Thursday, September 29, 2005

சிஐடி சங்கர் வாங்கி கொடுத்த அடி

எப்பவும் ஞாயித்துக் கிழமை ஆன சினிமா போறதல ஒரு திரில் இருக்கும். அப்ப மூனவது நாலவது படிச்சிக்கிட்டு இருந்த நேரம், நான் காலயில எங்க கடைக்கு போயிடுவேன், சீக்கிரம் திறந்து வைக்கினும்ல, எங்க ஞாயினா கொஞ்சம் லேட்டாதான் கடைக்கு வருவார். அப்பறம் காலயில அண்ணா மராட்டாக் கடையில குஸ்க்கா, சால்னா, தோச வாங்கி ருசிச்சி சாப்பிடுறதல ஒரு தனி சுகமே இருக்கு. சும்மா சீட்டு அனுப்பிச்சி சப்பிட்டு அப்பறம் உதவாங்கின ஒரு தனி கதை இருக்கு, அதை அப்பறமா சொல்லுறேன்.
நான் எப்பவும் எங்க ஞாயினாவோட சைக்கில்ல எதாச்சும் சினிமா போயிடுவேன். நீ உங்க ஐய்யாவோட மாட்டு வண்டியில சினிமா போவ! அடுத்த நாள் திங்ககிழமை ஸூக்கூல இதை பத்தி நாம இரண்டு பேரும் பேசிக்குவோம். அப்பறம் ஒரு நாள் நீதான் ஐடியா கொடுத்த நாம ரெண்டு பேரும் தனியா சினிமா போறதுக்கு. சரி எப்ப போலாம்முனு யோசிச்சப்ப, ஒரு சனிக்கிழமையில போலாம்னு ஒரு ஐடியா பண்ணியாச்சு. ஓகே எந்த படத்துக்கு போறதுன்னு பார்த்தா, அப்ப வரகநேரி உப்புபாறை பக்கத்தில இருக்கிற சென்ட்ரல் தியோட்டர்ல சிஐடி சங்கர் படம் போட்டுருந்தான். சரி அதான் ஸூக்கூலுக்கும் வீட்டுக்கும் பக்கம இருக்கு, சட்டுனு போய்யிட்டு வந்தா யாருக்கும் தெரியாதுனு பிளான் போட்டாச்சு.

அப்பறம் சென்ட்ரல் டாக்கிஸ் வந்து 45 பைசா டிக்கிட்டுல பூந்து, அப்ப என்னா கும்பலுங்கறே, டிக்கட்டு எப்படியோ எடுத்து உள்ள போயி உட்கார்ந்து படமும் பார்க்க ஆரம்பிக்கறதுக்குள்ள, அப்பா, அது ஒரு திரில்லுடா. மார்டன் தியோட்டர்ஸ் படம்னு நினைக்கிறேன். படம் செம த்ரில்லு. நல்லா படம் பார்த்துட்டு வீட்டுக்கு போன, எங்க அம்மாக்கிட்ட சரியான பூசை. என்னா காரணமுனா, என்னடா புள்ளயாண்டா எப்பவும் 41/2 இல்ல 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவானே, மணி 51/2 க்கு மேல ஆயிடுச்சி, ஆளக் காணேம்னு, ஒரே தேடல். இன்னவொன்னு, எங்க மாமா பொண்ணுக்கிட்ட, தெரியாம, நானும், தனபாலும் சினிமாக்கு போறோம்னு சொல்லிட்டேன், அதுவேற போட்டுகுடுத்துடிச்சு. அப்பறம் பாக்கணுமே, எங்க வீட்டல உன் பேரை எடுத்தலே அவ்வளவுதான், அந்த பயக்கூட உனக்கு எதுக்குடா சாவுகாசம்னு, ஒரே வசுவுதான். அப்பறம் நான் இன்ஞ்சினியரிங் காலேஜ் போனதுக்கப்பறம் நீதான் எங்க அம்மாவுக்கு பெஸ்ட் ஃபிரண்ட் ஆனது எல்லாம் அது வேற தனிக்கதை. இப்ப அதெல்லாம் நினைச்சா பார்த்தா, அந்த காலமே ஒரு தனிக்காலம்.

0 comments: