Wednesday, October 31, 2007

ரஜினி (க்கு) பைத்தியம் புடிச்ச கதை தெரியுமா?

வணக்கம் என் இனிய இணைய தமிழ் மக்களே! என்னடா இவன் பதிவே போடாம, இவ்வளவு நாள் என்ன பண்ணிக்கிட்டிருந்தான்னு தானே கேள்வி கேட்கிறீங்க? ஆமா இந்த சபாட்டிக்கல், சபாட்டிக்கல்னு ஒரு வார்த்தை இங்கிலீஷ்ல இருக்கு, கேள்விபட்டிருக்கீங்களா, அதாவது தற்கால விடுமுறை, அதிலே போய்ட்டேன், நடுவுலே என்னோடய பழைய பதிவுக்கு வந்த பின்னுரை எல்லாத்துக்கும் கூட பதில் போடாம அப்படியே பப்ளிஸ் பண்ணிட்டு சும்மா இருந்த்துட்டேன். இதுக்கு முக்காவாசி காரணம் திடீர்னு வந்த வேலைப்பளு, அப்பறம் கூடவே ஒட்டிக்கிட்ட சோம்பேறித்தனம்! எல்லாம் ஒன்னா சேர்ந்துக்கிட்டு இந்த தமிழ் மணம் பக்கம் வரவுடாம பண்ணிடுச்சு! இதோ பண்டிகை தேதி எல்லாம் வருதே, ஒரு நடை வந்து உங்களை பார்த்துட்டு போலாமுன்னு தான் இந்த பதிவு எழுத உட்கார்ந்தேன், அதுவும் இந்த 'ஹாலோவின் டே' க்காக வீட்டுக்கு வர்ற போற பசங்களுக்கு மிட்டாய் கொடுக்கறப்ப, சரி போரடிக்ககம இருக்கிறதுக்கு ஒரு பதிவு எழுதலாமுன்னு தோனுச்சு, அதான் உட்கார்ந்திட்டேன்! சரி என்ன எழுதலாமுன்னு யோசிச்சப்ப, ரஜினி நடிச்ச தர்மயுத்தம் படத்தோட பாட்டு ஒன்னு பார்த்தப்ப தான், அப்ப ரஜினிக்கு புடிச்ச பைத்தியக்கார கதை பத்தி கொஞ்சம் எழுதலாமுன்னு தோணுச்சு! ரஜினி ரசிகர்கள் அடிக்க வர்றதுக்குள்ளே கதையை சொல்லி முடிச்சிடுறேன்!

அதாவது 70களின் கடைசி மற்றும் 80 களின் துவக்கம், ரஜினி நடிக்க வந்து ஒரு தன்னை ஹீரோவா எஸ்டாபிளிஷ் பண்ணின பிறகு, கொஞ்சம் புகழின் உச்சத்திலே இருந்த நேரம்! எப்பவும் பிரபல்யத்துக்கு பின்னாடி சுத்தி திரியம் பத்திரிக்கைகாரங்க தொல்லை ரஜினிக்கு விதி விலக்கல்ல! அப்ப ரஜினி எல்லாத்தையுமே போல்டா சொல்லி வந்தாரு, அதாவது பஸ் கண்டக்கடரா இருந்தப்ப அவரு பண்ணின சிலுமிஷம், அதாவது, தண்ணியடிக்கிறது, அப்பறம் 'அம்முவாகிய நான்' கதையை எல்லாம் சொல்லி 'நான் சிகப்பு மனிதன்'னு ரொம்ப வெளிப்படையா பேட்டி எல்லாம் கொடுத்து பத்திரிக்கைங்களுக்கு நல்ல தீனி போட்டிருந்த நேரம்! அது மட்டுமில்லாம, இப்பயும் நான் அப்படி இப்படி தான்னு சொல்லிக்கிட்டிருந்த நேரம்! இந்த மாதிரி ஓப்பனா பேசினது, நம்ம பத்திரிக்கை கும்பலுங்க அவரை வேவு பார்க்க எப்பவும் பப்பராசித்தனமா சுத்த ஆரம்பிச்சிங்காங்க! அங்க தான் சனியன் புடிச்சிது!

முதல்ல அவருக்கு உண்டான தனிமை போச்சு, அப்பறம் கண்ணா பின்னான்னு நம்மல பத்தி எழுதறங்கன்னு, ரொம்ப கடுப்பாகி, ஸ்டியோவிலேயே பத்திரிக்கையாளரை போட்டு அடிச்சி ராசாபாசாம ஆயிடுச்சி! அந்த நேரத்திலே தான் விடாம தொடர்ந்து ராத்திரி பகல்னு பார்க்காம நடிச்சது, இந்த மஞ்ச பத்திரிக்கை சமாச்சாரம் இது எல்லாம் போட்டு தாக்க, ரஜினிக்கு மண்ண்டை குழம்பி போச்சு! இது நடந்து முப்பது வருஷம் ஆச்சி! உங்கள்ல எத்தனை போருக்கு இந்த கதை தெரியும்னு எனக்கு தெரியாது! அப்ப தொடர்ந்து அவரோட படங்களை பூஜித்து வந்த ஆட்கள்ல நானும் ஒருத்தன்! அது மாதிரி ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பின்னனி கதை உண்டு! அப்படி வந்த கதையிலே தான் இந்த தர்மயுத்தம் படம் வந்தப்ப, வந்த கதை தான் 'ரஜினிக்கு புடிச்ச பைத்தியம்'!

ஆனா இதுல ஒரு ஒத்துமை பார்த்திங்களா, அப்ப சூப்பர் ஸ்டாரா இருந்த எம் கே டி பாகவதருக்கும் இதே மாதிரி ஒரு நிலமை ஏற்பட்டது, அதாவது பாகவதரு உச்சத்திலே இருந்த நேரம், அவருக்கிட்ட மயங்கி கிடந்து பெண்டுங்க எக்க சக்கம். அப்ப பாகவதரும் கொஞ்சம் ஷோக்கு பேர்வழி, அப்படி இப்படின்னு இருந்துட்டாரு, அதை எப்படியோ தெரிஞ்சு கதை பண்ணின பத்திரிக்கைகாரர் லஷ்மிகாந்தனை முடிச்சிட்டு, அந்த கொலை வழக்கிலே உள்ள போயி வெளியிலே வந்தவரு அப்பறம் எந்திரிக்கவே முடியிலே! பாகவதரு கதையை படிச்சிங்கன்னா ஒரே சோகம் தான்! (நான் சின்ன புள்ளையா இருந்தப்ப, எங்க கடையிலே இருந்த பெரிசு, இந்த பாகவதர் நம்ம ஸ்ரீரங்கத்திலே அவரை தேடி வந்த மாமிங்களைம், அப்ப அவருக்கிருந்த மவுசு பத்தியும் நிறைய சொல்ல கேட்டிருக்கேன்), பெரிசுங்க யாரவது ரொம்ப விவரமா இந்த பாகவதர் பதிவுக்கதையை போட்டா நல்லா இருக்கும்!

ஆனா ரஜினிக்கு பாகவதர் மாதிரி சோகமான கட்டம் ஒன்னும் வர்றல! ஆனா மனுஷன் டிப்பரஸாயி பைத்தியம் புடிச்ச நிலைமைக்கு போயிட்டாரு. அவரோட குரு நாதர் பாலசந்தர் எல்லாம் ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்து அவரு குணமாயி வந்தது ரெண்டாம் ஜென்மம் எடுத்து வந்த மாதிரி! அந்த காலகட்டத்திலே வந்த இந்த படம் தான் தர்மயுத்தம், அதனுடய எல்லா பாட்டுகளும் கலக்கலா இருக்கும், நம்ம ராஜா தான் ம்யூசிக்! இன்னொரு பிடிச்ச ஒன்னும் இந்த படத்திலே இருக்கும், அதாவது ஸ்ரீதேவி ரஜினிக்கு ஜோடி! நமக்கு என்னமோ ஆரம்பத்திலே இருந்து, அதாவது 16வயதினிலே, காயத்திரி, எல்லாம் இந்த வில்லத்தனமாவே ரஜினி நடிச்சிருந்த தாலே, எப்படா ஒன்னா அழகு ஜோடி போடுவாங்கன்னு எதிர்பார்த்த நேரத்திலே வந்த படம் இது, அதான் எனக்கு பிடிச்ச ஒன்னும் இருக்குன்னு சொன்னேன்!

இன்னொன்னும் இருக்கு, லதா அந்த காலத்திலே, இந்த கஷ்டமான காலகட்டத்துக்கு பிறகு உதவியா, ரொம்ப அன்பா, வாஞ்சையா இருந்ததாலேயே பிறந்தது அவங்க காதல்! ஆக ரஜினிக்கு பைத்தியம் புடிச்சி தெளிஞ்ச காலகட்டத்தை, இந்த படத்தோட பாட்டை பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு ஞாபகம் வரும், அதான் உங்களேட இந்த பதிவெழுதி பகிர்ந்துக்கிட்டேன். வெறுமனெ பதிவு போட்ட போதுமா, பாட்டில்லாமலா, அந்த பாட்டை பார்த்து கொஞ்சம் ரசிங்களேன்!

அப்பறம் தொடர்ந்து ரெகுலரா எழுத முடியும்னு நம்பறேன், திடீர்னு வேலைன்னு வந்தா இந்த மாதிரி சரியா உங்களை வந்து பார்க்க முடியாது! அதனாலே இப்பவே உங்கள் அனைவருக்கும் என்னுடய அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்!