ஆட்டம் போடும் அந்த பச்சைக்கிளி!

Monday, February 12, 2007

தூரத்தில் நான் கண்ட உன் முகம் - நிழல்கள் Podcast தொடர்ச்சி!

என்னுடய இணைய ஒலிபரப்பில் நிழல்கள் படத்திற்கு நான் அளித்த பாட்காஸ்ட்டின் தொடர்ச்சியாக ஒரு முக்கியமான பாடல், அந்த படத்தில் இடம் பெறாத ஒன்று, ஆனால் மனசை அப்படியே அள்ளியப் பாடல்! ஜானகி அம்மா பாடி அதுக்கு அவங்க நேஷனல் அவார்ட் வாங்கினாங்க, அதுவும் தமிழ்ல பாடினதுக்கில்ல, தெலுங்கிலே பாடினதுக்காக! அதை பற்றிய இந்த ஒலிப்பரப்பு நீங்கள் கேட்டு மகிழ இதோ இங்கே!



இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்னா படத்திலே இருந்திருக்கணும், அதாவாது வீணை கத்துக்கிறேன்னு போயி அதுக்குள்ள சாருஹாசன் செத்துப்போனன்ன, யாருக்காக ராஜசேகர் அடி வாங்கினாரோ,
அவரே இவருக்கிட்ட மயங்கி காதல் கொண்டு இந்த பாடலை பாடுவதா இருக்கும்! ஆனா இந்த பாடல் படத்திலே இடம் பெறலை! ஆனா படம் வந்த இரண்டு மூனு நாளுக்குள்ள நாங்க ஓடிப்போயி பார்த்ததாலே, அந்த காதல் சீக்குவன்ஸ் எல்லாம் படத்திலே இருந்தது, அப்பறம் படம் சரியா போகலைன்னு கட் பண்ணி தூக்கி எறிஞ்சிட்டாங்க, இருந்தாலும் இந்த பாட்டு நான் எப்ப கேட்டாலும் என்னை மறந்துடுவேன்! அதுவும் அந்த காலங்களில் இரவு நேரத்தில் தனியா டேப்பிலே இதைக் கேட்கிற சுகம் தனி, அதே மாதிரி ஜானியிலே வர 'காற்றில் எந்தன் தீபம்', இன்னைக்கும் அந்த சுகராத்திரிகளை நினைச்சு அசைப்போடுறதுண்டு!

தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

இப்பாடலின் தெலுங்கு கீதம் இதோ!

பச்சைக்கிளி முத்துச்சரம்-நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!

என்ன புதுசா கெளதம் எடுக்கிற படத்தலைப்பை வச்சு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு பார்க்கிறீங்களா! அதான் இது ரொம்ப நாளா எழுதுனும்னு நினைச்ச பதிவு, பல பாகங்கள்ல வரும்! அதாவது நான் சின்ன வயசிலே ரசிச்சு, ரசிகனா இருந்த எங்கள் தலைவர் எம்ஜியார் பத்தி இது வரை சொல்லவே இல்லியே, என்னோட அரிதாரத் தொடர்ல அப்படியே கொஞ்சம் தொட்டு வச்சேன், நான் அவரோட ரசிகர்னு, ஆனா அதிகமா எழுதலை அதான்! இந்த தலைப்பிலே வரும் பாடல், அப்ப ரொம்ப பாப்புலர், 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே நம்ம தலைவர் தாய்லாந்து நடிகையோட ஆடிப்பாடி வரும் கனவுப்பாடல்! இந்த படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்! இந்தப்படம் 70களின் தொடக்கத்திலே வந்த ஒன்னு, எனக்கு தெரிஞ்சு இந்த படம் அப்பே எவ்வளவோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு, என்ன பார்க்கிறீங்க, அப்ப எனக்கு தெரிஞ்சு இந்த படம் திருச்சி பேலஸ் தியோட்டர்ல வெளி வந்து, அந்த தியேட்டர்ல வேலை செஞ்ச, எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு, இந்த படம் ஓடின அத்தனை நாடகளிலேயும் ப்ளாக்ல டிக்கட்டு வித்தே தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்த கதை உண்டு! அப்படி பல சாதனைகளை முறியடிச்ச படம்.


இந்த படம் வந்தப்ப தான் எம்ஜியார் அரசியல்ல சூடுபிடிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்! இந்த படம் வந்தா நம்ம கட்சி அம்பேல்ன்னு பயத்து நடுங்கின கலைஞரு இந்த படத்தோட நெகடிவ்களை லேபிலேயே கிழிச்சு போட்டு படம் வெளிவரவிடாம தடுக்க பார்க்கிறாருன்னு அப்போ ஒரு வதந்தியே சுத்தி வந்தது. அதைக்கூட நம்ம மணி இருவர் படத்திலே அப்படி இப்படின்னு காமிச்சு கடைசியிலே, ஒரு நடிகனோட புது படம் வெளியாவதை பாத்து பயப்படும் நிலமையிலே நம்ம கட்சியில்லேன்னு சொல்ற மாதிரி ஒரு டைலாக் வச்சு, கலைஞரை நல்லவரா காட்டி இருப்பாரு, ஏன்னா இருவர் படம் வந்தப்ப திமுக ஆட்சியிலே இருந்த நேரம்! ஆனா இது வதந்தியா, இல்லை உண்மையான்னு எனக்கு தெரியாது, ஆனா 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வர்றதுக்கு முன்னே நல்லொதொரு பப்ளிசிட்டி, இதுகூட எம்ஜியாரின் மார்க்கெட்டிங் சாதுர்யம் தான்!

இந்த மாதிரி அந்த காலத்திலே, சின்ன வயசிலே என்னை அறியாமலே அவர் பால் ஈர்க்கப்பட்டு ரசிகனா இருந்தேன், ஆனா இப்ப அவருடய படங்களை திருப்பி பார்க்கும்போது, அதுக்கு நிஜமாவே நல்ல காரணங்கள் இருந்ததா எனக்குப்படுது! அது எப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு, வழக்கம்போல வீடியோ கிளிப்புகளோட! இப்ப சமீபத்திலே இந்த படம் பார்த்தப்ப ஒரு ஸ்ட்ரைக்கு!

அப்ப எல்லாம் தியோட்டர்கள் படம் பாக்க போன, ஒரு ஆம்பியன்ஸ்(ambience) இருக்கும் பாருங்க, அது என்னமோ இப்ப வீடியோவிலே வீட்டுக்கூடத்திலே பார்க்கிறப்ப கிடைக்காத ஒன்னு, ஏன் மல்டிபிளக்ஸ்ன்னு, பாப்கார்ன்னு, கோக்ன்னு எடுத்துட்டு போய் சீட்டிலே மாட்டிக்கிட்டு என்னமோ சொகுசா படம் பார்த்தாலும் அந்த காலத்துல தியோட்டர்ல படம் பார்த்த சொகுசே தனி தான்! அதாவது ஆறரை மணி ஷோவுக்கு நாலுக்கே போய் க்யூவிலே நின்னு(இந்த க்யூங்கிறது, கதவை திறந்தப்பறம் தான், அதுக்கு முன்னே நீங்க பலசாலியா இருந்து, டிக்கெட்டு சந்துக்குள்ள போகனும், கொஞ்சம் நோஞ்சான்னாலும், நீங்க எம்ஜியார் படம் பார்க்க அட்லீஸ்ட் ஒரு 50 நாளு வெயிட் பண்ணனும், எம்ஜியார் ஸ்டண்ட் மாதிரி தலை மேலே எல்லாம் நடக்க பழகி இருக்கனும்) , அடிதடின்னு கதவை திறந்து டிக்கெட் வாங்க, ஒரு ஆளு போற மாதிரி இருக்கும் சந்துலே போயி, அப்பறம் டிக்கெட் கவுண்டருக்கு வந்து மஞ்சளோ, பச்சையோ, ரோஸ் கலரா ஒரு டிக்கெட்டை கிழிச்சி வாங்கி, தியோட்டர்குள்ள போயி பின்னாடி சீட்டு புடிக்க ஓடி, தூணுகீணு மறைக்காத இடத்திலே உட்கார்ந்து ஆரம்ப நியூஸ் ரீலு, இல்லை இல்லை, அந்த விளம்பர சிலேடுங்கள்லருந்து பார்த்தாதான் திருப்தி, அதுவும் சரியா பேலஸ் தியேட்டர்ல, படம் போடறதுக்கு முன்னே 'திரைப்படம் ஓடும் பொழுது லாகிரிவஸ்துகள் எதுவும் உபயோகிக்க கூடாது'ன்னு ஒரு சிலைடு போட்டப்பறம் தான் படமே, நாங்க அங்க, இங்கே வெளியே நின்னுகிட்டு இருந்தாலும், அந்த சிலைடை பார்த்தோன்ன, டேய் படம் போடப்போறாண்டான்னு அடிச்சு புடிச்சு போய் உட்கார்ந்து பார்த்த காலம் இருக்கே அது பொற்காலம்! ச்சே..இப்பயும் சத்தம் போடமா, அலுங்காம குலுங்காம இந்த மல்டிபிளக்ஸ்ல போயி படம் பார்க்கறதிலே எந்த சுவாரசியமும் இல்லை போங்க! அதே மாதிரி சினிமா கொட்டகையில் விற்கும் கள்ளமிட்டாய், தேங்கா பர்ஃபி, முறுக்கு எல்லாம் நம்ம உட்கார்ந்த இடத்துக்கு கொண்டாந்து வித்து, அதை வாங்கி சாப்பிடும் இன்பமே தனி தான்! இதெல்லாம் இல்லாத ஒர் ஆம்பியன்ஸ்ல பார்த்த எம்ஜியார் படம் படமேயில்லை!

அப்பறம் படம் ஆரம்பிக்கிறப்ப போடற லோகோ இருக்கே, அதுக்கு பிகிலு தூள் பறக்கும் பாருங்க, எம்ஜியாரே நேரில வந்த மாதிரி! இந்த லோகோவை வச்சு அந்த காலத்திலே கரெக்டா இது இன்னார் கம்பெனின்னு கரெக்டா கண்டுபிடிச்சிடுவோம்! அதாவது எவிஎம், ஜெமினி, சுஜாதா புரெடெக்ஷன்ஸ், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்!அது மாதிரி எம்ஜியார் பிக்ஸசர்ஸ் லோகோ காலத்தின் கட்டாயத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை இந்த வீடியோ கிளிப்புல நீங்க பார்க்கலாம், முதல்ல அந்த உதயசூரியன் பேக்ட்ராப்ல வர்றது அப்படியே மாறி இருக்கும்!அதாவது எம்ஜியார் சொந்தமா எடுத்த படங்கள் மொத்தமே மூணு தான், 'நாடோடி மன்னன்', 'அடிமைப்பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்'. ஆனா இந்த மூணுமே வந்தது வெவ்வேற காலகட்டங்கள்ல, அதான் இந்த லோகோவிலே ஒரு ஆணும் பெண்ணும் கொடியை பிடிச்சிக்கிட்டு இருப்பாங்க, முந்தய இரண்டு படங்களையும் திமுக கொடி பறக்கும், மூணாவதா வந்த 'உலகம் சுற்றும் வாலிபன்'ல அதிமுக கொடியிலே அண்ணா படத்தோட பறக்கும்! அதாவது அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தியதை லோகாவிலேயே கண்டுணரலாம்!

அப்பறம் வழக்கமா சீர்காழி கோவிந்தராஜன் பாட்டோட, 'வெற்றியை நாளை சரித்திரம் வெல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்'ன்னு டைட்டில் கார்டு ஆரம்பிக்கும் பாருங்க! பாட்டை கேட்கிறப்பவே நமக்கு ஒரு வேகம் பிறக்கும்! அது எம்ஜியாருக்கு மட்டுமே பிரத்தியோகமான ஒன்னு! இந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே அந்த காலத்திலேயே விஞ்ஞானம், மின்னல் சக்தி, ஜப்பான்ல இருக்கிற 'க்யோட்டோ' என்ற இடம் அப்படின்னு போகும்! (இந்த க்யோட்டாங்கிற இடத்தை பத்தின விஷயம் என்னான்னு உங்களுக்கு ஒரு க்விஸ், கரெக்டா பின்னோட்டத்திலே எழுதுங்க பார்க்கலாம்!) அதுவும் நாட்டின் தலைவர்களின் போட்டேவோட, விஞ்ஞானத்தை கையிலே எடுத்து அது அழிவுப் பாதைக்கு உபயோகப் படுத்தக் கூடாது, ஆக்கப் பணிகளுக்கு தான் உபயோகப் படுத்தனும்னு உபதேசத்தோட படம் ஆரம்பமாகும்! அப்பறம் எம்ஜியார் ஒரு விஞ்ஞானி(அவரு மட்டுமில்லை, அசோகன் , அப்பறம் மத்த விஞ்ஞானிங்க எல்லாம் ஒர் ஸ்ட்ரேஞ்சா தாடி வச்சிருப்பாங்க, நம்ம துபாய் ஷேக்குங்க மாதிரி, பார்க்க தமாஷா இருக்கும், விஞ்ஞானிக்கு எவ்வளவு சிம்பளா கெட்டப்பு பாருங்க, இப்ப கெட்டப்ப மாத்திக்கவே ரொம்ப கஷ்டபடறாங்க சில நடிகர்கள்!)

மின்னலின் சக்தியை ஒரு தோட்டக்குள்ள அடக்கி வச்சி, அந்த சக்தியை எப்படி கட்டுபடுத்திட்டேன்னு சுட்டு காமிச்சு காடுகளை எரிச்சு காமிடி பண்ணி இருப்பாரு! முதல்ல காமடியா தான் தெரிஞ்சுது, அப்பறம் சீரியசா இணையத்திலே தேடினா, ஆமா அப்படி ஒரு முயற்சி செஞ்சிருக்காங்கன்னும், அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லைன்னும் தெரியவருது! ஆனா அந்த இடி, மின்னல்லருந்து வரும் மின்சாரத்தின் அளவை கையாள நமக்கு எவ்வளவு பெரிய மின்தடை(Insulation) வேணும் தெரியுமா? சொன்னா ஆச்சிரியப்படுவீங்க , இப்ப இருக்கும் பீங்கான் போன்ற பொருட்களின் தடிமன் ஏழு கிமீ இருந்தா தான் அதை கையாள முடியும், 'Insulation'ஐ விடுங்க, அதை கையாள தேவையான மின்கடத்துவான்(Conductor), அதை விட அதிகம். ஆனா படத்திலே எம்ஜியார் சொல்லுவாரு ஒரு சின்ன சதவீதத்தை தான் சேமிச்சேன், அதுக்கே என்ன பலம் பாருங்கன்னு, லதாவை வுட்டு சுட்டு காமிப்பாரு! இதோ வீடியோ கிளிப்பு பாருங்க! ஆனா இந்த மின்னல்லிருந்து சேமிக்கும் சக்தி பத்தி படிக்கனும்னா இதோ சுட்டி!

அப்புறம் அண்ணன் எம்ஜியார் விஞ்ஞானி, தம்பி துப்பறியும் போலீஸ் அதிகாரி, இதுல எம்ஜியாருக்கு மூணு ஜோடி, மஞ்சுளா, லதா, சந்திரகலா! இளமையா எல்லா பாடல்களுக்கும் துள்ளலோட நம்ம எம்எஸ்வி ம்யூசிக் போட்டிருப்பார்! அந்த காலத்திலே முழுக்க முழுக்க வெளி நாடு போய் படம் புடிச்சிட்டு வந்தாங்க! எம்ஜியாரு சுத்தினது என்னவோ சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான்னு தான், ஆனா அதையே உலகத்தை சுத்தி வந்த வாலிபன்னு காமிச்சாரு, மக்களும் அப்ப இவ்வளவு தான் உலகம்னு நினைச்சு, அது எல்லாத்திலேயும் போயி சுத்திட்டு வந்து படமெடுத்திருக்காருன்னு நம்பினாங்க!

