Tuesday, February 19, 2008

ஜோதா அக்பர்!

என்ன மக்களே செளக்கியமா! பார்த்து ரொம்ப நாளாச்சே ஏதாவது கதைச்சுட்டு போலாமுன்னு வந்தேன்! சுகம் தானே! இந்த வார கடைசியிலே ஒரு புராணப்படம் பார்த்துட்டு வந்தேன், அதுவும் ஹிந்தி படம்! இந்த படம் மூன்றை மணி நேரத்துக்கு மேலே ஒடி என்னமோ அந்த காலத்திலே ஏபி நாகராஜன் படம் பார்த்துட்டு வர்ற மாதிரி! ஆனா சும்மா சொல்லக்கூடாது படம் சும்மா கிச்சுன்னு இருந்துச்சு! என்ன படங்கிறீங்களா, அதான் இப்ப புதுசா வந்திருக்கிற 'ஜோதா அக்பர்' ன்னு ஹிந்தி படம்.

அதாவது நம்ம சரித்திரம் படிச்சோமில்லை, அதிலே அதிகமா யாருக்கும் தெரியாத சப்ஜெக்ட், அதாவது மொகலாயர்கள் சாம்ராஜ்யத்திலே, அக்பரோட அத்தியாத்திலே சின்னதா அப்ப அவரு இந்து மதத்தை சேர்ந்த ராணியை கல்யாணம் பண்ணிக்கிட்டதா கொஞ்சம் கதை படிச்சதுண்டு, அப்பறம் இந்த வடக்கு பக்கம் குப்ப கொட்ட போனப்ப ஆக்ரா தாஜ்மஹாலை பாத்துட்டு அதுக்கு பக்கத்திலே இருந்த ஆக்ரா ஃபோர்ட்டையும் பார்த்துட்டு வந்தப்ப, அங்க சின்னதா உள்ளுக்குள்ள இந்து ராணி வாழ்ந்த அரண்மனைன்னு பார்த்துட்டு வந்ததோட முடிஞ்சிதுன்னு பார்த்தா அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காதல் கதை இருக்கும்னு தெரியலை, அப்பா என்ன பிரமாண்டமா இருந்துச்சு, இந்த படம் பார்த்துட்டு வந்தா! (உங்களுக்கு எப்படியோ தெரியாது அந்த காலத்திலே சரித்திரம் படிச்சப்ப, மொகலாயர்கள் சாம்ராஜயம் பத்தி வழி வழியா வந்த மொகலாய அரசர்களில் அத்தியாத்தில் எனக்கு ரொம்ப புடிச்ச அத்தியாயம் அக்பரோட அத்தியாயம் தான், ஏன்னா மக்களுக்கு நல்லது பண்ணின பேரரசர்னு, அவரு காதல் கதைன்னு தெரிஞ்சதும் ரொம்பவும் தான் லயிச்சு போயிட்டேன்! ரொம்ப மோசமான பேரரசர் ஒளரங்கசீப் ன்னு உங்களுக்கு சொல்லிதான் தெரியணுமா?)

இந்த படம் எடுத்த டைரக்டரை உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு எனக்கு தெரியாது, அதாவது கொஞ்சம் நாளைக்கு முன்னே கிரிக்கெட்டு பட்ம் ஒன்னு வந்தது ஞாபகம் இருக்கா? அதான் அந்த காலத்திலே பிரிட்டிஷ்காரன் நம்மளை ஆண்டப்ப 'என்னோட கிரிக்கெட்டு விளையாடி ஜெயிச்சா உங்களுக்கு வரியை தள்ளிபோடறேன் இல்லேன்னா மூணு பங்கு வரி கட்டணும்'னு போட்டி போட்டு கடைசியிலே ஜெயிச்சப்பாங்களே ஒரு கிராமத்திலே, அதான் அமீர்கான் நடிச்ச 'லகான்'னு ஒரு படம் எடுத்தாரே, அதே டைரக்டரு 'அஷ்வத்தோஷ் கவரிக்கர்' எடுத்த படம் தான் இந்த படம்! நடுவிலே நாசாவிலே வேலை செஞ்சதை வுட்டுட்டு இந்தியா வந்து கிராமத்துக்கு மின்சாரம் பண்ண வழி பண்ணி கொடுப்பாரே ஹீரோ, அதான் 'சுவதேஷ்'ன்னு இன்னொரு படம் எடுத்த அதே டைரக்டர் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

படம் பிரம்மாண்டாம வந்திருக்கு, படத்தோட முக்கிய கருவே அரசியல் லாபத்துக்காக ராஜபுதன இளவரசியை, அவங்க பேரு தான் ஜோதா, அதாவது ஜோத்பூர் நகர இளவரசிங்கிறதாலே இந்த பேரு, 16ம் நூற்றாண்டில் இந்திய மொகலாய பேரரசரா இருக்கும் இளம் அக்பருக்கு கல்யாணம் கட்டி கொடுத்து அவங்க எப்படி காதல் வயபட்டாங்கன்னும், இந்து மதத்தை சேர்ந்த ராஜ்புதன இளவரசியை எப்படி மொகலாய பேரரசர் அக்பர் அன்போடும் பரிவோடும் அப்போது இருந்த அந்த முகலாய மதவாதிகளின் எதிர்ப்புகளையும் மீறி அன்பு செலுத்தி மதநல்லிணக்கத்துக்கு அடிகோலா இருந்தாருங்கிறதை அழகா அதுவும் இந்த காலத்துக்கு தேவையான ஒரு சமாச்சாரத்தை ரொம்ப நேர்த்தியா படம் புடிச்சு காமிச்சிருங்காங்க!

