Tuesday, March 21, 2006

எனை ஆண்ட அரிதாரம் - பனிரெண்டாம் பகுதி

பொதுவா ஹாஸ்டல் சாப்பாடு அவ்வளவா யாருக்கும் பிடிக்காது. ஏன்னா வீட்ல அவ்வளவு காலம் இருந்திட்டு திடீர்னு இப்படி ஹாஸ்டல் சாப்பாடு ரொம்ப பேருக்கு போரடிக்கும். ஆனா எங்க காலேஜ் மெஸ்ஸுங்க கோயம்புத்தூர்லயே பேர் போனது. மத்த காலேஜ் பசங்கல்லாம் கூட வந்து சாப்பிட்டுட்டு போவாங்க, அதுவும் என்வி மெஸ்ல போடற சிக்கன் ரொம்ப பேமஸ். எங்க காலேஜ் இருந்த பகுதி, அப்ப எல்லாம் வானம் பாத்த பூமி தான், அது பீளமேடு கடைசியில. அதாவது ஊர் எல்லைக்கிட்டன்னு வச்சுக்கங்க. நாலா பக்கமும் காய்ஞ்சு போன வனாந்திரம். எங்க காலேஜ்ஜும் எதிர்த்தாப்பல மெடிக்கல் காலேஜ்ஜும் தான், ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பை தாண்டினா. (இப்ப அந்த இடங்கள் எல்லாம் மினி சிட்டி மாதிரி ஆயிபோயிடுச்சி, ஒரு இரண்டு மூணு வருஷம் முன்ன போய் பார்த்தேன்) அதனால தண்ணிப்பஞ்சம் அங்க. டெய்லி குடிக்க லாரியில சிறுவாணி ஆத்து தண்ணி வரும். அது தான் எல்லா ஹாஸ்டல் மெஸ்ஸுக்கும் சப்பளை. வெஜிட்டேரியன் மெஸ் இரண்டு மூணு இருந்தது, ஆனா என்வி மெஸ் ஒன்னுதான். அதுல்ல சாப்பாடு மட்டும் ஒரு 500 பேருக்கு பரிமாறலாம் ஒரே நேரத்தில. அந்த என்வி மெஸ்லேயே சின்னதா முன்னாடி இருக்கிற ரூம்ல ஃப்னல் யியர் ஸ்டூடன்ட்ஸ் சாப்பிடுவாங்க. அப்ப தான் நம்ம ராஜ்யம், எப்படின்னு கேளுங்க!

நம்ம நடிக்கறதாலேயும், பிறகு டிராமட்டிக் கிளப் செக்ரக்டரிங்கிறதாலேயும், கொஞ்சம் பாப்புலர். அதனாலே மெஸ்ல இருக்கிற அத்தனை குக்கும், பரிமாறுகிற சின்ன பசங்களும், நம்ம நடிப்பு பார்த்து ரசிகர்ங்கிறதாலே, நம்க்கு தனி மரியாதை. கவனிப்பு ரொம்ப ஏகதடபுடலா இருக்கும். நானும் இந்த மெஸ் கூட்டமா இருக்கிற நேரத்தில போமாட்டேன். எப்பவும் கடைசியா தான் சாப்பிட போவேன். எங்க செட்டுங்கள்ல, நானு, திருவேங்கடம், மனோகரன், அங்குராஜ், அப்படின்னு எப்பவும் கடைசியா போறது. அந்த நேரத்தில எல்லாக் கூட்டத்தையும் கவனிச்சி முடிச்சிட்டு பரிமாற பசங்களும் கொஞ்சம் ஃப்ரியா நமக்கு சர்வ் பண்ணுவாங்க, சமயத்தில குக்குங்களும் வந்து, என்ன தம்பி, ஏதும் சூடா கொண்டாந்து போடட்டுமான்னு, இந்த மட்டன் வருவல், மற்றும் இன்ன பிற அயிட்டங்களை சூடா கொண்டாந்து போட்டு நம்ம கும்பல கவனிக்கிறதே தனி. மெஸ் செக்ரக்டரி, ஹாஸ்டல் செக்ரக்டரியக் கூட இப்படி தாங்கி கவனிக்க மாட்டேங்கே, ஆனா நமக்கு அவ்வளவு செல்வாக்கு! இப்படி தனி மதிப்பா இருந்த காலகட்டங்கள்ல இங்கே மட்டுமில்லாமே, காலேஜ் மேனேஜ்மென்ட்டும் நம்ம கிட்ட மரியாதையா இருப்பாங்க. சும்மா தேவர் மகன் சிவாஜி ரேஞ்சிலே மதிப்பு, மரியாதை. காலேஜ் பிரின்ஸ்பல், பிஏ டு ப்ரின்ஸ்பல் இவங்க கிட்ட எல்லாம் நமக்கு ஒரு தனி மரியாதை, அதாவது அவங்க ரூம்முக்கு சகஜமா போய் வந்தவங்கள்ல நான் ஒருத்தன், ஸ்டுடன்ஸ்ங்கிற முறையிலே. பிறகு ஏதேனும் ஸ்டூடன்ஸ் பிரச்சினைன்னு வந்தா, அப்புறம் மாணவர்கள் பிரதிநிதியா கூப்பிட்டு கலந்து ஆலோசிச்சு என்ன முடிவு எடுக்குனும்னாலும் நமக்கு எப்பவுமே அழைப்பு உண்டு. அதனாலேயே, அப்ப நம்ம மேலே புகஞ்ச ஹாஸ்டல் செக்ரக்டரி, யூனியன் செக்ரக்டரிகளும் உண்டு. ஆனா இந்த அந்தஸ்த்தே நமக்கு பகையான சம்பங்களும் உண்டு. எப்படின்னு கேளுங்க!

இந்த ஹாஸ்டல்ல அடி தடி நடக்கிறது ரொம்ப சகஜம். ஆனா என்னோட ஹாஸ்டல் லைஃப்ல நடந்த இந்த அடிதடில ரெண்டு மிகப்பெரிய சம்பவங்களை சொல்லணும். முதல்லுது நான் முத வருஷம் இரண்டாவது பாதியில நடந்த ஒன்னு. அதாவது ராகிங் முடிங்சு கைலியை கட்டிக்கிட்டு மெஸ்ஸுக்கு சாப்பிட போக ஆரம்பிச்சிருந்த நேரம். (இந்த ராகிங் நடக்கும் வரை, நாங்க ராத்திரி மெஸ்ஸுக்கு பேண்ட் சட்டை போட்டுட்டுத்தான் சாப்பிட போகணும். ராகிங் முத செம்ஸ்டர் எக்ஸாம் முடிஞ்சு, அடுத்த செம்ஸ்டர் ஆரம்பிச்சு ஒரு மாசம் கழியும் வரை உண்டு. அப்புறம் ராகிங் முடிஞ்சதுக்கு டிக்ளரேசன் எப்படின்னா, கைலி கட்டிக்கிட்டு மெஸ்ஸுக்குப் போய் சாப்பிட சீனியர்ஸ் எல்லாம் அனுமதிப்பாங்க. இத்தனைக்கும் ஃப்ர்ஸ்ட் யியர்ஸ் ஸ்டூடன்ஸ்க்குன்னு தனி மெஸ் தான், ஆனா சீனியர் மெஸ்ஸ கிராஸ் பண்ணித்தான் போயாகணும், மவனே, என்னக்காவது மறந்து கைலி கட்டிக்கிட்டு கிட்டிக்கிட்டு போய்ட்டா, அன்னைக்கு நைட் அவெ தொலைஞ்சான், ராக்கிங் முடிஞ்சு அவன் ஹாஸ்டல் ரூமு திரும்ப மணி நாலாயிடும்.)அப்ப எமர்ஜென்ஸி முடிஞ்சு இருந்த நேரம், அதுக்கு முன்ன, இந்த எம்ர்ஜென்ஸியால எல்லா சீனியர்ஸ்ம் காஞ்சிப்போயி, முத இரண்டு வருஷங்கள்ல ராக்கிங் பண்ணாம இருந்து, எங்க இம்மீடியட் சீனியர்ஸ் ராக்கிங்ல கொடுமை அனுபவிச்சதால, எங்க வருகைக்காக ரொம்பவே காத்துக்கிட்டு இருந்தாங்க. நாங்க வந்தோன்ன, எங்களை ராக்கிங்ல உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க. பொதுவாவே, இந்த இரண்டாவது வருஷ ஸ்டூடன்ட்ஸ் எப்பவுமே ராக்கிங் ஜாஸ்தி பண்ணுவாங்க, ஏன்னா, அது தான் அவங்களுக்கு ராக்கிங் பண்ணக் கிடைக்க கூடிய முதல் சந்தர்ப்பம், அதனால, எங்களை செமையா தாலிச்சிட்டாங்க.

அப்ப அந்த ராக்கிங் முடிஞ்சு, ஒரு நாள் சனிக்கிழமை ஒப்பன் ஏர் தியோட்டர்ல படம் ராத்திரி ஒடிக்கிட்டுருந்தப்ப, ஏதோ தகராறுல, அந்த இரண்டாவது வருஷ ஸ்டுடன்ட்ஸ்ல ஒருத்தன்,ஃபைனல் யியர் ஸ்டுடண்ட்ஸ்ஸ அடிச்சிட்டு ஓடிட்டான், அதை கேள்விப்பட்டு ஒட்டு மொத்தம்மா, செகண்ட் யியர் ஸ்டண்ட்ஸ் எல்லாம் அவங்க ஹாஸ்டல போயி உள்ள மூடிக்கிட்டு, மேலே இருந்து, பாட்டில், அது இதுன்னு, வீசி தாக்கிக்கிட்டு இருந்தாங்க. ஒட்டு மொத்த காலேஜ்ஜும் அவங்களுக்கு எதிரா கீழே நின்னு கல்லு வீசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க ஹாஸ்டலையும் மூடி, அப்படியே உள்ள வந்தா எலெக்ட்ரிக் கனெக்ஷன் எல்லாம் கொடுத்து, அதை ஒரு ஐலேண்ட்டா மாத்தி வச்சிருந்தாங்க. ராத்திரி முழுக்க இந்த கல்லெரிதல், பாட்லு வீசுதல்னு, யாருமே தூங்கமா, சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. இது பார்க்க என்னமோ கார்கில் வார் மாதிரி, மலை உச்சியில மெர்சினரிஸ், தீவிரவாதிங்க கீழே இந்திய ராணுவத்தோட சண்டைப் போட்ட மாதிரி கற்பனை பண்ணிக்கிங்க. கடைசியைல காலையில பிரின்ஸ்பால் எல்லாம் வந்து பார்த்திட்டு, இதுக்கு மேல போனா விபரீதமா எதுவும் ஆயிடும்னு, செகண்ட் யியர் ஸ்டுடண்ட்ஸ்க்கு எல்லாம் ஒரு மாசம் லீவு கொடுத்துட்டு, சீனியர்ஸ் எல்லாம் சமாதானமா போயிடுங்கன்னு சொல்லி அவங்க எல்லாரையும் வீட்டுக்கு போகச் சொல்லிட்டாங்க. அப்ப அவங்க ஹாஸ்டலை திறந்து அவங்களை ஒருத்தர் ஒருத்தரா வெளியில போக சொல்ல, அவங்க பயந்து வெளியில ஒருத்தர் ஒருத்தரா வந்தாங்க. முதல்ல ஒரு பத்து பதினஞ்சு பேரை சும்மா விட்டுட்டாங்க, அப்புறம் வந்தவெங்கெல்லாம் மாட்னாங்கே, உங்க வீட்டு அடியில்ல எங்க வீட்டு அடியில்ல, செம அடி வாங்கிட்டு போனங்க, அப்பதான் எங்க செட்ல இருந்த சில பிரகஸ்பதிகளும், ஏண்டா எங்களையா ராகிங் பண்ணிங்கன்னு, அந்த செகண்ட் யியர்ஸ் ஸ்டுடண்ட்ஸ் சில பேரை ராக்கிங் பண்ணி அடி போட்டு அனுப்பிச்சானுங்க. எங்களை ராக்கிங் பண்ணவங்களையே திருப்பி நாங்க ராகிங் பண்ண சந்தர்ப்பம் கிடைக்க, கொண்டாடிட்டாங்க மக்க! இது ஒரு மறக்க முடியாத சம்பவம், ரத்த களரியோட, பூர காலேஜ்மே அப்புறம் கொஞ்ச நாளைக்கு மூடி வச்சி, அப்புறம், ஓவ்வொரு வருஷ ஸ்டுடண்ட்ஸ்ஸையா வரவழச்சி காலேஜ தொடங்கினாங்க.

இதே மாதிரி நாங்க ஃபனல் யியர்ஸ் படிக்கிறப்ப, ஒரு மெஸ்ல நடந்த தகராறிலே, எங்க ஜூனியர்ஸ்ல ஒருத்தன் எங்க யியர் ஹாஸ்டல் செகரக்ட்ரிய அடிச்சாட்டானு, அதே மாதிரி அந்த ஜூனியர்ஸ் எல்லாம் ஒட்டு மொத்தமா அவங்க ஹாஸ்டல கூட, எங்க யியர்ஸ் பசங்க போயி தூக்கிப்போட்டு மிதிச்சு அடிச்சி, ரணகளம் பண்ணிட்டாங்க, அப்ப நான் அங்க சமரசம் பண்ண போனேன். அப்பத்தான், அந்த சம்பவம் போலீஸ் வர கேஸ்ஸா போயி, கடைசியில அடிச்சதுல்ல நானும் ஒருத்தனு கம்ப்ளெயின் கொடுத்து, அப்புறம், நமக்குத்தான் பிரின்ஸ்பால், எல்லாம் சப்போர்ட் பண்ண, ஏன்னா, அவங்க அப்ப ஹாஸ்டல் வந்து சமரசம் பண்ணப்ப என்னையை என் ரூம்ல இருந்து கூப்பிடு விட்டதாலே அவங்களுக்குத்தெரியும், நான் அப்ப அந்த அடி தடி நடந்த இடத்தில இல்லேன்னு. பிறகு ஒட்டு மொத்தமா, காலேஜ் பேரு கெட்டு போகுனும்னு, எல்லா கேஸ்ஸையும் வாபஸ் வாங்கி ஒன்னுமில்லாம ஆக்கினாங்க.


இந்த சம்பவம் நடந்த அடுத்த இரண்டு வாரத்தில தான் நான் அரேஞ் பண்ணியிருந்த புரோகிராம் கேன்சலாக்கிட்டு, இந்த டென்சன் நேரத்தில, இது மாதிரி புரோகிராம், அது இதுன்னு வச்சா திரும்ப கலவரம் வரும்னு அதை நிறுத்த சொல்லிட்டாங்க. கடைசியில கஷ்டப்பட்டு மெட்ராஸ் போயி சுஹாசினியை பார்த்து அவங்களை வரவழக்க அரேஞ்ச் பண்ணி வந்தும், எங்களால புரொகிராம் நடத்த முடியாம போயிடுச்சு, அவங்களும் வந்து கலந்துக்க முடியாம சோகமா போயிடுச்சு போங்க. அதுக்குன்னு மனம் தளரல, அடுத்த சில நாட்கள்ல பாக்யராஜ்ஜை காலேஜ்க்கு கூட்டிட்டு வந்து ஜாம் ஜாமுன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். அதுக்கிடையில அவரை எப்படி பார்த்தேன், அதுவும் அவரு அப்ப 'தூறல் நின்னு போச்சு' படத்துக்காக பிஸியா இருந்த நேரம். எப்படிங்கிறதை அடுத்த பதிவில பார்க்கலாமா?

2 comments:

said...

எப்படியோ சுகாசினி படம் போடறதுக்கு ஒரு வரி இடைச் சொறுகல் மாதிரி நுழைச்சிட்டீங்க!

said...

தாணு, சுஹாசினிய பத்தி மொத பதிவிலேயே சொல்லியிருந்தேன், அப்ப படம் போட முடியில, இதில போட்டாச்சு. படம் போட்டு கதை சொன்னதான், கதை சொன்ன மாதிரின்னு வச்சக்கங்களே-:)