முதல்ல அண்ணன் எம்ஜியாருக்கு மஞ்சுளா ஃபியான்ஸி, அவங்களை கூட்டிக்கிட்டு முதல்ல நம்ம தலைவர் போற இடம் ஹாங்காங்!அதாவது இந்த பாட்ல வர்ற கிளிப்பு பாருங்க, விக்டோரியா பீக்லருந்து ட்ராம்ல வர்ற மாதிரி! இதை நான் 92ல முதமுதல்ல போயி ஏறி பார்த்தப்ப நிஜமாலுமே இந்த படம் ஞாபகம் தான் வந்துச்சு, இங்கேருந்து சுத்துபட்டு கிராமம் எல்லாம் தெரியுதுன்னு சொல்றமாதிரி எல்லா தீவுகளும் தெரியும்! அது மாதிரி 'கோவலூன்' சொல்ற தீபகற்ப பூமி நல்லா தெரியும்! அப்படி ட்ராம்ல ஏறி மஞ்சுளா ஆன்ட்டியோட ஹனிமூன் ட்ரிப்பு போற மாதிரி போயி, அப்பறம் இந்த பக்கம் ஹிமாச்சல் வந்து 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்'ன்னு கொண்டாட்டம் போட்டா நமக்கு அப்படி கொண்டாட்டம் போடனும்னு தோணுமா தோணாதா?


இந்த படம் தான் பின்னாடி எல்லாரும் வெளிநாடு போய் படம் புடிக்க பாலபாடம் சொல்லி கொடுத்தது!நம்ம எம்ஜியாரு ஸ்டைல்ல தான் அப்புறம் போன ரஜினியும் செஞ்சாரு! அதுமட்டுமில்லை எல்லா பாடல் காட்சிகளும், படமாக்கப்பட்ட விதமும் மனசை அப்படியே அள்ளூம்! மூணு கதாநாயகி, எல்லாமே காதல் பாடல்கள்னு போய்ட்டா கொள்கைப்பாடல்களுக்கு என்ன பண்றது, அதுக்குத்தான் 'சிரித்து வாழவேண்டும்' பாட்டு! இன்னும் இதை பத்தி நிறைய சொல்ல வேண்டியிருக்கு! எழுதுனா பதிவு நீளமாயிடும், அடுத்த பதிவுல, அவரு போட்ட சண்டை காட்சி, அப்பறம் எம்ஜியார் பண்ணின ரொமான்ஸ் எல்லாம் விலாவாரியா, இப்ப வர்றட்டா?

Friday, February 02, 2007

மரத்துக்கு தாலி கட்டிய ஐஸ்வர்யா!

அந்த பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு, எப்படி கட்றது? அந்த பையனுக்கு மூலம், அது தெரியாம கண்ணாலம் கட்டி இப்ப அப்பனை தூக்கிடுச்சு! இப்படி புலம்பும் மக்களை நிறைய பார்த்திருப்பீங்க! அது மாதிரி ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வா தோஷம் இருக்குன்னு மரத்து தாலி கட்டின கதை தெரியுமா உங்களுக்கு! அப்படி மரத்துக்கு தாலி கட்டினதை எதிர்த்து அவரு மேலே கேஸு போட்டு கோர்ட்டுக்கு இழுத்தடிக்கும் காம்டி காட்சி இப்ப நடந்தேறியிருக்கு!

நம்ம கனவு கன்னி ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே இரண்டு பேரை காதலிச்சு, அம்போன்னு வுட்டுட்டு மூணாவதா அமிதா பச்சன் மகன் அபிஷேக் பச்சனை அமுக்கி இப்ப கல்யாணம் வரை வந்தாச்சு, ஆனாலும் ஒரு சிக்கல் என்னான்னா, அம்மாவுக்கு செவ்வா தோஷமா, அதை போக்கணும்னா, அவங்க முதல்ல வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அபிஷேக்கை கல்யாணம் பண்ணின அந்த தோஷம் போயிடுமா, அதனாலே தான் சமீபத்திலே, வாராணாசியிலே போய் அரச மரத்துக்கு தாலி கட்டி தோஷம் கழிச்சிட்டு அப்பறமா பெங்களூர் வந்து வாழை மரத்து தாலி கட்டி தோஷம் கழிச்சாங்களாம்!

பீகார் மாநிலத்திலே இருக்கும் 'ஸ்ருதி சிங்'னு ஒரு அம்மணி ஐஸ் மேலேயும் அமிதாப் மேலேயும் ஒரு பொது வழக்கு ஒன்னு போட்டு வச்சிருக்காம், அதாவது ஐஸ்வர்யாக்கு எல்லா ஐஸ்வர்யமும் இருந்தும் செவ்வா கிரகத்து அனுகூலம் ஜாஸ்தி இருக்கிறதாலே அது அவங்களை கட்டிக்கப் போற புருஷனுக்கு ஆகாதுன்னும், இது மாதிரி தோஷம் நீங்கணும்னா, மரத்தையோ இல்லை சாமி சிலையையோ, இல்லை எதாவது ஒரு மிருகத்தையோ முதல்ல கல்யாணம் பண்ணி, அப்பறமா தான் கட்ட போற ஆடவன் கைபிடிச்சா அந்த தோஷம் எல்லாம் நீங்குங்கிற ஐதீகம் வடக்குல அதுவும் இந்த பீகார், உபி மாகாணத்திலே ரொம்பவே பார்த்து செய்வாங்களாம்! ஏன் நம்ம ஊர்லேயும் இது உண்டு என்னா, எனக்கு தெரிஞ்சு 48 வெள்ளிக்கிழமை செவ்வா புள்ளையாரு கோவிலுக்கு விளக்கு போடு , எல்லாம் சரியாயிடுங்கிற கதை வரைக்கும் தான் கேட்டிருக்கேன், இந்த அரசமரம், வாழை மர சங்கதி பாரதிராஜா பட ஐதீக சங்கதி மாதிரி இருக்கு!

இதுக்கு தான் அமிதாப் குடும்பம் சகிதமா காசி போயி இருந்திருக்காங்க, மொத்திலே தோஷம் கழிக்க! அந்த கேஸ் போட்ட அம்முணி என்னா சொல்லிருக்குன்னா, இது தீண்டாமையை உருவாக்குது! அப்பறம் மக்களிடையே இந்த மூட நம்பிக்கை மேற்கொண்டு வழுப்பெற, இந்த மாதிரி புகழ் பெற்ற நட்சத்திரங்களே முன்மாதிரியா இருக்கக்கூடாதுன்னு சொல்லியும், அப்பறம் பீகார்ல பாட்னாவிலே இருக்கக்கூடிய ஷிட்லா கோயில், ஃபாட்வாங்கிற ஊர்ல இருக்கிற பைகதிபூர் கோவில் பிறகு தியோகர்ங்கிற ஊர்ல இருக்கிற சிவா கோவில், இங்கெல்லாம் இந்த செவ்வா தோஷ கல்யாணம் நடத்துறதை தடை செய்யனும்னு இந்த அம்முணி கேஸ் போட்டிருக்கு!

அது சரி இப்ப நம்ம ஊர்ங்கள்ல இந்த செவ்வா தோஷக் கதை எப்படி இருக்கு? நான் ஊரை விட்டு வந்து ஒரு முப்பது வருஷமாச்சு, இது மாதிரி செவ்வா தோஷத்தாலே கன்னி கழியாம பொண்ணுங்க இன்னும் அவஸ்தை படறாங்களான்னு கொஞ்சம் நம்ம ஊர்ல இருக்கவங்க சொல்லுங்க! அதுவும் இந்த கம்ப்யூட்டர் யுகத்திலே இது எல்லாம் தேவையான்னு தோணுது, இருந்தாலும் ஜோதிடத்திலே நம்பிக்கை வைக்கும் வலைப்பதிவர்கள் நம்ம கிட்ட அதிகம், ஏற்கனவே எனக்கு புது கிரகம் புடிச்சப்பவே வந்து கலாச்சுட்டு போனவங்க இருக்காங்க, இந்த விஷயத்தையும் கொஞ்சம் பீராஞ்சி தான் சொல்லுங்களேன் எப்படின்னு!

Friday, January 26, 2007

நிழல்கள்-PodCasting - இணையத்தில் ஒலிப்பரப்பு!

இப்ப தான் போன பதிவுல நிழல்கள் படத்தை பத்தி பதிவு போட்டிருந்தேன், அது எழுத்து, ஆனா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து உலவியை தட்டி பக்க பதிவுகளை படிக்க சோம்பேறியா இருக்கிறவங்களுக்கு இப்ப இணையத்திலே ஒரு வசதி இருக்கு, அதாவது படிச்சு தெரிஞ்சிக்கிறதை, அறிஞ்சிக்கிறதை கேட்டு தெரிஞ்சுக்கிலாம்! அதுவும் நம்ம வசதியை போல நின்னுக்கிட்டோ, ஓடிக்கிட்டோ, படுத்துக்கிட்டோ, இல்லை என்னமாது காரியம் பண்ணிக்கிட்டே நீங்க கேட்டு மகிழலாம். அதுக்கு பேரு தான் 'Podcasting'!

ஒரு காலத்திலே கேளிக்கைன்னு நமக்கு இருந்தது இந்த ரேடியோ தான். சினிமான்னு கொட்டைகைக்கு போய் பார்த்துட்டு வந்தாலும் அதை திருப்பி பார்க்கணும்னா திரும்ப கொட்டாய்க்கு தான் போயாகனும், அப்ப டிவி ஏதும் வராத நேரம், அப்ப இந்த ரேடியோ தான் ஒரு பெரிய பொழுது போக்கு சாதனம், ஏன் இன்னைக்கும் அதுவே சிறந்த பொழுது போக்கு சாதனம் நம்ம கிராமங்கள்ல! நீங்க அப்படி பெரிய டவுண்லருந்து சின்ன சின்ன கிராம ஊருகளுக்கு போனா இப்பவும் மக்கள் டிரான்ஸிஸ்டரை கையிலே வச்சுக்கிட்டு பாட்டை கேட்டு மகிழுவாங்க! அப்பறம் நகரங்கள்ல டிவி வந்து அவங்க எப்ப எப்ப பார்த்த படங்களை போட்டா ஆசையா பொட்டி முன்னே உட்கார்ந்து பார்ப்போம்! பிறகு அதுவே இணைய தொழில்நுட்பம் வளர்ந்தோன்ன, இப்ப பார்க்கிறதுக்கு, கேட்டு மகிழறதுக்கு நிறைய வீடியோ கிளிப்புகள் இருக்கு! ஆனா அந்த காலங்கள்ல ரேடியோவிலே கேட்டு ரசிச்ச பாடல்கள் மாதிரி வராது, ஏன் இலங்கை வானொலி நிலையம் நம்ம காதுகள்ல ரீங்காரமிட்டதை இன்னைக்கும் மறக்க முடியுமா, பாடல்களை விட அதை அழகா ஒலிபரப்பும் ஒலிபரப்பாளர்கள், அப்துல் ஹமீது போன்றோரை மறக்க முடியுமா?

ஆக அந்த மாதிரி பழைய ரேடியோ கேட்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா நம்மகிட்ட இருந்து போனாலும் அது திரும்ப வந்து சேர்ந்துடுச்சு, அதான் எல்லாமே சில காலகட்டங்கள் நம்மகிட்ட தங்கும், அப்பறம் மறையும், திரும்ப வந்துடும்! இந்த பெல்பாட்டம் பேண்ட்டு பிறகு பேகியா வந்த மாதிரி! இந்த 'IPOD' வந்ததுக்கு அப்பறம் நம்ம ம்யூசிக் கேட்கிற தன்மையும் மாறிடுச்சு, அதான் எங்க போனாலும் காதுல மாட்டிக்கிட்டு பிடிச்ச பாட்டை கேட்டுகிட்டு காலம் கழிக்கிறோம், அது மாதிரி பாடல்கள்னு இல்லாம, கேட்டு மகிழ எவ்வளவோ விஷயங்கள், ஏன் கதை புத்தகங்களே ஒலி வடிவில் வந்து அதை இணையத்திலேருந்து தரவிறக்கம் செஞ்சு அப்பறம் வேணுங்கிறப்ப நம்ம வசதிக்கு ஏற்ப கேட்கும் ஒரு செளகரியம் சுகம் தான்!

அப்படி வந்த ஒரு வசதியிலே நான் சிலாகிச்சு ரசிச்ச நிழல்கள் படத்தை பத்தி ஒலி வடிவிலே சொல்லி இருக்கிறேன், அதோட இணைப்பு இதோ, Nizhalgal-'Raja's' Excellent work during 80's அதை இங்கேயே கேட்டு மகிழனும்னா இதோ!


இதை அப்படியே தறவிறக்கம் செஞ்சு பிறகு உங்க Ipodலேயோ இல்லை mp3 ப்ளேயர்லயோ கேட்கணும்னா, இதோ தொடுப்பு!

கேட்டு பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்களேன், இங்கே சொன்னாலும் சரி இல்லை PodBazzarலே சொன்னாலும் சரி! வர்றட்டா!

Tuesday, January 23, 2007

நிழல்கள்- 'ராஜா'க்கள் படைத்த அற்புதம்!

நிழல்கள், இது என் வாழ்க்கையிலே மறக்க முடியாத படம், இந்த படத்தை பத்தி நாள் கணக்கா பேசிக்கிட்டு இருந்திருக்கோம் அப்ப, இது என்னோட இஞ்சினிரியங் காலேஜ் மூணாவது வருஷம் படிச்சப்ப அப்ப தீபாவளிக்கு ரிலீஸ் ஆச்சு, அப்ப பாரதிராஜா மேலே ஒரு கிறுக்கா இருந்த நேரம், ஏன்னா முத அஞ்சாறு படங்கள்ல அவரு செஞ்சு காமிச்ச வித்தைகள்ல மயங்கி போய் அவரு படம்னா முத நாள் தியேட்டர்ல போய் உட்கார்ந்துடுவேன்! அப்ப தான் பாலசந்தோரோட வறுமையின் நிறம் சிகப்பும் வந்தது, இரண்டுமே வேலையில்லா திண்டாட்டத்தை கருவா வச்சு வந்தது தான் ஆனா வ.நி.சி ஜனங்களுக்கு இந்த படத்தை விட பிடிச்சிருந்திச்சு, காரணம் ஏன்னா அதிலே கொஞ்சம் எல்லாருக்கும் தெரிஞ்ச கமல், ஸ்ரீதேவி நடிச்சிருந்தது தான், எஸ் வி சேகர், திலீப்புன்னு புதுசா ஆள போட்டு எடுத்திருந்தாலும் தெரிஞ்ச முகங்கங்கள்ங்கிறதாலே தியேட்டர்ங்கள்ல கூட்டம் அலை மோதிச்சு, ஆனா நிழல்கள் அவ்வளவா போகல்ல! ஆனா பாட்டுகள் எல்லாம் மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, இதிலே தான் வைரமுத்து அறிமுகம்! 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாட்டை இப்பையும் கேட்டா, உண்மையிலே கஞ்சா அடிச்சிட்டு எல்லாத்தை மறந்திட்டு வேற உலகத்தை நினைச்சு மருகிறவன் மாதிரி தான் உங்களுக்கு தோணும், அது வைரமுத்தோட வரிகளுக்கும் இளையராஜாவோட ம்யூசிக் கம்போசிசனுக்கும் கிடைச்ச வெற்றி! ஆனா பார்த்தீங்கன்னா இந்த படம் டெக்னிக்கல்லா ஒரு பிரில்லியெண்ட்! இந்த படத்தை சென்னைத் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு படம் எடுக்கறதுன்னா எப்படி எடுக்கணும்னு அத்தனை டிப்பார்ட்மெண்ட்லேயும் போட்டு காமிப்பாங்கன்னு என்னோட ஃபிரண்டு சொல்ல கேட்டுருக்கேன்! நம்ம ஃபிரண்டு படிச்ச நேரத்திலே தான் சுஹாசினியும் படிச்சாங்க, அந்த காலகட்டத்திலே அளப்பரை பண்ணிக்கிட்ட திரிஞ்ச அம்மணி அவங்க! அதை பத்தி வேறெ ஒரு வாட்டி அப்பறமா எழுதுறேன்! இந்த படத்தை அக்குவேறே ஆறு வேறே அலசி ஆராஞ்சி திரும்ப திரும்ப பார்த்து சிலாகிச்சிருக்கோம்!

முதல்ல அந்த டைட்டில் சீக்குவன்ஸ், அதாவது இளம் பட்டதாரிகள் பட்டம் வாங்கிட்டு அப்படியே கிராஜிவேஷன் சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு கடற்கரையிலே ஒடறமாதிரி காட்சி வரும், அதுக்கு நம்ம ராஜா பேக்ரவுண்டு ம்யூசிக் பட்டையை கிளப்பும், அப்ப ராஜா பாரதிராஜா படத்துக்குன்னா துள்ளலோட ம்யூசிக் போட்ட நேரம், வெறும் பாட்டுகள் தான் அதிகமா வெகுஜனங்களுக்கு பிடிச்சி தெரிஞ்சிருக்கும் ஆனா இந்த பேக்ரவுண்ட் ம்யூசிக் யாராவது இப்படிதான்னு சொல்லிக்கேட்டா உங்களுக்கு திருப்பிக் கேட்கப் பிடிக்கும்!ஆரம்பத்திலே 'Congratulations' ன்னு சொல்லிட்டு அப்பறம் வர மெலோடியஸான ஹம்மிங், அதுக்கப்பறம் வர சின்ன கிடார் லூப்பு, அப்பறமா ஒரு வயலினோட சேர்ந்த 'haunting flute bit', பிறகு ஒரு 'freewheeling fast beat', அதை அப்படியே கட் பண்ணிட்டு பிச்சைக்காரர்கள், 'அம்மா பிச்சை போடுங்கம்மான்னு' ஒரு அழுகையோட கூடிய சப்தம், அப்பறம் திருப்பி கொண்டாட்டம் அமர்க்களம்னு திரும்பும் காட்சிகள் அப்படின்னு வாழ்க்கையிலே தான் எத்தனை நிழல்கள் (shades) இருக்குங்கிறதை காமிச்சிட்டு கடைசியிலே ஒரு நையாண்டி தாளத்தோட 'We want job, we want job' ன்னு வர்ற அந்த கோரஸ், பாரதிராஜாவும் இளையராஜாவும் கலக்கி இருப்பாங்க! வேணும்னா அந்த விஷுவல்ஸை பாருங்க!

அடுத்த கிளிப்லே இளைஞர்களுக்கே உண்டான வீம்பு, எதையும் வளைஞ்சு கொடுத்து வாழ்க்கையிலே முன்னேறமா, பஞ்சமா, பட்டினியா போறது, வேலை வெட்டி இல்லாம ஒரு கிளாஸ் டீ தண்ணிக்கு வழி இல்லாம கடஞ்சொல்லி காலம் கழிக்கிறதை அழகா சின்ன சீக்வுன்ஸ்ல எடுத்திருப்பாரு! இந்த கிளிப்பிலே பாரதிராஜாவும் வந்து நடிச்சிட்டு போயிருப்பாரு! இதிலே இன்னொரு கலக்கலான பேக்ரெவுண்டு ம்யூசிக் என்னான்னா, நிழல்கள் ரவி கைத்தட்டி டீக்கடைக்காரனை கூப்பிடறதை தப்பா நம்மலை தான் டாவு வுடறான்னு காமிக்கும் அந்த காட்சியின் பிண்ணனி, சும்மா சொல்லக்கூடாது இளையராஜ பின்னியிருப்பாரு, பாருங்களேன்!

அடுத்து நம்ம ராஜசேகர், கஞ்சா அடிச்சிட்டு அவரோட உலகமே தனின்னு இருக்கிற ஆளு! இது மாதிரி எனக்கொரு ஃபிரண்ட் இருந்தான், அவன் அப்படியே டிட்டோ, அவன் பேசறதுக்கும், அவன் இருக்கிற ஆள் நிலமையை பார்க்கிறதுக்கும் சம்பந்தமே இருக்காது, இது மாதிரி கவித்துமா எதாவது சொல்லிக்கிட்டு அலைவான், ஆனா ராத்திரி எட்டு மணிக்கு மேலே பொட்டணத்தை சுருட்டிட்டார்னா, அதுக்கப்பறம் அவரு உலகமே தனி, ஆனா அப்பேர்பட்ட ஆளு இன்னைக்கு எங்கருக்கிறான்னு கேட்டா ஆச்சிரியப்படுவீங்க, இப்போ 'Intel' கம்பெனியில்ல டைரக்டர், இங்க தான் அமெரிக்காவிலே குப்பை கொட்டிக்கிட்டிருக்கான்! சரி இந்த 'பொன்மாலைப்பொழுது' வைரமுத்தோட வைரம்! அப்ப எங்க காலேஜ் சர்க்கிள்ல 'மு மேத்தா' இருந்த அளவுக்கு வைரமுத்து அவ்வளவு பிரபலமில்லை, ஆனா இந்த ஒரே பாட்டு அவரு அடுத்த நாளே எங்கேயோ கொண்டி உட்கார வச்சிடுச்சு! பாரதிராஜா, இளையராஜாவின் அற்புத கண்டுபிடிப்பு தமிழ் திரை உலகத்துக்கு, அப்பறம் உன் சத்ததாலே என் சிந்து போச்சுன்னும், உன் சிந்தாலே என் சந்தம் போச்சுன்னும் சண்டை போட்டுக்கிட்டாங்க! ஆனா இரண்டு பேரும் சேர்ந்து போட்ட பல பாடல்கள், அதுவும் கிராமிய மணம் கமழும் பாடல்கள் இன்னைக்கும் நீங்க கேடுக்கிட்டே இருக்கலாம். இந்த ஜோடி பிரிஞ்சதாலே நமக்கு தான் பெரிய இழப்பு!

அடுத்த ஒரு கிளிப்பு ராஜசேகர் கேரெக்டரை சித்தரிச்சிருக்கும் விதம், அப்பறம் அவருக்கும் ரோகிணிக்கும் ஏற்படும் ஒரு சிநேகிதம், அழகா கவிதை மாதிரி சொல்லி இருப்பாங்க! ஜென்ரலா இந்த மாதிரி கேரெக்டர் எப்பவுமே ஒரு அலாதி தான், இது மாதிரி ஆழமா நல்ல சிந்தனைகள் இருக்கும், ஆனா அதை வெளியிலே சொல்லும் போது அதுக்கு தகுந்த வரவேற்பு இருக்காது, அதனாலே மனசு ஒடிஞ்சு போவாங்க! அந்த சிந்தனை மற்றும் எண்ணங்களை யாரும் உற்சாகபடுத்தாத போது நொடிஞ்சிடுவாங்க! அப்ப தன்னை பாராட்டி நெருங்கி வர்றவங்கள்ட்ட நட்பு பாராட்டி அதை வேறே பல ரூபத்திலே உறவாக்கிக்க ஆசைப்படுவாங்க, இது போன்ற உணர்வுகளோட போராடி அதற்கிடையிலே ஏற்படும் சிக்கல்கள் நிறைய மலையாளப் படங்கள்ல நல்லா சொல்லி வந்திருக்கும், ஆனா இதுலே வேறெ மாதிரி சிந்திக்கிறவனை, பெண் சிநேகத்தை காதல்னு பட்டுன்னு எடுத்துக்கிற சராசரி மனிதனா ராஜசேகர் கேரெக்டரை சித்தரிச்சது கொஞ்சம் வலுக்கல்! ஆனா இதிலே நம்ம இளையராஜா பிண்ணனியிலே பட்டையை கிளப்பி இருப்பாரு! பாருங்களேன்!


அடுத்து நிழல்கள் ரவிக்கும் ரோகிணிக்கும் ஏற்படும் காதல், எவ்வளவோ படங்கள்ல பாரதிராஜா காதல் பிறக்கும் விதம் பத்தி சொல்லி இருந்தாலும் இந்த படத்திலே சித்திரிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு! ரோமியோ ஜீலியட் கதை சொல்லி, சோலோலிக்கி(Soliloquy) டைலாக், இந்த ஆங்கில இலக்கியம் படிச்சிவங்க லயிச்சு போற ஷேக்ஸ்பியர் காதல் கதைகள் வச்சு காதலை பில்டப் பண்ணறது கொஞ்சம் ரசனையோட இருக்கும்! டீக்கடை பையனை கைத்தட்டி கூப்பிட்டதை தப்ப புரிஞ்சிக்கிட்டோமுன்னு பிறகு தெரிஞ்சுக்கிட்டு அவருக்கிட்ட பரிவா காதல் சிநேகம் கொள்ள முயற்சிக்கும் ரோகினி அதை தொடர்ந்து வரும் பேக்ரெண்ட் கம்மிங், முக்கியமான ஒரு பீஸு, அதை நல்லா கேளுங்க! அப்பறம் வர்ற 'பூங்கதவே தாழ் திறவாய்' பாட்டு ஒரு கிளாஸ்! என்ன அந்த புது முகம் ரோகிணி அவ்வளவு சிறப்பா செய்யலை, வேற யாராவது செஞ்சிருந்தா கிளாஸா இருந்திருக்கும், பாவம் எவ்வளவு கஷ்டபட்டும் பாரதிராஜா ஒரு ராதாவையோ, இல்லை ரேவதியையோ இந்த படத்திலே உண்டு பண்ண முடியல்லை, அதுவே படத்துக்கு பெரிய அடி,ஆனா டெக்னிக்லா திரைக்கதை, எடிட்டிங், பேக்ரவுண்டு ம்யூசிக்னு சும்மா கிச்சுன்னு நின்னப்படம் இது!

அடுத்தது இந்த 'பூங்கதவே தாழ்திறவாய்' பாட்டு, இதை பாடுனது தீபன் சக்கரவர்த்தியும், உமா ரமணனும்! உமா ரமணனுக்கு இது முதப்படம். அப்ப 70 களின் கடைசியிலே மெட்ராஸ்ல கலக்கிக்கிட்டு இருந்து ஆர்ச்சஸ்ட்ரா குழுவிலே இரண்டு பேரோடது ரொம்ப பாப்புலர், ஒன்னு அபஸ்வரம் ராம்ஜியோடது, இன்னொன்னு ஏ வி ரமணன் குழுவோடது, அதான் சன் டிவியிலே சப்தஸ்வரங்கள் நடத்துவார்ல்ல, அவருதான், அப்ப அவர் குழுவிலே பாட வந்த உமாவை அப்பறம் லவ் பண்ணி அவர் கல்யாணம் பண்ணிகிட்டது எல்லாருக்கும் தெரியும்! அப்ப கச்சேரிகள்ல ரமணன் பாடி பட்டையை கிளப்புவாரு, ஆனா அவருக்கு சினிமாவிலே சான்ஸ் கிடைக்கல்ல! ஆனா உமா ரமணனை வச்சு பல அற்புதமான பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். இன்னைக்கும் அன்னைக்கு பாடினமாதிரி அமைதியா பாடிக்கிட்டு இருக்காங்க கச்சேரியிலே எல்லாம், அதான் வீடியோ பார்க்கிறேன்ல்ல! அப்ப ஜென்சி கல்யாணமாயி கேரளா போனதுக்கப்பறம் இளையராஜாக்கு ரெகுலரா பாடிக்கிட்டிருக்கிற சிங்கர்ல இருந்து ஒரு மாறு பட்ட குரல் கொண்ட ஆளுங்க தேவைப்பட்டாங்க, ஏன்னா தன் பாடலகளை தனியா காமிக்க அது தேவை பட்டுச்சு, அது ராஜான்னு இல்ல, இப்ப வந்த ரஹமானும் இதே உத்தியைத் தான் பண்ணுனார். அதனாலே தான் ஜானகியை பொதுவா எல்லா பாடல்கள்லயும் உபயோகிச்சாலும், சசிரேகா, எஸ்பி சைலஜா, சாருலதான்னு வேறே ஆளுங்கல வச்சு புது சப்தத்தை கொடுத்தாரு அப்ப! தீபன் சக்கரவர்த்தி, நம்ம திருச்சி லோகநாதனோட புதல்வன், நல்ல பாடல்களை பாடுனார், அப்பறம் என்ன ஆச்சோ அளையே கானோம்! இந்த பாட்ல பாரதிராஜா, வழக்கம் போல தாமரைக்குளம், முழ்கி எந்திருக்கிறதுன்னு கவர்ச்சியா காமிச்சாலும், அலைகள் ஓய்வதில்லை கார்த்திக், ராதாவை கவர்ச்சியா ரோஜா பூக்கள் உடை உடுத்தி காமிச்சு அளவுக்கு கிக் இல்லை!

அடுத்தது சந்திரசேகர் கேரெக்டர், அதாவது ஆரம்பகாலங்கள்ல எப்படி இளையராஜா கஷ்டபட்டு ம்யூசிக் டைரக்டரா வந்திருப்பாருங்கிறதை பாட்டு கட்டியே நடிச்சி காமிச்சிருப்பாரு இந்த படத்திலே, பேசமா அவரே நடிச்சிருக்கிலாம், அவரு அப்ப அப்ப சந்திரசேகர் மூலம் போட்டு காட்டும் ஹம்மிங் எல்லாம் சூப்பர், அதோட உச்சகட்டமா இந்த 'மடைதிறந்து தாவும் நதி அலை நான்' பாட்டு ரொம்ப துள்ளலோட ம்யூசிக் போட்டிருப்பார். வழக்கம் போல நம்ம பாரதிராஜா, பீச்சிலே கன்னிகளோட ஆடிப்பாடி, என்னா வெள்ளை உடை தேவதைகள் மஞ்சள், ஊதான்னு கலர் கலரா கவுனு மாட்டி கிடார் எல்லாம் வாசிச்சிக்கிட்டு அளப்பரை பண்ணி எடுத்திருப்பாரு, அதே மாதிரி இளையராஜாவும் வெள்ளையா அவர் போடற வழக்கமான சட்டை பேண்ட்ல வந்து பாடி கலக்கிருப்பாரு! சும்மா மொட்டை போட்டு பார்த்த இளையராஜாவை பார்த்தவங்க இதிலே ஸ்டைலா பாடற இளைய இளையராஜாவை பாருங்க!

சந்திரசேகர் இசை அமைக்கும் படத்துக்கு 'நிஜங்களின் தரிசனம்'னு டைட்டில் வச்சு இன்விடேஷன் எல்லாம் அடிச்சு, ரெக்கார்டிங் பண்ண போறப்ப அது நின்னு போயிடும்! கடைசியிலே வழக்கம் போல சோகமா அவரை படத்திலேருந்து தூக்கிடுவாங்க, புது ம்யூசிக் டைரக்டர்லாம் போட்டு எடுத்தா ஃபைனான்ஸ் கிடைக்காதுன்னு! அதுக்கு இளையராஜா பின்னனி ம்யூசிக் அருமையா போட்டிருப்பார், பாருங்களேன்! அதுக்கப்பறம் எல்லாமே மெலோடிரமாட்டிக்கா எல்லாமே சோகமா முடிஞ்சி, மக்கள் இது என்னாடா அழுமூஞ்சி படமா இருக்குன்னு சரியா ஓடவைக்கல, பின்ன ரோகிணி, ரவியை கொலைகாரனாக்கி, அப்பறம் சந்திரசேகரை பைத்திக்காரனாக்கி, ராஜசேகரை குளோஸ் பண்ணி, ஒன்னு பின்னாடி ஓன்னு கொலை, சாவுன்னு அந்த கடைசி 20 நிமிஷ ஃபூட்டேஜ் மொத்த படத்தையும் ஜீரோ பண்ணிடுச்சு, ரொம்ப ஸ்ட்ராங்கா மெலோடிரமாட்டிக்கா போனா அப்படி தான்! ஆனா இந்த படம் மற்ற எல்லா விதத்திலேயும் நல்லப்படம்னு கொண்டாடின ஒன்னு. நானும் துண்டு துண்டா முழுப்படம் காமிச்சிட்டேன், ஆனா மொத்தமா முழு படத்தையும் பாருங்க, நான் சொன்னதை வச்சு நீங்க ரசிக்க முடியும்!

ஒலி வடிவில் கேட்டு மகிழ இதோ!

Tuesday, January 02, 2007

ஷண்முகசுந்தரமும் மோகனாம்பாளும்!

வணக்கம் என் இனிய இணைய, தமிழ்மண மக்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! என்னடா ரொம்ப நாளா வெளிகண்ட நாதர் கடையை விரிக்க காணோமேன்னு பார்த்தீங்களா, அதான் ஊருக்கு தவுந்த மொட்டை அடிக்க வேணும்ல, கிறிஸ்மஸ், நியூ யியர் கொண்டாட போயாச்சு! லீவு வுட்டாச்சுன்னு ஜாலியா சுத்த போயாச்சு! புது வருஷம் ஆரம்பிச்சோன தான் இப்ப ஜாகை இந்த இணையத்திலே! சரி விஷயத்துக்கு வர்றேன், புது வருஷ ஆரம்பத்திலே மங்களகரமா பாட்டுப் போட்டு ஆரம்பிப்போமுன்னு தான்! போன வாரம் தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்தேன்! அப்படியே எங்கயோ கொண்டி விட்டிடுச்சு! அதான் உங்க கிட்ட பகிர்ந்துக்கிலாம்ன்னு இந்த பதிவு! இந்த படத்திலே நடிச்ச சிவாஜி கணேசன், பத்மினி, இவங்க இரண்டு பேருமே நம்மகிட்ட இல்லை இப்போ, ஆனா அவங்க விட்டு போன இந்த ஒடும் நிழல்பட பதிவு தனி முத்திரை!

இப்ப எல்லாம் நல்லா நடிச்சிக்கிட்டிருக்கிற நடிகைகள், காலா காலத்திலே கல்யாணம் பண்ணிக்கிட்டா மார்க்கெட்டு கிடையாது அப்படியே முடங்க வேண்டியது தான் ஒரு கருத்து இருக்கு, ஆனா அப்ப கல்யாணம் பண்ணி போனாலும் நடிச்சு முத்திரை பதிச்ச பத்மினியை என்னான்னு சொல்றது! சரியா கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சி நடிச்சி வெளிவந்த இந்த 'தில்லானா மோகனாம்பாள்' பெரிய வெற்றி பெற்றதோட இல்லாம, காலத்தால் அழியாத காவியமானது! இது ஏன் இப்ப வெற்றி நடிகைகளா வலம் வரும் பெரும்பாலான நடிகைகளால முடியாம போகுது! ஏன்னா அதுக்கு காரணம் இருக்கு. வெறும் இடுப்பையும், தொப்புள்ள பம்பரம் விட்டு, இஷ்டம் போல கோணங்கித்தனமா டான்ஸ் ஆடி நடிச்சா அப்படி தான்! அதுக்குன்னு இருக்கும் கலைகள் எல்லாம் முறைப்படி காட்டி ஆடிப்பாடி நடிச்ச பழய நடிகைகள் கல்யாணம் ஆகியும் பேரும் புகழோட இருந்தாங்க! அப்படி இருந்த சாவித்திரி, பத்மினி மாதிரி நடிகைகள் இருந்த இந்த தமிழ் பட உலகை அதிகம் தெரியாத இந்த கால இளசுகளுக்கு அருமையான பாவமும், அபிநயமும் கூடிய இந்த காட்சிகள் பார்த்தா உண்மை விளங்கும்!

இந்த படத்திலே சிவாஜியின் கதாபாத்திரம் பேரு ஷண்முகசுந்திரம், பத்மினியோட கதாபாத்திரம் பேரு மோகனாம்பாள், இப்ப புரியுதா நம்ம பதிவுக்கு உண்டான டைட்டிலு! (இந்த 'மோகனாம்பாள்' என்ற பேரை கேட்டாலே ஒரு மயக்கம் தான் நமக்கு, ஏன்னா விவரம் தெரிஞ்சு காதல்ன்னு ஆரம்பிச்ச பெண்மணியின் பேரு!ரொம்ப காலம் கிறக்கம இந்த பேரை கேட்டாலே கனவுலேயே வாழ்ந்த நாட்கள் பல! ம்.. இப்ப அது எதுக்கு! பேரை கேட்டவுடனே ஒரு கிறக்கம் வந்து..ம்.., ஆகற வேலையை பாரு நினைப்பு தான் பொழப்பை கெடுக்குதுன்னு நீங்க சொல்றது கேட்குது!) ஷண்முகசுந்திரம் ஒரு பெரிய நாதஸ்வர வித்துவான், மோகனாம்பாள் ஒரு பெரிய பரதக் கலைஞர்! அவங்களுக்கிடையே இருக்கும் இந்த கலைப்போட்டியே பிறகு இருவரையும் காதல் கொள்ள செய்கிறது, அப்பறம் வழக்கம்போல முடிச்சுகளோட கட்டவிழ்ந்து இருவரும் கடைசியில் திருமணம் செய்து சுபம் என்று முடியும்! இது அறுபதுகளில் கொத்தமங்கலம் சுப்பு என்பவர் தொடர்கதையா ஆனந்த விகடனில எழுதிய கதைதான் பிறகு திரைப்படமா பல புராணப்படங்களை எடுத்த ஏபி நாகராஜன் என்பவரால் இயற்றப்பட்டு வெளிவந்தது!(ஆக, ஒரு முக்கியமான ஒரு செய்தி! கொத்தமங்கலம் சுப்புவின் மகள் வயித்து பேத்தியின் கணவர் நம்ம கூட தான் வேலை செய்கிறார்!) இதுக்கு இசை அமைத்தவர் கே வி மகாதேவன்! எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்! அதுலயும் இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' பாட்டும், 'நலந்தானா நலந்தானா' பாட்டும் அப்ப ரொம்ப பாப்புலாரான் ஒன்னு!

அதாவது பாடல்களிலேயே அபிநயம் புடிச்சு பாதி கதை சொல்லிடுவாங்க அப்ப! எத்தனை தடவை பார்த்தாலும் திகட்டாது! அதுவும் இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' பாட்டுக்கு பத்மினி தரும் அபிநயங்களும் அதுக்கு கணேசன் தரும் முகபாவங்களும் கலக்கல்! அதிலெ சில அபிநயங்கள் நான் சிலகாகிச்சது இதோ!

அதாவது நாட்டிய தாரகை மோகனாம்பாள் நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்திரத்தோட தில்லானாவுக்கு ஈடு கொடுத்து ஆடி போட்டி போட்டு கடைசியிலே 'தில்லானா'ங்கிற பட்டம் வாங்கிரது படத்தோட ஹைலைட்! அதுக்கு முன்னே அவங்க இரண்டு பேரும் ஊடல் கொண்டு, இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' பாட்டுல காட்டுற பாவங்களும் முகஅசைவும், இப்ப எந்த நடிகை நடிகயருக்கும் சுட்டு போட்டாலும் வராது (இந்த கதை மாதிரி காப்பி அடிச்சி பிற்பாடு வந்த கரகாட்டகாரன், சங்கமம், எல்லாம் இதுக்கு முன்னே நிக்க முடியலே, என்ன தான் பாடல்கள் நல்லா இருந்தாலும் அதில நடிப்பவர்கள் தான் அதை காவியமாக்க முடியும்!)

முதல்ல பத்மினி காட்டும் அபிநயத்திலே

'அழகர் மலையழகா
இல்லை இந்த சிலையழகா'
ன்னு

கேட்டு பிடிக்கும் பாவம் பாருங்க, ஊடல் கொண்ட காதலரின் உணர்ச்சியை அப்படியே பரதத்திலே கொண்டு வரும் தன்மை திருப்பி திருப்பி ரிவைண்ட் பண்ணி பார்க்க வேண்டிய ஒன்னு! அடுத்து நவரசத்தையும் காண்பிச்சு, அதை அழகா பாட்டுல சொல்லி,

'நவரசமும், மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்!
செக்க சிவந்திருக்கும் இதழில் கனிரசமும்'
ன்னு

மோகனாம்பாள், சொல்லி காட்டும் பாவங்கள்ல நீங்க தஞ்சாவூரையே எழுதி கொடுக்கலாம் போங்க, என்ன ஒன்னு, நீங்க மிட்டா மிராசுதாரா இருக்கணும் அதுக்கு!

அடுத்து கேலியும் கிண்டலுமா,

'எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்!
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்!'
ன்னு

சொல்லி போடும் சதிராட்டம் இருக்கு பாருங்க, அப்படி நமக்காக ஒருத்தி சொல்லி ஆடும் அழகை பார்த்தீங்கன்னா சொக்கீடமாட்டிங்க நீங்க, அந்த நிலையிலே தான் ஷண்முகசுந்திரமும்! அப்பறம் நாணத்தோட,

'பாவையின் பதம் காண நாணமா?
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா?'
ன்னு

சொல்லி தன்னுடய ஆவலை வெளிப்படுத்தும் அந்த அபிநயங்கள் இன்னைக்கு பரதம் ஆடுறேன்னு சொல்லும் எத்தனை நடிகைகளுக்கு வரும்! அப்பறம் இவ்வளவும் சொல்லிட்டு குறியால தான் யாருக்காக பாட்டு பாடி ஆடறேன்னு சொல்ல,

மாலவா, வேலவா!
மாயவா, ஷண்முகா!
ன்னு

சொல்லி காண்பிக்கும் பொழுது, நம்ம ஷண்முகசுந்திரம் அப்படி உதட்டை கடிச்சு 'அடிக்கழுதை'ன்னு வசனம் சொல்லாம சொல்லி காதலோட ஊடலின் உச்சமா சொல்லி காட்டும் அந்த நடிப்பின் நவரசம், நம்ம கணேசனை விட்டா யாருக்கு வரும்! நம்மலும் நடிக்க தெரியாம பலமாதிரி உடலை வருத்தி, தன்னை அடையாளம் வேறு கொண்டு, அஷ்டவதனியாக, இல்லை தசவதாரமாக்க முயற்சிக்கும் நடிகர்களை தூக்கி கொண்டாடுறோம்.

அப்பறம்,

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்!
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்!
ன்னு

சொல்லி அவரின் நாதத்தின் ஆளுமை எப்படி தன்னை கட்டி போட வைக்கிறதுன்னு சொல்லி அபிநயம் பிடிச்சி கடைசியிலே தன்னோட விரகதாபத்தை,

மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்ற கள்வனைப் போல்!
ன்னு

சொல்லி தான் கிறங்கும் அழகை அபிநயம் பிடிச்சு காண்பிக்க இனி கல்யாணம் பண்ணிக்கிட்ட எந்த நடிகையும் வரப் போறதில்லை! இது மாதிரி நடிப்பு, ஆடல், பாடல், கேளிக்கை எல்லாம் ஒருமுறை வருவது போலத் தான்! இனி யாரும் நம்மை கொண்டாட செய்யப்போவதில்லை!

நான் சொன்ன அத்தனையையும் கொஞ்சம் இந்த கிளிப்புலே கண்டுகளியுங்கள்! மறுபடியும் பத்மினி பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவை, நாடு திரும்பும் நாட்டியப் பேரொளி! வேணும்னா கொஞ்சம் படிச்சிட்டு வாங்க! சமீபத்தில் மறைந்த பத்மினிக்கு இப்பதிவின் மூலம் என் அஞ்சலி! அதே போல் என்றும் மனதைவிட்டு அகலாத நம் நடிகர் திலகத்திற்கும் இப்பதிவு ஒரு சமர்ப்பணம்!

Tuesday, December 19, 2006

ஹலோ, மைடியர் ராங் நம்பர்!

என்ன மன்மதலீலை படத்திலே வர்ற இந்த டைட்டில்ல போட்டிருக்கிற பாட்டை உங்களுக்குத் தெரியுமா? தெரியலைன்னா கவலைப்படாதீங்க! உங்களுக்கு ஒரு விஷேஷ வீடியோ கிளிப் கீழே காத்துக்கிட்டுருக்கு, அப்பறமா பார்த்துக்கலாம்! சரி இப்ப இது எதுக்கு இந்த பாட்டு கச்சேரி எல்லாம்னு கேட்கிறீங்களா! காரணம் இருக்கு. நேத்து மன்மதலீலை படம் பார்த்தேன், இந்த படம் வந்து சரியா முப்பது வருஷமாச்சின்னு நினைக்கிறேன். ஆனா இந்த மாதிரி பழையப்படங்களை பார்க்கிறப்ப சில காட்சிகள், வசனங்கள், பாட்டுகள் எல்லாம் அந்தந்த காலத்துக்குத்தான் பொருந்தி வரும் அதாவது, அந்த படங்கள் வந்த காலகட்டத்துக்கு தான் பொருந்தி வரும்! இரண்டு நாளைக்கு முன்னே பாமா விஜயம்னு ஒரு படம் பார்த்தேன்(சரி, இந்த படத்தை பத்தி சில முக்கிய விஷயங்கள் இருக்கு, அப்பறமா ஒரு பதிவு எழுதுறேன்) அதிலேயும் சில வசனங்கள் இருந்தது, ஆனா அது இந்த காலத்துக்கு பொருந்தி வராது, அது மாதிரி இந்த ராங் நம்பர் கதையை பத்தி சொல்லியாகணும், அதாவது இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, இந்த முப்பது ஆண்டுகள்ல நம்மலை எங்க கொண்டி விட்டிருக்குங்கிறதை கொஞ்சம் பார்க்கலாமா?

இந்த மன்மதலீலை படம் வந்தப்ப, இந்த ராங் நம்பரை வச்சு பாட்டு கதை வந்தது எல்லாம் நடைமுறையில இருந்ததை வச்சு தான், அதாவது முப்பது வருஷத்துக்கு முன்னே டெலிபோன் பத்து வாட்டி ஒரு நாளைக்கு பேசினீங்கன்னா, அதிலே அஞ்சு வாட்டி ராங் நம்பர் விழுக சான்ஸ் இருக்கு, ஏன்னா அப்ப நமக்கு கிடைச்ச டெலிபோன் சேவை அப்படி! முதல்ல இந்த டெலிபோன்ங்கிறது பெரிய விஷயம் அப்ப! முதல்ல இந்த வசதி எல்லார்கிட்டேயும் கிடையாது. இன்னைக்கு நம்ம சொல்றோமே மத்திய வர்க்கம்னு, அவங்ககிட்ட எல்லாம் இப்ப இது 'take it for granted'. அதுவும் சும்மா இப்ப இந்த தெரு முகனையிலே பழம் வெத்திலை பாக்கு வாங்க போய்ட்டு, அங்கிருந்துக்கிட்டு ரஸ்தாலி வாங்கறதா, இல்லா பூவம்பழம் வாங்கிறதான்னு ஆயிரத்துட்டு தடவை செல்லை அமுக்கி வீட்டுக்கு பேசிக்கிட்டு வெட்டியா இருக்கிற மாதிரி இல்லை அப்ப, ஏன்னா இந்த டெலிபோன் வச்சுக்கிறதுங்கிறது நினைச்சுக்கூட பார்க்க முடியாத ஒன்னு, அப்படி இருந்தாலும், அது வேலை செய்யாது, அப்படி செஞ்சாலும் அது ராங் நம்பரை கூப்பிடத்தான் உபயோகப்படும். ஆக இந்த பாட்டு எழுதி இப்படி ராங் நம்பரை கணக்குப்போடும் கதை அப்ப இந்த மன்மதலீலை படத்திலே வந்தது ஒன்னு ஆச்சிரியமில்லை!

ஏன் இதை சொல்ல வர்றேன்னா இந்த 'telecom sector' வளர்ச்சி பத்தி சும்மா ஒரு செய்தி ஒன்னை இப்ப சமீபத்திலே படிச்சப்ப, இந்த படத்திலே வந்த பாட்டை பார்த்துட்டு நினைச்சு பார்த்தப்ப பெரிய மலைப்பா இருந்திச்சு! இன்னைக்கு நீங்க நான் எல்லாம் இப்படி இணையத்திலே வெட்டி கதை அடிச்சி, பிளாக் எழுதி தள்ளிக்கிட்டிருக்கும்ல, இதுக்கு அடிப்படை தொழில் வளர்ச்சி எதுன்னா, இந்த தொடர்பு சாதனம்னு சொல்லுவேன், ஆமா இந்த ராங் நம்பர் நமக்கு ரைட் நம்பர் ஆனதாலே தான். இதன் வளர்ச்சி வரலாற்று பின்னனி பத்தி உங்களுக்கு தெரியலைன்னா, நான் போடற சினிமா கிளிப்பு மட்டும் பார்க்காதீங்க, இதையும் கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்கங்க! ஏன்னா இந்த ராங் நம்பர் விளையாட்டு நானும் சின்னபிள்ளையிலே நிறைய ஆடியிருக்கிறேன்! அதாவது என் ஃபிரண்டு ஒருத்தன் அப்ப எஸ் எஸ் எல் சி முடிச்சிட்டு ஒரு லாரி புக்கிங் ஆபிஸிலே வேலைசெஞ்சப்ப, இந்த சாய்ந்திர நேரத்திலே பொழுது போவலைன்னு அந்த புக்கிங் ஆபிஸிலே உட்கார்ந்து டெலிபோன் சுத்தி ராங் நம்பர்ல மாட்ற மாமிங்ககிட்ட கடலை போட்டுக்கிட்டு பொழுது போக்குவோம், இப்ப முன்னபின்ன தெரியாத மாமிங்ககிட்ட 'ச்சேட்டிங்' நீங்க பண்ணி காலம் கழிக்கிறீங்கள்ள, அதை நாங்க ஒரு முப்பது வருஷ த்துக்கு முன்னேயே பண்ணிருக்கோம் இந்த ராங் நம்பர் ரூட்ல! சரி இப்ப எதுக்கு அந்த கதை, நான் சொல்ல வந்த விஷயத்தை கீழே படிக்கலாம் வாங்க!

இந்த தொலை தொடர்பு சாதனம் நமக்கு 1850ம் ஆண்டே, பிரிட்டிஸ்காரான் அப்பவே பாம்பேயிலிருந்து மெட்ராஸுக்கு, ஊட்டியிலிருந்து பெங்களூருக்குன்னு லைன் போட்டு ஆரம்பிச்சி வச்சிட்டு போய்ட்டான். அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பெருகி இன்னைக்கு 17 கோடி தொலைபேசியாடுச்சி, அதாவது அதிலே 12 கோடி மொபைல் ஃபோன்னுங்க, மிச்சம் 5 கோடி தரை வழி தொடர்பு கொண்ட தொலைபேசிங்க. அதாவாது இந்த மொபைல் தொலைபேசி பெருக்கத்திலே நம்ம நாடு, சைனா(40 கோடி), அமெரிக்கா(17 கோடி), ரஷ்யா(13 கோடி)போன்ற நாடுகளுக்கு இணையாக இந்த தொலைப்பேசி பெருக்கத்திலே வளர்ந்துக்கிட்டு இருக்கோம்! இன்னும் இதோட அசுர வளர்ச்சி தொடர்ந்துக்கிட்டிருக்கு, ஆனா சராசரியா இந்த வசதி அநேக மக்களுக்கும் சென்றடஞ்சதான்னா அதான் இல்லை. அதாவது நம்ம இந்த தொலைப்பேசி பெருக்கத்திலே உலகத்திலேயே ஏழாவது இடத்திலே இருக்கோம், ஆனா மக்கள் தொகையிலே சராசரியா பார்த்தா, ஒரு நூறு பேருக்கு இது நாலு பேருக்கிட்ட தான் இன்னைக்கு இருக்கு! அதுவே அமெரிக்காவை எடுத்துக்கிட்டா நூத்துக்கு 68 பேருக்கிட்ட டெலிபோன் வசதி இருக்கு! சைனாவிலே நூரு பேருக்கு 15 பேருக்கிட்ட டெலிபோன் வசதி இருக்கு, ஆக நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு! அது மாதிரி இன்னும் 20 ஆண்டுகள்ல இன்னைக்கு அமெரிக்காவிலே இருக்கும் அளவுக்கு தொலை தொடர்பு (network size) வளரனும்னா அது 23 சதவீத மடங்கு இன்னைக்கு நம் நாட்டில் இருக்கும் அளவைப் போன்று அதிகரித்தால் தான் உண்டு, அது மாதிரி இன்னைக்கு ஜப்பானில் இருக்கும் அளவைப் போல எட்டிப் பிடிக்கணும்னா, நாம் இன்னும் 17 சதவீத வளர்ச்சி அடைஞ்சாதான் உண்டு! இந்த கணக்கு நம் நாட்டின் இருக்கும் ஜனத்தொகை 20 வருஷம் கழிச்சி இன்னைக்கு இருக்கும் 100 கோடி அளவிலே இருந்தால் தான் நான் மேலே சொன்ன வளர்ச்சி சதவீதமா இருக்கும், இல்லைன்னா அதுவும் எகிறுடும்!

ஆனா இந்த 30 வருஷத்திலே பார்த்தீங்கன்னா, இந்த தொலை தொடர்பு தொழில் நுட்பம் வளர்ச்சி பிரமிக்க வைக்க கூடியது தான். நான் சொல்லும் அந்த ராங் நம்பர் காலத்திலே, அதாவது 30 இல்லை 40 வருஷத்துக்கு முன்னே, முக்கியமான பெரிய நகரங்கள்ல தான், அதுவும் சென்னை போன்ற பெரும் நகரங்கள்ல தான் தானியங்கி தொலை தொடர்பு நிலையம் உண்டு, அதாவது ஆட்டோமேட்டிக் எக்ஸேஞ்சின்னு! இந்த டெலிபோன் எக்ஸேஞ்சு மற்ற சிறு ஊர்கள்ல மேனுவல்(Manual) எக்ஸேஞ்சு, அதாவது கனெக்ஷ்ன் கொடுக்க ஆளு இருப்பாங்க இந்த தொலை தொடர்பு நிலையத்திலே! நீங்க எந்த நம்பருக்கு போன் பேசனுமோ, அதை சொன்னா, எக்ஸேஞ்சில இருக்கிற அம்மா டெலிபோன் ஜாக்குல மாத்தி உங்க நம்பருக்கும் அந்த நம்பருக்கும் தொடர்பு கொடுப்பாங்க, அப்பறம் நீங்க பேசலாம். ஆனா ஆட்டோமேட்டிக் எக்ஸேஞ்சிலே நீங்க நம்பரை சுலட்டி அதுவா தொடர்பாகி நீங்க பேசலாம்! அது மாதிரி அந்த காலத்தில தொலைதூர தொடர்புக்கு நீங்க 'ட்ரெங்கால்'(Trunk call) புக் பண்ணனும், அப்பறம் டெலிபோன் எக்ஸேஞ்சிலே அவங்க உங்களை கூப்பிட்டு கனெக்ஷன் கொடுத்தா நீங்க பேசலாம்! இது நான் சொல்றது திருச்சியிலிருந்து சென்னைக்கு தொலைபேசி பேச! அதுவும் நீங்க இன்னைக்கு சாய்ந்திரம் புக் பண்ணினிங்கனா நாளைக்கு காலையிலே உங்களுக்கு லைன்னு கிடைக்கும்.ஆக அப்ப இது தொலைபேசி இல்லை, தொல்லைபேசி!

இந்த தொலைதொடர்பு தொழில்நுட்பம்னு பார்த்தீங்கன்னா, இந்த எக்ஸேன்சு எல்லாம் அந்த காலத்திலே இயங்கினது க்ராஸ்பார் எக்சேஞ்சுன்னு (Crossbar exchange), அதாவது இதெல்லாம் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் எக்ஸேஞ்சுங்க! இது அப்பறம் எலக்ட்ரானிக் எக்ஸேஞ்சா மாறுச்சு! அப்பறம் வந்தது தான் டிஜிட்டல் எக்ஸேஞ்சு! இந்த தொழில்நுட்பத்தை மிகவும் விலை கொடுத்து அயல்நாட்டிலருந்து இறக்குமதி பண்ணுனா தான் உண்டு! அவ்வளவு வசதி நம்ம நாடல இல்லை, மேற்கொண்டு இந்த டெலிபோன் துறை அரசாங்கத்திடம் தான் இருந்தது! அப்ப தான் அமெரிக்கவிலே படிச்சி நிறைய தொழில்நுட்ப ஆராய்ச்சி எல்லாம் தன் பேரில் வச்சிருந்த 'சாம் பிட்ரோடா'(Sam Pitroda)என்பவரை ராஜீவ் காந்தி நம்ம நாட்டுக்கு கூட்டிட்டு வந்து இந்த தொழில்நுட்பத்தை நம்ம நாட்டுக்கு தேவைக்கு ஏற்ப வடிவமைச்சி மலிவான முறையிலே இந்த டெலிபோன் எக்ஸேஞ்சு உருவாக்க 'C-DOT' ங்கிற ஒரு நிறுவனத்தை உருவாக்கினாங்க! அவங்க கண்டுபிடிச்ச தொழில்நுட்பம் தான் இன்னைக்கு பட்டித்தொட்டி எல்லாம் 'PCO'ன்னு பார்க்கிறீங்களே அந்த பொது தொலைபேசி பூத் வர காரணமாச்சு, சாதாரண மனிதனுக்கும் மலிவா தொலை தொடர்பு சாதனம் கிடைக்க வழி செஞ்ச்சு! இவங்க கண்டுபிடிச்ச அந்த டிஜிட்டல் எக்ஸேஞ்சு தொழில்நுட்பம் தான் இன்னைக்கு பறந்து கிடக்கும் இந்த தொலை தொடர்பு வளர்ச்சிக்கு முக்கிய காரணம்! இந்த 'C-DOT' நிறுவனத்துக்கு எக்கசக்கமான தானியங்கும் அதிகாரம் கொடுத்திருந்தாங்க! இது ஒரு அரசு நிறுவனமா இருந்தாலும் எல்லா முடிவுகளையும் அவங்களே எடுக்கும் அதிக அதிகாரத்துடன் செயல்பட்டு, அந்த காலகட்டத்திலே, அதாவது 80களின் ஆரம்பத்திலே, இந்த நிறுவனம் ஆராய்ந்து வடிவைத்த தொலை தொடர்பு தொழில்நுட்பம் தான் இன்னக்கு வளர்ந்து நிற்கும் இந்த தொலை தொடர்புக்கு முன்னோடி! அந்த காலகட்டத்திலே பொறியியல் படித்து முடித்து வெளிவந்த என்னைப் போன்றோர் ராப்பகலா உழைச்சி உருவாக்கின தொழில்நுட்பம்னு சொல்றதிலே ரொம்ப பெருமைபடுகிறேன்! ஆனா அதுக்கப்பறம் அந்த நிறுவனம் மேற்கொண்டு வளரமா சில அரசியல் சாக்கடைங்க தடுத்திடுச்சி!

பிறகு 90களின் பிற்பகுதியில் வந்த மொபைல் ஃபோன் வளர்ச்சி, ஃபைபர் ஆப்டிக் என்ற ஒளி கடத்துவான் மூலம் தொலை தொடர்பு வளர்ச்சி, கணனி மற்றும் இணைய தொழில்நுட்ப வளர்ச்சி அப்படின்னு இன்னைக்கு தொலை தொடர்பு வசதிகளின் பயனை நம்ம எல்லாம் அனுபவச்சிக்கிட்டிருக்கோம்! ஆனாலும் இந்த வளர்ச்சி, நான் மேலே சொன்ன மாதிரி அடி மட்ட மக்கள் எல்லார்கிட்டையும் சென்றடய வில்லை, இந்த 'டிஜிட்டல் டிவைட்'ன்னு சொல்றாங்கள்ள, அது இன்னும் இருக்கு! ஆனாலும் அரசாங்கத்தின் இந்த தொலை தொடர்பு கொள்கை, மற்றும் சட்ட திட்டங்கள், அப்பறம் இந்த தொழில் துறை முன்னேற்றம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் மலிவான சேவையில் மக்களை சென்றடய நிறைய செய்றதா சொல்றாங்க! இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, சமமான போட்டிகளுடன் கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவையுடன் இது மேலும் வளர்ந்து, இந்த செய்தி தொடர்பு பயன் அடிமட்ட மக்களை சென்றடயவும் பாகுபாடற்ற வணிகநிலை உருவாகவும் ஒரு தனிமக்குழு (TRAI) கண்காணிப்பில் செயல்பட்டு வருவதும், அதன் மூலமாய் இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை இருப்பதால் இந்த டிஜிட்டல் ஏற்றதாழ்வு மறைய வாய்ப்பு உள்ளது.

அப்பாடி, மன்மதலீலை படம் பார்த்துட்டு வெறுமன வீடியோ கிளிப்பு போடக்கூடாதா, அதுக்கு இவ்வளவு பெரிய பதிவான்னு நீங்க அரட்றது கேட்குது! சரி நம்ம சினிமாவுக்கு போவோம், இந்த மன்மதலீலை ஒரு குஜாலானப்படம், படத்துக்குன்னு ஒரு தனிப்பதிவு கட்டாயம் உண்டு! அதுவும் இந்த படம் எடுத்ததே நான் கமலை பார்த்து தான்னு பாலசந்தர் அப்ப சொல்லி அது பெரிய சர்ச்சை ஆனது பத்தி எல்லாம் அப்புறம் எழுதுறேன்! இந்த கிளிப்பிலே வரும் ஒய் விஜயாவோட அப்ப ஏகப்பட்ட புது பொண்ணுங்களை வச்சி எடுத்து வந்த படம் இது! அதுக்குள்ள இந்த படம் வீடியோ கிடைச்சா போட்டு பார்த்துடுங்க, அப்பதான் அடுத்த பதிவுல நான் சொல்றது சுவாரசியமா இருக்கும், இப்ப இந்த துண்டைப் பாருங்க!

Thursday, December 14, 2006

ஸ்ரீவித்யா, ரஜினி, கமல்-அபூர்வ ராகங்கள்!

என்ன இவெங்களை எல்லாம் அபூர்வராகங்கள்னு சொன்னா சரியா இருக்குமில்லை! ஆமா, இந்த டைட்டிலோட எடுத்தப் படம் 76ல வந்த அபூர்வ ராகங்கள்! நான் அப்ப விடலைப் பருவத்தின் மத்திமத்திலே இருந்த நேரம்! என்னமோ தெரியிலே, அந்த காலக் கட்டங்கள்ல இருந்த மத்த விடலைங்க மாதிரி இல்லாம, கொஞ்சம் கொஞ்சமா எம்ஜிஆர், சிவாஜி மோகம் எல்லாத்தையும் விட்டுட்டு அப்ப பாலசந்தர் படங்கள் மேலே அதிகமான ஈடுபாட்டோட காலம் கழிச்ச தினங்கள் அதெல்லாம்! இப்ப சமீபத்திலே ஸ்ரீவித்யா மறைந்த செய்தியை கேட்டு, அப்பறம் அதை நெட்டுல பார்த்தோன, எனக்கே தெரியாத ஒரு சோகம்! ஒரு நல்ல நடிகை! அதுவும் அந்த காலகட்டத்திலே என்னமோ மத்த நடிகைகள் கிட்ட இல்லாத ஒரு தெய்வீக அழகு இந்தம்மாக்கிட்ட இருந்ததாலேயோ என்னமோ, எனக்கு ரொம்ப புடிச்ச நடிகை அப்ப! அதுவும் இந்த படம் என்னை ரொம்பவும் மயக்கின ஒன்னு! என்னமோ சிக்கலா உறவுமுறைகள்ல வரும் பினக்கத்தை பத்தி சொன்ன கதை! இந்த மாதிரி இப்ப வேணும்னா சகஜமா கதை பண்ணி படம் பண்ணுனா எல்லாரும் ஒத்துக்கிட்டு, ட்டீகேன்னு போய்டுவாங்க! கொஞ்சம் 30 வருஷத்துக்கு முன்னே நினைச்சிப் பாருங்க, சான்ஸே இல்லை, அது மாதிரி கதை களம் எடுத்துக்கிட்டு, அதை ரசிக்கிறப்படி சொல்ல பாலசந்தராலே மட்டும் அப்ப முடிஞ்சது! அதுக்கப்பறம் வயசானவனை காதலிச்சு கதை சொல்லி மயக்க பாரதிராஜா வந்தது வேறே கதை!

இந்தப்படம் பலருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு! வெறும் சின்னப்பையனா, மீசை அரும்பி, அதிகமா சொல்லிக்கிற மாதிரி எதுவும் படங்கள் வராம இருந்த நேரத்திலே, இந்தப்படம் கமலுக்கு, ஒரு அல்வா மாதிரி! அப்ப கமலும் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி எதுவும் நடிக்கலை! (கமலுக்கு நடிக்கவே தெரியாது அப்ப, அவரு அழுதா மூஞ்சியை பொத்திக்கிட்டு எம்ஜிஆர் ஸ்டல்ல அழுது நடிச்சி ஒப்பேத்தினார், இப்பவும் அவரை மகா நடிகர், அப்படி இப்படின்னு சொல்லி ஆடறவங்களுக்கு, ஒரு தனி பதிவு அப்புறமா போடறேன், கமல் எப்படி தன்னுடய குறைகளை சாமார்த்தியமா மறைச்சு நடிச்சாருன்னு!) சரி நீயும் கொஞ்சம் நடின்னு பார்த்து பாலசந்தர், வன்முறை தான் எல்லாத்துக்கும்னு நம்பிக்கிட்டிருக்கிற ஒரு இளைஞனை எப்படி ஒரு மத்திம வயசுக்காரி மாத்தி நல்ல கொண்டு வர்றான்னும், அப்பறம், அதுவே அவமேலே எப்படி காதல் கொள்ள தூண்டுதுங்கிறதை சொல்லியிருப்பார். ஆனா வழக்கம் போல அவரு ஸ்டைல்ல, முடிச்சுகளான பந்தகளிடையே ஏற்படும் சிக்கலான உறவை கதை சொல்லி மக்களை ஆச்சிரிய படுத்தின அந்த டெக்னிக்கை மக்கள் அப்ப நல்லாவே ரசிச்சாங்க!

இது மாதிரி ஸ்ரீவித்யா மகள் ஜெயசுதா கமலோட அப்பாவான மேஜர் சுந்தர்ராஜன் மேலே மையல் கொண்டு கல்யாணம் பண்ணிக்க ஆசைபட, அவரோ தனக்கு மக மாதிரி வச்சுக்க ஆசைப்பட இன்னொரு சிக்கலான உறவு முறை கோணங்கள் பார்க்க சுவராசியமா இருக்கும், அதுவும் "என்னோடய அப்பா யாருக்கு மாமனாரோ.." அப்படின்னு ஆரம்பிக்கிர புதிருக்கு விடை என்னான்னு சொல்லி முடிச்சி அவிழ்த்திருப்பாரு பாலசந்தர்! இந்த பாலசந்தர் படங்கள்ல வர்ற குறும்பு பொண்ணுங்க எல்லாம் பண்ற ஷேஷ்டைகள் இதிலேயும் உண்டு, அதை ரசிக்கலாம், அதாவது ஜெயசுதா நாக்கை சுழட்டறது ஒரு மேனரிசம்! இது மாதிரி மேனரிசத்தை அவரோட பல படங்கள்ல நீங்க பார்க்கலாம், உதாரணத்துக்கு, மன்மதலீலையிலே கமலோட செக்ரெக்ட்ரிக்கு அடிக்கடி கண்ணடிக்கிற வீக்னஸ், அவள் ஒரு தொடர்கதையிலே ஜெயலட்சுமி சொல்ற அந்த "ஃபடாபட்", அப்பறம் அரங்கேற்றத்திலே வர்ற "அச்சச்சோ", இதெல்லாம் அப்பறம் அந்த மாதிரி பேசி நடிச்ச நடிகைகளுக்கு அடைமொழியானது எல்லாருக்கும் தெரிஞ்சது!

அப்புறம் பைரவி ராகத்திலேயே வந்த "அதிசய ராகம்" பாட்டு, பாட்டாலே தன் காதலை சொல்லி, ஸ்ரீவித்யாக்கிட்ட அரை வாங்கிக்கட்டிக்கிட்டு,அப்பறம் அதுலேயே போகும் மெலோடிராமா, பார்க்க சுவராசியமா இருக்கும்! பாலசந்தர் அதிகமா கலை நயம் வேணும்னு பொம்மைகள், சிலைகள் எல்லாத்தையும் ஃபோக்கஸ் பண்ணி கதை சொல்ல ஆரம்பிச்சது இந்த படத்திலேருந்து தான், கையொடிஞ்ச மேலாக்கு போடாத பொம்பளை சிலையை வச்சு அழகா கமலோட காதல் மனம் எப்படி மாறுதுன்னு சொல்லுவாரு, டைரக்டோரியல் சிம்பாலிஸம்! இதெல்லாம் தமிழ் படங்கள்ல அப்ப புதுசு, அதுவும் வெறும் கேரக்டர்களையே சுத்தி சுத்தி ஓடர கேமராக்கள், இது மாதிரி நடிகர் நடிகை இல்லாம காட்சியின் வீரியத்தை இந்த மாதிரி சில ஆப்ஜக்ட்ஸ், மற்றும் வேற மாதிரி காட்சிகளை காமிக்க ஆரம்பிச்சது இந்த கால கட்டத்திலே தான், அதுக்கு முன்னே கற்பழிப்பு சீனை காமிக்க புலி மானை துரத்திற போஸ்டரை ஃபோக்ஸ் செய்றதோட முடிஞ்சது! (இந்த மாதிரி காட்சி அமைப்புகளை பத்தி தனியாவே ஒரு பதிவு அப்பறம் போடறேன்!)

அப்புறம் இன்னொன்னு தெரியுமா பாலசந்தர், மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் வசனங்களை விட காட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்கன்னு நான் சொல்லி இருக்கேன், வித்தியாசமான கதைகளின் ஆக்கம் கொண்டதா இருந்தது இவங்க படங்கள்! ஆனா இவெங்க எல்லாத்துக்கும் சினிமாவிலே முதன் முதலா அடி எடுத்து வச்சது எம்ஜிஆர் படத்துக்கு வேலை செய்யன்னா நீங்க எல்லாரும் ஆச்சிரியப்படுவீங்க! அவரு படத்துக்கு கதை வசனம் எழுத வந்தவுங்க இவங்கே, ஆமா "அன்பே வா" படத்துக்கு வசனமமெழுதுனது பாலசந்தர்!

அடுத்தது நம்ம தலைவர் ரஜினி பத்தி சொல்லனும்! இந்த படத்திலே அறிமுகமானவர்னு உங்களுக்கெல்லாம் தெரியும்! ஆன நடிக்க வந்த கதையை பத்தி தெரிஞ்சிக்கணும்னா சரித்திரம் படிக்க இங்கே போங்க! இந்த படம் வெளியானப்ப ரஜினிக்கு ஒரு அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை! அந்த அடையாளத்தை கொடுத்தது மூன்று முடிச்சு! ஆனா இந்த படத்திலே அவரு எந்த வேகத்தையும் காட்டல, அமைதியா நடிச்சு, ஆனா அசத்தியிருந்தார். அவ்ருக்கு தெரிஞ்சோ தெரியாமலேயோ முதகாட்சியே பெரிய கதவை திறந்துக்கிட்டு வர்ற மாதிரி, அந்த ஆரம்பமே ஒரு நல்ல ஆரம்ப காட்சி, இது போல பெரிய ஆளான எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு காட்சின்னு நான் சொல்லுவேன்! ஆனா நான் என் ஃபிரண்ட்ஸ் பார்த்திட்டு இந்த புதுசா நடிச்சவருக்கு என்னமோ காந்த சக்தி இருக்குன்னு அந்த படத்திலேருந்தே நாங்க அவரோட ரசிகரானது என்னவோ உண்மை, அதுக்கு சாட்சி வாரி வழிச்சி சிவகுமார் மாதிரி பஃப் வச்சி சீவிக்கிட்டிருந்த நான் முடியை முன்னால அவரு ஸ்டைல்ல வச்சிக்க ஆரம்பிச்சேன், இதை பத்தி நான் எனை ஆண்ட அரிதாரத்திலேயே சொல்லி இருந்தேன்!

அவரு சரித்திரதை இங்கே படிச்சிருந்தீங்கன்னா, ஒன்னு தெரியும், நீ தமிழ் கத்துக்கிட்டு வா, உன்னை எங்கெயோ கொண்டி விடுறேன் பாலசந்தர் சொன்ன சொல்படி எங்கயோ போனது உண்மை தான்! அப்ப வந்த எந்த ஆர்டிஸ்டும் தமிழ் ஒழுங்கா கத்து பேச தெரிஞ்சா தான் வெற்றி நிச்சயம்! அது பாடுனாலும் சரி, ஆடுனாலும் சரி, அதுக்கு எவ்வளவோ பேர் உதாரணம், சாவித்திரி, சரோஜாதேவி, பி சுசீலா, எஸ் பி பாலசுப்ரமணியம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம், இவங்க எல்லாம் தாய்மொழி வேறயா இருந்தாலும் உண்மையிலே ரொம்ப ஆர்வமா சிரமம் எடுத்து கத்து ஜெயிச்சாங்க, இப்ப வர்ற ஆளுங்க மாதிரி இல்லாம! இந்த தொழில்நுட்பம், மல்டிபிள் டிராக ரெக்கார்டிங், டப்பிங்னு வந்ததிலேருந்து மொழி தெரியலேன்னாலும் பெரியாளாயிடுறாங்க! இது அதிகமா வந்தது 80துக்கப்பறம் தான், அதுவும் பாரதிராஜா கோஷ்டி ஆரம்பிச்ச வச்ச ஒன்னு! ஒரு வார்த்தை சுட்டு போட்டாலும் வர்றாத பஞ்சாபி குலாபி, ரத்தியை வச்சி படமெடுத்து வெற்றி படமாக்கி, அப்பறம் தமிழ்ன்னு ஒன்னு தேவையில்லை தமிழ் படங்கள்ல நடிக்கன்னு ஆரம்பிச்சு வச்சது இந்த கும்பலுதான், அப்படி டப்பிங் பேசி ரஜினி ஆட்டம் போட்டிருந்தா இன்னைக்கு மோகன் மாதிரி பெங்களூருக்கே போயிருப்பாரு! இதை பத்தி எஸ்பிபி ஒரு பேட்டியிலே சொல்ல கேள்வி, அதுவும் உதித் நாரயண் மாதிரி ஆளுங்க கடிச்சி துப்பி 'ப்ர்வாயில்லை'ன்னு பாட்டு படிக்க, அதையும் நம்ம ரசிச்சு, தேவுடா, அதான் இன்னைக்கு இந்த நமீதா வரை ஓடிக்கிட்டு இருக்கு! இது பத்தாதுன்னு டிவியிலே கேம்பயிரிங் பண்ற ஆளுங்க தமிழை போட்டு கொல்றது இன்னும் உச்சம்! (இதை பத்தி தனியா இன்னொரு பதிவு உண்டு!)

ஆக இந்த படம் அபூர்வமா இருந்தது என்னமோ உண்மை! ஒரு மீடியமான வெற்றி, வழக்கம் போல பி,சி செண்டர்ங்கள்ல அதிகம் ஓடலை,ஆனா எல்லோருக்கும் பேரு வாங்கி கொடுத்த ஒன்னு! அந்த படக்காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு, அப்பறம் 'A Tribute to Srividya'!

Wednesday, December 06, 2006

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடி!

நம்ம டோண்டு தமிழ் சினிமாவிலே தவிர்க்க முடியாத ஜோடிகள்னு ஒரு பதிவு போட்டார், அதிலே பியூ சின்னப்பா, தியகராஜ பாகவதர் ஜோடி, அப்பறம் சிவாஜி கணேசன் எம்ஜிஆர் ஜோடி, கடைசியிலே கமல் ரஜினி ஜோடின்னு எல்லா கதாநாயகர்கள் எதிர்மறை ஜோடிகளை பத்தி எழுதி யாருக்கு நடிப்பு, அப்பறம் யாருக்கு கரிஷ்மான்னு எழுதி போட்டதை எல்லாரும் படிச்சிருப்பீங்க! ஆனா நான் இங்கே எழுதப் போற தவிர்க்கமுடியாத ஜோடி யாருன்னா 80க்கு அப்பறம் காமிடி பண்ணிக்கிட்டு இருந்த கவுண்டமணி, செந்திலைப்பத்தி தான்!