படத்தோட முக்கிய அம்சமா அக்பரா ரித்திக்ரோஷனும், இளவரசி ஜோதாவா, ஐஸ்வர்யா ராய் பச்சனும் நடிச்சிருக்கிராங்க! சும்ம சொல்லக்கூடாது கல்யாணத்துக்கு பின்னே வெவ்வேறு சூழ்நிலைகளிருந்து வந்த தம்பதியர் எப்படி காதல்வயப்படறாங்கன்னு எத்தனையோ சமூகப்படங்கள் வந்தாலும் இந்த சரித்திரப்படம் கவிதை மாதிரி அழகா சொல்லி இருக்காங்க! பாஷை புரியதோ இல்லையோ, போய் பாருங்க, அப்படியே ரித்திக்ரோஷனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் உள்ள கெமிஸ்ட்ரியை அழகா படம் புடிச்சி காமிச்சிருக்கங்க! நமக்கே ஆர்வம் வந்து அந்த காலகட்டத்திலே, ஒரு அஞ்சாறு நூற்றாண்டுகளுக்கு முன்னே பொறந்து இப்படி காதல்வயபட்டிருக்க கூடாதான்னு தோணுகிற அளவுக்கு காட்சி அமைப்புகள்ல உள்ளத்தை பறி கொடுத்தது என்னவோ வாஸ்தவம் தான்!

இது இப்படி இருக்க, புராண உண்மைகள் பத்தி அடிதடி நடந்துக்கிட்டிருக்கு! ஆமா உண்மையிலே, இந்து இளவரசி ஜோதான்னு சொல்லக்கூடிய ராணி அக்பரோட மகன் சலீம் காலத்திலே பொறந்து வளர்ந்தவங்க, ஆக படத்திலே சொன்ன கதை நெஜமில்லைன்னு சொல்லி, ராஜபுதன கதையை டைரக்டர் திரிச்சிட்டாருன்னு சொல்லி, ராஜஸ்தான், குஜராத் பக்கம் எல்லாம் இந்த படத்துக்கு ஒரே எதிர்ப்பு கிளம்பி, படமே அங்கெல்லாம் ரிலீஸாகல்லையாம்! இந்த மாதிரி காண்டெர்வர்ஸியை வச்சே மார்க்கெட்டிங் பண்றதும் இன்னொரு யுத்தி, அது வேறே கதை!

அதே மாதிரி அக்பர் என்னமோ இந்து ராணியை கல்யாணம் பண்ணது என்னமோ உண்மைதான், ஆனா அதெல்லாம் இந்த தெய்வீக காதலும் இல்லை கத்திரிக்காயுமில்லை அவருக்கு இருந்த 34 மனைவிகள்ல இந்தம்மாவும் ஒன்னு, சும்மா படத்துக்காக இந்த காதல் கதை உண்டு பண்ணிருக்காங்க்ன்னும் பேசிக்கிறாங்க! அவரு அப்படி காதல் மீது இவ்வளவு மதிப்பு வச்சிருந்தவரா இருந்த அவரு பையன் சலீம் ராஜசபையிலே ஆட்டம் போட்ட அனார்கலியை மணக்க ஏன் ஒத்துக்கல்லைனும் தர்க்கம் பண்ற கூட்டம் ஒன்னும் இருக்கு! (இந்த சலீம், அனார்கலி கதையை வச்சு 60 களில் வெளிவந்த ஹிந்தி படம் தான் 'மொகலே-ஆசாம்', அந்த படம் வந்தப்பவும் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணி ரகளை பண்ண சரித்திரம் உண்டு, அப்ப சொன்னது என்னான்னா, இந்த அனார்கலின்னு ராஜ்யசபையிலே ஆடுன பொண்ணே இல்லை, அதுவும் ஜோடிக்கப்பட்ட கற்பனை தான்னு சொல்ற கூட்டம் இன்னைக்கும் நிறைய இருக்கு! சரித்திரம் தெரிஞ்ச புண்ணியவாங்கே யாரவது வந்து விளக்கம் சொன்னா சரி!)

இந்த படத்திலே இன்னொரு முக்கியமான அம்சம் என்னான்னா நம்ம ரஹமான் ம்யூசிக்! சும்மா பட்டையை கிளப்பிட்டாரு, அதுவும் அக்பருக்கும் ஜோதா இளவரசிக்கும் கல்யாணம் முடிஞ்சி சுஃபி ஸ்டைல்ல ஒரு பாட்டு இருக்கு பாருங்க, சும்மா கேட்கவே சுகமா இருக்கும்! அவரு போட்ட நிறைய தமிழ் பாட்டுங்க அந்த ஸ்டைலில் இருக்கும்! வேணும்னா அந்த பாட்டை கேளுங்க, உங்களுக்காக இதோ இங்கே! இந்த சுஃபி பாடல்கள் இஸ்லாமிய பாடல்களின் ஒரு வகை! இந்த கவாலி பாடல்கள் மாதிரி, அதாவது இஸ்லாமிய இறைப்பாடல்களின் வகைகள் பல பிரிஞ்சிருக்கு அதிலே இது ஒன்னு! தனக்காக கம்போஸ் பண்ணி பாடின இறைவன் பாட்டு இந்த படத்துலே உபயோக படுத்த கொடுத்ததா கேள்வி!


இவ்வளவு அம்சா, பிரம்மாண்டமா, ஆமா ஷங்கர் படங்களுக்கு நிகரா எடுத்திருக்கிற இந்த படம் சும்மா சொல்லக்கூடாது, கிளாஸா இருக்கு, நம்ம ஊர் பக்கம் வந்திருந்தா போய் பாருங்க, இங்கே அமெரிக்காவிலே பட்டையை கிளப்பிகிட்டு ஓடிக்கிட்டிருக்கு! சரி நான் அப்ப வர்றட்டா, பிறகு பார்க்கலாம்!