இவங்கதான் அந்த 80, 90களில் காமிடி கலக்கல் பண்ணிக்கிட்டு திரிஞ்சவங்க!அதுவும் ஆரம்பகாலத்திலே கவுண்டமணி தனிஆவர்த்தனமா நுழைஞ்சது பாரதிராஜாவோட முதப்படமான 16 வயதினிலே தான்! அதிலே ரஜினிக் கூட வர்ற வெட்டி கிராமத்தான் கேரக்டர்! ரஜினிக்கு "இது எப்படி இருக்கு" டைலாக் அவரு பேசினதை எவ்வளவு ரசிச்சு பேமஸா மக்கள் பேசி காட்டினங்களே, அதே மாதிரி கவுண்டமணி பேசின "பத்த வச்சிட்டியே பரட்டை" டைலாக்கும் அப்ப ரொம்ப பேமஸா பேசி மக்கள் ரசிச்ச ஒன்னு! அப்பறம் அந்த டாக்டர் கிராமத்திலே பேசிறப்ப கவுண்டமணி இங்கிலீஷ்ல பேசினதை ரஜினிக்கு தமிழ்ல மொழி பெயர்த்து சொல்லும் அந்த அழகு டைலாக்கு, 'இப்ப என்ன சொல்றாருன்னு' ரஜினி கேட்க 'ம்..உச்சி வெயில் மண்டையை பொளக்குது'ன்னு சொல்ற காமடி கலக்கலா இருக்கும்! அதே மாதிரி 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்புரோஜாக்கள்'னு தொடர்ந்து அவரு காமடி பண்ணி நடிச்சது ரொம்ப பாப்புலர் அப்ப! அதிகமா நான் அதை மிமிக்கிரி பண்ணி நடிச்சு காலேஜ் காட்டினப்ப ஏகத்தும் கைத்தட்டல் வாங்கினேன், அதை நான் என்னோட எனை ஆண்ட அரிதாரத் தொடர்ல சொல்லி இருக்கேன்!

அது மாதிரி செந்தில் முதல்ல நடிக்க ஆரம்பிச்சப் படம் பாக்யராஜோட 'தூறல் நின்னுப் போச்சு'ன்னு நினைக்கிறேன்! அதிலே சும்மா சோப்பளாங்கியா நம்பியார் குஸ்தி போடற பள்ளிக்கூடத்திலே வந்து பண்ண காமிடி கலக்கலா இருக்கும். அப்பறம் கவுண்டமணி, செந்தில் ஜோடி மெள்ள மெள்ள வந்து, அப்புறம் அவங்களுக்கு காமடி டிராக்கு எழுத தனியாவே ஒரு ஆளு இருந்தாரு, அவரு பேரு வீரப்பன்! அப்படி அவங்க பண்ணுன காமடி ரொம்ப தூக்கலா இருக்கும்! சமயத்திலே அவங்க பண்ற காமிடி காம நெடியாவும் இருக்கும்! கவுண்டமணி ஸ்பெஷலா செந்திலை கூப்பிடற பாஷையே தனி, 'ஆப்பத்தலையா', 'சட்டித்தலையா', 'கடல்பன்னி'ன்னு ஆரம்பிச்சு அவரு கூப்பிடாத வசுவு வார்த்தையே இல்லைங்களாம்! அத்தனையையும் ஜனங்க ரசிச்சாங்க! அதே மாதிரி அவரோட இன்னொரு ஸ்டைல் என்னான்னா, தகப்பன், மகன், அம்மா, மகள், அண்ணன், தம்பி, அரசியல்வாதின்னு யாரா இருந்தாலும் போடா, வாடான்னுட்டு ஏதாவது ஒரு ஸ்பெஷல் வார்த்தையிலே திட்டி பண்ற காமடி அசத்தலா இருக்கும், அதை தமிழ்நாட்டு ஜனமே சிரிச்சு ரசிச்சு!

அதிலேயும் இந்த கவுண்டமணி, செந்தில் ஜோடியின் மிகச்சிறப்பான காமடி காட்சிகள் வந்தப்படம் 'வைதேகி காத்திருந்தாள்', பிறகு 'கரகாட்டக்காரன்' அதுவும் அந்த வாழப்பழம் ஜோக்கு, அப்புறம் அப்பாவியா அவரை கேள்விக்கேட்டு கொள்றது, அதுவும் அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டு லாந்தரு புசுக்குன்னு புடிச்சி, 'இது என்னாண்ணே'ன்னு க் கேட்டு நசுக்கி போடும் காட்சிகள், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்! எப்படி இளையராஜா பாட்டுக்காக படங்கள் ஓடிச்சோ, அது மாதிரி இவங்க காமடிக்காவே ஓடுன படங்கள் நிறைய! அதுவும் பெரிய சிட்டியிலேன்னு இல்லாம, பட்டி தொட்டிகள்ளே எல்லாம் பட்டையை கிளிப்பிக்கிட்டு ஓடுனிச்சு!

டோண்டு பதிவு பார்த்தோன இந்த தவிர்க்க முடியாத ஜோடியை பத்தி எழுதனும்னு தோணுச்சு, அதான்! அதோட கரகாட்டக்காரன் படத்திலேருந்து கவுண்டமணி, செந்தில் நடிச்ச காட்சிகளை இங்கே நீங்கள் கண்டு களிக்கனும்னு போட்டு இருக்கேன், பாருங்களேன், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமிடி ஜோடிகளை!

Monday, December 04, 2006

உதிரிப்பூக்கள்-மகேந்திரனின் மகுடம்!

இந்தப்படத்தை பத்தி ஏற்கனவே நம்ம பிரகாஷ் அவரோட ஒரு பதிவிலே எழுதி இருந்தார்! அதை எத்தனைப் பேரு படிச்சிங்கிளோ எனக்குத் தெரியாது! அதை கொஞ்சம் கடன் வாங்கி இப்ப நான் எழுதப்போற இந்த பதிவிலே உபயோகப் படுத்த போகிறேன். அதாவது எண்பதுகளின் துவக்கம், எங்கள் இளமை எல்லாம் நல்ல சினிமாக்களில் கழிந்த காலக்கட்டம்! அதுவும் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜான்னு, நடிகர்கள் கோலச்சிய காலகட்டத்திலேருந்து, இயக்குநர்களை பத்தி சிலாகிச்சி ரசிகர் கூட்டங்கள் பெரிசா பேசிக்கிட்டிருந்த நேரம்! இந்தப் படம் வந்தப்ப நான் இஞ்சினியரிங் முதலாம் ஆண்டின் முடிவை முடிச்சிருந்த நேரம்! அப்படியே இந்தப் படத்தை ஒரு பத்து தடவைக்கு மேலே கோயம்புத்தூரு, திருச்சி, தஞ்சாவூருன்னு எங்கெல்லாம் அப்ப போனேன்னோ அங்கெல்லாம் தியேட்டரில்ல பார்த்துருக்கேன்! அப்படி என்னை கட்டிப் போட்ட படம், நேத்து திரும்ப பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிது! அதை பார்த்திலிருந்து அப்படியே நான் என்னமோ ஒரு இருபத்தஞ்சு வருஷம் பின்னாடி போய்ட்டது என்னவோ உண்மை தான்! அதான் உங்களுக்கு சொன்னப் புரியாதுன்னு அதிலேருந்து கொஞ்சம் வீடியோ கிளிப்போட இந்த படம் இன்னைக்கானப் பதிவு!

அதுக்கு முன்னே கொஞ்சம் பிரகாஷ் எழுதினதை அப்படியே ஒட்டி இருக்கேன் இங்கே! அந்த பக்கத்துக்கு லிங்க்கு கொடுத்திருக்கலாம், ஆனா டெம்போ போயிடுமே, அதான், கீழே படிச்சிட்டு படத்தைப் பாருங்க!

மீண்டும் மீண்டும் பார்க்க சலிக்காத படங்களின் பட்டியலில் உதிரிப்பூக்களுக்கு இடம் உண்டு. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், போன்ற நடிகர்கள் ஒளிவட்டத்தில் இருந்து விலகத் துவங்கிய எழுபதுகளின் இறுதியிலிருந்து, எண்பதுகளின் துவக்கம் வரையிலான காலகட்டத்தை, தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். கதாநாயகனை மையப்படுத்தி, அதீதமான உணர்ச்சிக் குவியலாக இருந்த திரைப்படங்களை, மீட்டுக் கொண்டு வந்த படைப்பாளிகள் அனைவரும், அந்த காலகட்டத்தில் அறிமுகமானவர்கள் தான். பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகிய மூன்று முக்கியமான படைப்புக்கள் அப்போதுதான் வெளிவந்து, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைக்க முற்பட்டன. ஆனால், அந்த முயற்சி முழுதாக வெற்றி பெறவில்லை!

இயல்பான கிராமம் அது. ஊர்ப் பெரிய மனிதர் சுந்தரவடிவேலு ( விஜயன் ) அத்தனை நல்லவரில்லை. அவரது தம்பியே ( பூபதி ) அண்ணனுக்கு எதிரானவன். சுந்தரவடிவேலுவின் மனைவி, அஸ்வினி, அமைதியே உருவானவர், கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர். அவருடைய உலகம், தன் குழந்தைகள் ( அஞ்சு, ஹாஜா ஷெரீ·ப் ) தங்கை செம்பகம், அப்பா ( சாருஹாசன்) ஆகியோருடம் முடிந்து விடுகின்றது. அஸ்வினி நோய்வாய்ப்பட்டு இறந்து விட, மைத்துனியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் சுந்தரவடிவேலு. மாமனார் மறுத்துவிட, வேறொருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கிடையில் சுந்தரவடிவேலு நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் செம்பகம் மீது காதல் வசப்பட, சாருஹாசன், மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். திருமணத்துக்குப் பின்பு, அக்காவின் குழந்தைகளை தன்னுடனே வைத்துக் கொள்ள அனுமதி வேண்டி, திருமணத்துக்கு முந்தைய தினம், சுந்தர வடிவேலுவைப் பார்க்க வரும் போது, சுந்தரவடிவேலு, அவளை மானபங்கப்படுத்தி விடுகிறார். பொறுத்த வரை போதும், கொதித்து எழுந்த ஊர்மக்கள், துரத்தி வந்து, தற்கொலை செய்து கொள்ள வைத்து விடுகின்றனர.

வசனங்களுக்குப் பெயர் போன மகேந்திரன் ( ரிஷிமூலம், தங்கப்பதக்கம், வாழ்ந்து காட்டுகிறேன்.....) தன்னுடைய இரண்டாவது படத்திலே, வசனங்களுக்குப் பதில் காட்சியமைப்புக்களை நம்பியது முதல் ஆச்சர்யம். படத்தின் மொத்த வசனங்களையும் , இரண்டு A 4 காகிதத்தில் எழுதி விடலாம். அந்த ஊரில் டாக்டராக வரும் சரத்பாபுக்கும் அஸ்வினிக்கும் முன்பே பழக்கம் உண்டு என்று தெரிந்து கொண்ட சுந்தரவடிவேலு, டாக்டர் மீது காட்டும் வெறுப்பும், அதன் தொடர்ச்சியாக வரும் கைகலப்புக் காட்சியும், முதல் தரமானவை. சுந்தர.வடிவேலு மாதிரியான கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட அஸ்வினிக்கு, குழந்தைகள் தான் எல்லாம் என்பதை, ஒரே பாடலின் மூலமாக சொல்ல முடிகிற மகேந்திரனின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜாவின் இசையும், அஷோக்குமாரின் ஒளிப்பதிவும், மகேந்திரனின் கற்பனையும் ஒன்றாக சேர்ந்த அபூர்வமான கலவை அது.

பொதுவாக, திரைப்படங்களில் வில்லன்கள் திருந்தும் காட்சிகளை, எத்தனைக்கு எத்தனை சீரியஸாக எடுத்தாலும் சிரிப்பைத்தான் வரவழைக்கும். இதிலும் சுந்தரவடிவேலு, இறுதிக் காட்சியில் திருந்துகிறார். ஊர்மக்கள் அனைவரும், அவரை, கடற்கரைக்குக் தள்ளிக் கொண்டு வந்து, " குதித்து செத்துப் போ " என்று மிரட்டும் போது, அவரது முகபாவமே, அவரது மனமாற்றத்தைச் சொல்கிறது. ஊர் மக்கள் அனைவரையும், அமைதியாகத் திரும்பிப்பார்க்கிறார். அவர் ஏதோ நீளமான வசனம் பேசப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் " நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க... உங்க எல்லாரையும் நான் என்னைப் போல மாத்திட்டேன்..நான் செஞ்சதுலேயே பெரிய தப்பு அது தான் " என்று சொல்லும் காட்சி, மகேந்திரனின் கூர்மைக்கு உதாரணம்.

சாகும் தருவாயில், அங்கே வரும் தன் குழந்தைகளை, அணைத்து முத்தமிட்டு, " ஒழுங்கா படிக்கணும் , நல்ல பிள்ளைங்களா இருக்கணும், அப்பா குளிக்கப் போறேன் " என்று சொல்லி விட்டு கடலில் இறங்கிறார். ஆனால், அவர் கடலில் மூழ்குவதை காமிரா காண்பிப்பதில்லை, மாறாக, அங்கே கூடியிருக்கும் மக்களைத்தான், அவர்களது முகபாவங்களைத்தான் பார்க்கிறோம். குழந்தைகள் இருவரும், கடலில் குளிக்கப் போன அப்பா வருவாரா என்று காத்துக் கொண்டிருக்கும் போது படம் நிறைவடைகிறது.

அதிரடியான இசை இல்லாமல், ஆர்பாட்டமான காட்சிகள் இல்லாமல், இயல்பான ஒளியில், யதார்த்தமான நடிப்பில், மகேந்திரன் உருவாக்கிய இப்படம், பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், விவரித்து எழுதுவதைக் காட்டிலும், படத்தை நேரடியாகப் பார்ப்பதுதான் முழுமையான அனுபவத்தைத் தரும்!

முழுப்படமில்லைனாலும், ஆரம்ப டைட்டில் சாங், எனக்கு பிடிச்ச ஒன்னு, அப்பறம் அழகிய கண்ணே பாட்டும், அந்த வில்லன் திருந்தும் கடைசி காட்சியும் பருங்களேன்!


நன்றி: "Icarus Prakash"

கூகுளாண்டவர் சேவை கிடைக்கவில்லை என்பதால், வீடியோ கிளிப்பை கண்டு மகிழ இந்த,"உதிரிப்பூக்கள்" பதிவுப் பற்றி ஓர் அறிவிப்பு!" பதிவுக்கு செல்லுங்கள்

Monday, November 27, 2006

கனவுத் தொழிற்சாலை-கசங்கும் கன்னிகள்!

என்ன சுஜாதா மாதிரி வில்லங்கமான ஒரு தலைப்பு வச்சுட்டு ஏதும் கிசுகிசுப் பதிவு எழுதியிருக்கேன் நினைச்சிட்டீங்களா? சமீபத்திலே 'தெட்ஸ் தமிழ்'ங்கிற இணைய 'போர்ட்டல்', அதாவது செய்தி தொகுப்பு பக்கத்திலே, தமிழ் சினிமோவோட 'Tamil Cinema Gossip Detail'ங்கிற பகுதியிலே வந்த ஒரு முக்கியமான செய்தி என்னான்னா, "இயக்குநரை 'குமுறிய'ஷ்ரேயா"ன்னு, 'திமிறு' படத்திலே நடிச்ச நடிகையை பத்தி வந்தது தான்! அப்புறம் BBC எடுத்த ஒரு ஆவணப் படத்தையும் பார்க்க நேர்ந்தது! அது என்னான்னா, எப்படி திரை உலகில் நுழையும் பெண்கள், அதாவது கன்னிகள் எப்படி கசக்கப்படுகிறார்கள் என்பதே அது! அதாவது "Bollywood:The Casting Couch" என்ற அந்த ஆவணப்படம். கீழே, நான் பார்த்து பிரமித்ததை உங்களுக்கு தொகுத்து வழங்கி இருக்கிறேன், அதை பார்த்து மகிழவும், அதுக்கு முன்னாடி சில விஷயங்களை கீழே படிச்சிட்டு வாங்க!

இந்த சினிமாவிலே சான்ஸ் கேட்டு அலையறதுங்கிறது நம்மிடையே உள்ள பெரும்பாலான இளைஞர், இளைஞிகளுக்கு ரொம்ப சர்வ சாதார்ணமான விஷயம்! அதுவும் சினிமாங்கிற கனவுத் தெழிற்சாலையிலே சாதிக்கணுங்கிற வெறியோட இன்னைக்கு முகம் தெரியாத எத்தனையோ பேருங்க அலைஞ்சிக்கிட்டிருக்காங்க! அதிலே வெற்றிகண்ட நிறைய பேரோட கதையை எல்லாம் படிச்சிருக்கோம், அவங்க எப்படி எல்லாம் கஷ்டபட்டு முன்னுக்கு வந்தாங்கன்னு! இதிலே ஆண்கள் நிலைமை வேறு, அதை பத்தி என்னோட சொந்த அனுபவத்தை எழுதுறேன்! அது மாதிரி நம்ம சகபதிவர், இளவஞ்சி மாதிரி ஆளுங்க எழுதின இடுகைகளையும் படிச்சிருப்பீங்க! ஆனா கன்னிப்பெண்களுக்கு திரை மறைவில் நடந்த பல சம்பவங்கள் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, அப்படியே தொடர்ந்து பதிவா வந்த "சுக்குகாப்பி சூடானதும் சுவையானதும்" பதிவுகளை ரொமப பேரு தொடர்ந்து ரசிச்சு படிச்சிருப்பீங்க! ஆனா உண்மையிலே இந்த ஆவணப்படத்திலே அதை கிழி கிழின்னு கிழிச்சு போட்டுட்டாங்க!

அதாவது கொஞ்ச நாளைக்கு முன்னே 'தெஹல்கா.காம்'ன்னு ஒரு பத்திரிக்கை இந்த 'under cover'ல போயி பிஜேபி தலைவரு ஒருத்தரு, அதான் பங்காரு லஷ்மண் ஒருத்தரு கத்தை கத்தையா நோட்டுகளை லஞ்சம் வாங்கினதை எப்படி படம் புடிச்சிங்காங்களோ அப்படி ஹிந்தி நடிகர் சக்திகபூர் ஒரு பெண்ணை சினிமா சான்ஸ் வாங்கி தரேன்னு படுக்கைக்கு அழைத்ததை இப்படி 'under cover'ல படம் புடிச்சி கொஞ்ச நாள் முன்னே டிவியிலே போட்டு நாறடிச்சதை நம்ம தமிழ்ஜனங்க எத்தனை பேரு பார்த்தீங்களோ எனக்குத் தெரியாது, அதை வச்சி BBC நிறுவனம் நம்ம நாட்டு மானத்தை வாங்கற மாதிரி ஒரு ஆவணப் படம் எடுத்து விட்டு, இங்கே பெண்கள் நடிக்கணும்னா செக்ஸை டிரேட் பண்ணனும்னு காட்டி கிழி கிழின்னு கிழிச்சாட்டாங்க, அது கொஞ்சம் சுவாரசியமா இருக்குமேன்னு தான் இந்த பதிவு! (மத்தபடி ஊர்ல தண்ணி இல்லை, சுடுகாடனதுக்கு காரணம் என்னான்னு எழுதுனா படிக்கவா போறீங்க!)

சினிமாவிற்கு நடிக்க வரும் பெண்கள் எப்படி பட்ட சூழ்நிலையை சந்திச்சு பெரிய ஆளா வருவாங்கங்கிறது பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னு தான், அதிலே சில நல்ல நடிகைகள், நான் சொல்ல வர்றது நடிப்பிலே கோலோச்சிய நடிகைகள் இந்த சூழ்நிலையிலே இருந்த வந்தவங்கன்னு அரசல் புரசலா நமக்கு தெரியும்! ஏன், அந்த காலத்திலே நல்லா நடிச்ச ஷோபா, படாபட் ஜெயலஷ்மி மாதிரி நடிகைங்க இந்த தொழிற்சாலையின் ஏமாற்றத்தை தாங்காம இறந்து போனது தெரிஞ்ச ஒன்னு தான், அதே மாதிரி பெரும்பாலான வளர்ந்த நடிகைகளும் ஒரு காலகட்டத்துக்கப்பறம் இந்த சூழ்நிலைகளை பொறுக்க முடியாம தற்கொலை செஞ்சு செத்து போனது உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச ஒன்னு தான், முக்கியமா சொல்லணும்னா 'சில்க் ஸ்மிதா'வை சொல்லியே ஆகனும்! இந்த ஆவணப்படத்திலே அதை ஒரு நடிகையே சொல்லி இருக்காங்க! நடிக்க சான்ஸ் கேட்டு ரோல் கிடைச்சு நடிச்சு முடிச்ச பிறகுக் கூட அவங்க அணைப்பிலேயே இருந்தாகணும், ஏன்னா கிடைப்பதற்கரிய ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் வாழ்விலே ஏற்படுத்தி கொடுத்தாலாலே அவங்க பிடியில்ல கொஞ்ச நாள் இருந்திட்டு அப்பறம் அதுவே ரொட்டீனாயி, சில நடிகை அதை சரின்னு ஏத்துக்கிட்டு அப்படி இப்படி இருந்துட்டு கடைசியிலே சினிஃபீல்டை விட்டு போயிடுவாங்க, சில பேரு தாங்காமா உயிரை மாச்சுக்குவாங்க!

ஆனா இப்ப இவங்க சொல்றது என்னான்னு, இது ஒண்ணும் இந்த சினிமா தொழில்ல நடக்காத ஒண்ணு இல்லை, இது பாலிவோட்ன்னு இல்லை, ஹாலிவோட், ஏன் நம்ம தென்னிந்திய சினிமாவிலே இதை விட அதிகம் நடக்குது, இதுக்குப்போய் பெரிசா பேச வந்துட்டேங்கிறாங்க! இப்ப சான்ஸ் தேடி வரும் பெண்கள் "என்னவேணும்னாலும்" செய்யத் தயார்ங்கிற முடிவிலே வர்றாங்கணு! அதாவது அவங்க இண்டெஸ்ட்ரீயிலே இதுக்குப்பேரு "கோஆப்ரேட்" பண்றதாம், அதாவது உங்களுக்கு நான் எல்லாவிதத்திலேயும் "ஒத்துழைப்பு" தருகிறேன் என்பது!(இந்த தெட்ஸ் தமிழ் 'போர்ட்டல்' படிச்சிங்கன்னா, இந்த மாதிரி நக்கலா எழுதி தள்ளுவாங்க, எல்லா நடிகை கதையையும் இப்படி தான்! முதல்ல நான் கூட படிக்க சுவாரசியமா இருக்கேன்னு நினைப்பேன், அவங்க எழுதறது வாஸ்த்தவம் தான்னு இப்பல்ல தெரியுது!) அதாவது இன்னுன்னும் சொல்றாங்கப்ப, இந்த மாதிரி சும்மா வந்து விழுந்திட்டீங்கன்னா, அப்பறம் நீங்க ரொம்ப சீப்பா போய்டுவீங்க, அப்பறம் படத்திலே நடிக்க வைக்க புரடியூசர்ஸ், டைரக்டர்ஸ் தயங்குவாங்க, அந்த பெண்ணேட தரம் அவ்வளவில்லை, அதையெல்லாம் எப்படி போட்டு படம் எடுக்கறதுன்னு, ஒதுக்கி தள்ளிடுவாங்களாம், ஆனா "கோஆப்ரேட்" பண்ணலேன்னா ரோல் கிடைக்காதாம்! என்னப்பா இது புதுக் கதையா இருக்கு!

அது மாதிரி நடிக்க வந்த சில பெண்களையும் சந்திச்சு பேட்டி எடுத்து இந்த ஆவணப் படத்திலே ஒட்டி இருக்காங்க! அதிலே ஒரு நடிகை சொல்லுவது என்னான்னா, ஒரு டைரக்டர் சொன்னாராம் உன்னை போட்டு படம் எடுக்கறப்ப, நம்ம உடலும் மனமும் (Body&Soul) ஒத்து நடிச்சாதான் கேரக்டர் தெம்பா எழுந்து நிக்கும்னாராம்! அதாவாது லாங்சஷாட்ல உன்னோட உடைகளை களைஞ்சு எடுக்கறப்ப உன்னோட நடிப்புத்திறமை வெளிப்படமா போயிடும், அதனால இப்ப கழட்டி பார்த்தாதான் அதை எப்படி கேமிராவிலே கொண்டுவரமுடியும்னு தெரியும்னாராம், அந்த நடிகை வேற யாரமில்லை, நம்ம கேப்டன், அர்ஜீன் கூட நடிச்ச 'சாக்ஷி சிவானந்தா'ங்கிற நடிகை தான்! அப்பறம் இன்னொரு பொண்ணு, 'ப்ரீத்தி ஜெயின்' இந்த பொண்ணு கொஞ்ச நாளைக்கு முன்னே ஒரு ஹிந்தி டைரக்டரை பத்தி என்னை படம் எடுக்கிறேன்னு உப்யோகிச்சுட்டு அம்போன்னு விட்டுட்டான்னு ப்ராது கொடுத்த பொண்ணு! அந்த மாதிரி போனதை நான் ரேப்புன்னு சொல்லமாட்டேன், ஆனா நான் கொடுத்த சம்மதத்தை தவறா பயன்படுத்தி என்னை உபயோகிச்சிட்டு எனக்கு சான்ஸ் கொடுக்கலைன்னு ரொம்ப வருத்தப்பட்டுக்குது! ம்.. கதை எப்படி இருக்கு பாருங்க!

மொத்தத்திலே, 'இதெல்லாம் சினிமாவிலே சகஜமப்பான்னு' கவுண்டமணி மாதிரி எல்லாரும் ஒத்துக்கிறாங்க! நம்ம என்னடான்னா பெண்ணியம், கற்பு, கத்திரிக்கா, புடலங்கான்னு ஏகப்பட்ட சவுண்டு விட்டுக்கிட்டு அதையும் வீணா இந்த இணையத்திலே சென்ஷேஸ்னலா எழுதி தள்ளிக்கிட்டிருக்கோம்! கொஞ்ச நாள் முன்னே நடந்த குஷ்பு, சுஹாசினி விவகாரத்திலே எழுதின ஆதரவு, எதிர்ப்பு பதிவுகளை தான் சொல்றேன்!அது மட்டுமில்லாமே, நடிகருக்கு கட்டவுட் வச்சது போக, இப்ப பொம்பளை புள்ளைங்களே திரிஷா, நமீதா வுக்கு கட்டவுட்டு, பாலாபிஷேகம் எல்லாம் செஞ்சு, கூத்தடிக்கிறாங்க! அதுல உள்ள கவர்ச்சி இன்னும் எத்தனையோ பேரை வீணாக்கிப் போடுது!அப்பறம் இந்த மீடியா இண்டெஸ்ட்ரிங்கிறது இப்படிதான் சனியன்னு எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் போய் விழ எவ்வளோப் பேரு தயாரா இருக்காங்க!

இருப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னே, என் கண்ணு முன்னாடி படிச்ச இஞ்சினியருக்கு நடந்த அவமானத்தை நேரிலே பார்த்து அதை விட்டு எட்டு காத தூரம் ஓடி வந்தவன் நான்! நானும் பாரதிராஜாகிட்ட சான்ஸ் தேடி அபீஸு, ஸ்டியோன்னு ஏறி அலைஞ்சவன் தான், அங்க பார்த்த இந்த சம்பவம் தான், ஒரு இளம் சிவில் இஞ்சினியர், தம் போட்டாவை கையிலே வச்சிக்கிட்டு , சான்ஸ்க்கு அலைஞ்சப்ப, எவ்வளவு கிழ்த்தரமா நடத்தமுடியுமோ, அவ்வளவு கீழ்த்தரமா, அசிங்கமா நடத்தி வெளியே துரத்தினது இன்னைக்கும் என் கண்முன்னாடி ஆடுது! ஆனா, இப்ப இதெல்லாம் சகஜம், ஒரு தடவை படுத்து எந்திரிச்சா உண்டு ஹீரோயினி சான்ஸ், அதுல ஒரு தப்புமில்லை, இந்தோ, நான் இணைச்ச வீடியோ கிளிப்பிலே, வர்ற இந்திப் படத்திலே, சினிமாவிலே பாட்டு பாட சான்ஸ் தேடி போகும் பொண்னுக்கிட்டே அந்த ம்யூசிக் டைரக்டர் சொல்ற மாதிரி, 'ஒன்னை அடையனும்னா, இன்னொன்னை துறந்து தான் ஆகணும்'ங்கிறது எழுதப்படாத விதி! இது ரொம்பகாலமா இந்த சினிமா துறையில இருந்தாலும், இதை இப்ப வெகுவா ஒத்துக் கொண்டு உள்ளே நுழையும் பெண்கள் படிக்காத, விஷயம் தெரியாத பெண்கள் இல்லை, எம்பிஏ வரை படிச்ச பெண்கள் இதில் அடக்கம்னு தெரியறப்ப நம்ம எங்க போறோம்னு தெரியலை!

அதுக்காக இந்த எண்டர்டெயின்மெண்ட் இண்டஸ்ட்ரீங்கிற இந்த தொழில் துறையை விட்டுட முடியாது, ஏன்னா எந்த ஒரு கேளிக்கையும், பாமரன்லருந்து, செழிப்பா வசதி வாய்ப்புகளோட இருக்கிற நம்ம அத்தனை பேருக்கும் இந்த சினிமா கேளிக்கைப் போல ஈடு செய்ய முடியாத ஒன்னு! இதெக்கெல்லாம் காரணம் இந்த கனவுத்தொழிற்சாலை, இதோ இந்த ஹோலிவோட்ல நடக்கிற ஒழுங்குப் படுத்தப்பட்ட தொழிலா நம்ம நாட்ல நடக்கலை! அதாவது மத்த தொழில் மாதிரி, இதுல இருக்கிற அத்தனை துறைகளும், முறையான தொழிலா கருதப்பட்டு, ஒழுங்குபடுத்தி நடக்காத வரை, நடிகையாக படுக்கை விரிச்சாகணும், கல்யாணமான தொழிலை விட்டுடணும், சமூகத்துரோகிங்க கூட நட்பு வச்சக்கணும், பெரிய படத்தயாரிப்பாளரானுலும் கந்து வட்டியிலேயிருந்து விடு பட தூக்கு மாட்டிக்கிணும்! மத்த விஞ்ஞானத் துறையிலே இருக்கிற மாதிரி இதுக்கும் நிறைய கிரியேட்டிவிட்டி, அறிவாளித்தனம் எல்லாம் வேணும், ஆனா அதுக்கு உண்டான உண்மையான அங்கீகாரம் இருக்கான்னா, இப்போதைக்கை இல்லை நம்ம நாட்ல, அதான் நிதர்ஷண உண்மை!

இதோ நான் கண்டு களிச்ச வீடியோ கிளிப்பு உங்களுக்கு! இதுல சில ஹிந்தி பட கிளிப் வரும், ஒன்னு நடிக்க சான்ஸ் கேட்டு போற ஒரு பொண்ணுக்கிட்டே ஒரு டைரக்டர் எப்படி பிகேவ் பண்ணுரான்னு, அடுத்தது ஒரு ம்யூசிக் டைரக்டர் எப்படி சான்ஸ் கேட்டு வர்ற பொண்ணுக்கிட்ட நடந்துக்கிறாருன்னு வரும்! மொழித்தெரியனாலும் நான் சொல்ல வந்த கதைப்புரியும், அப்புறம் சொல்ல வந்த கதைக்கு கொஞ்சம் கிளுகிளுப்பு வேணும்னு திமிறு படத்தோட ஒரு முக்கியமான 'Footage'!