Friday, November 03, 2006

ரா..ரா...சரசுக்கு ரா..ரா- தமிழ் பாடும் சந்திரமுகி??

'ரா..ரா.. சரசுக்கு..ரா..ரா..' அப்படின்னு கண்ணு மையை மேலே கீழே அப்பிக்கிட்டு, சலங்கையை கட்டிக்கிட்டு தையதக்கான்னு பரதம் ஆடி முண்டைகண்ணி முழியை உருட்டி ஆடிஅமர்க்களப்படுத்தி, அப்பறம் நம்ம தலைவரு வேறே 'லக்க..லக்க..லக்க..லக்க..லக்க'ன்னு ஒரே சவுண்டு விட்டுக்கிட்டு, இது பத்தாதுன்னு 'என்ன கொடுமை இது சரவணன்' அப்படின்னு நம்ம இளையத்திலகம் லந்து பண்ணிக்கிட்டு, அதுக்கும் மேலே ஒரு படி போய், நம்ம ஊரு ஜனங்க இந்த படத்தை ஒரு ஐந்நூறு நாளைக்கு மேலே ஓட்டி, ஒரே கொடுமைப்போங்க! (இதுக்கு மேலே ஏதாவது
சொன்னா ரஜினி ரசிகர் கும்பலு அடிக்க வந்துடுவாங்க! ஏன்ன அவங்க பூஜிக்கிறதே இந்த படத்தை தான், இதோ சுட்டி, போய் பாருங்க! ஏன்னா 'சிவாஜி' வர இன்னும் எத்தனை நாளு ஆகுமோ, அது வரை வண்டியியை ஓட்டனுமே!) சரி வந்த விஷயத்துக்கு வருவோம்! இந்த 'Split personality', 'Multiple Personality' பத்தி எதாவது எழுதலாமுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப தான் இரண்டு சம்பவம் நடந்துச்சு, ஒன்னு நம்ம கான பிரபா எழுதுன ஒரு பதிவு படிக்க நேர்ந்தது, இன்னொன்னு ஒரு மலையாளப்படம் பார்க்க நேர்ந்தது, என்னான்னு கதையை பார்ப்போம் வாங்க!

கான பிரபா எழுதுனாலும் எழுதுனார், ஒரு மலையாளப்படம் விமர்சனம் பத்தி, 'வடக்கும் நாதன்' என்ற படத்தை படத்தை பத்தி, அதுக்கு பின்னோட்டம் போட்ட மக்கள் இந்த மனபிராந்தியை, அதான் மனவியாதியை, உலகத்திலே உள்ள ஒட்டு மொத்த மனவியாதியையும் ஒரு லிஸ்ட் போட்டு, கேட்டா, Bipolar Disorder, ன்னும், இல்லை லிம்ஃபோசர்கோமா (lymphosarcoma) ன்னும் விவரிச்சு சொன்னோன்ன, அடடா, நம்ம சந்திரமுகியையும், அந்நியன் அம்பியையும் சொல்ல மறந்துட்டாங்களேன்னு நினைச்சப்ப, இந்த பதிவு உதயமாச்சு! இன்னொன்னு போனவாரம் ஃபாசில் டைரக்ட் பண்ண 'மணிசித்திரதாழ்'ன்னு ஒரு மலையாளப்படம், மோகன்லால், ஷோபனா நடிச்சப்படம் ஒன்னு பார்தேன், நம்ம தமிழ் சந்திரமுகியின் மூலம்! இங்கே நம்ம தெலுங்குக்காரி சந்திரமுகின்னா, அங்கே தமிழச்சி நாகவல்லி! கதையை உல்ட்டா பண்ண நம்ம வாசு மாதிரி ஆளுங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்! இந்த படத்தோட 'Core Theme' என்னான்னா 'Split Personality Syndrome'! சரி அதை விவரமா என்னான்னு பார்க்கலாமுன்னு தான் இந்த பதிவு!

சரி இந்த 'Split personality' இல்லை 'Multiple Personality' பத்தி என்னான்னு விளக்கம் கொடுக்கிறாங்கத் தெரியுமா? மொத்தித்திலே இது ஒரு மனவியாதி, அதாவது இதை 'Dissociative Identity Disorder'(DID) ன்னு சொல்லி, அதாவது மனசு தன் கட்டுபாட்டில் இல்லாமல், தான் யார் என்று தெரியாமல், தன்னையே மறந்து வேறு ஒரு நிலைக்குச்சென்று, தன்னுடய உணர்ச்சிகள், மனநினைவுகள், மற்றும் மனவெழுச்சி, உணர்ச்சி உத்வேகத்தால், தன்னுடய நிலை இழந்து, மற்றொரு தனிதன்மையை வந்தடையும் நிலை வருவது போன்ற ஒரு நோய்! (“A relatively rare dissociative disorder in which the usual integrity of the personality breaks down and two or more independent personalities emerge”.) சரி இது ஒரு விளக்கமுன்னா, இந்த மறை கழண்டு போய், குணசீலம், ஏர்வாடியிலே கொண்டி விடுவாங்களே, குணமாகட்டுமுன்னு, அதான் 'சேது' படக்கதையிலே வர்ற மாதிரியான நோயயை, என்னான்னு கூப்பிடறது! அதுக்கு ஆங்கிலத்திலே 'schizophrenia'ன்னுப் பேரு! அதாவது அதுவும் ஒரு வகையான 'Split personality' வகையை சேர்ந்த நோய் தான்! அதாவது 'Split personality', 'Multiple Personality' வந்த நோய்வாளர்களை விட இவங்க நிலமை மோசம், தன்னைத் தானே கட்டு கோப்பான மனநிலையில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள்! (Schizophrenic individuals, far from having split or multiple personalities, actually have a great struggle maintaining the coherence and integrity of even a single self.)

ஆக இந்த மாதிரி இந்த இரண்டு வகை நோய்யும் ஓன்னுக்கொன்னு சம்பந்தபட்டதுன்னு சொல்றாங்க, ஆனா சில பேர், இதுக்கும் அதுக்கும் ஒன்னும் சம்பந்தமில்லைன்னு சொல்லி, நிறைய எடுத்துக்காட்டுகளை சொல்றாங்க! அப்பறம் சில பேர் சொல்றாங்க, ஏன் நம்ம எல்லாருக்குமே இந்த ஒரு வியாதி உண்டு, அப்ப அப்ப நமக்குள்ள எட்டி பார்ப்பதுண்டுன்னு சொல்லி சில விளக்கம் கொடுக்கிறாங்க! இதை பத்தி சுஜாதாக்கூட அந்நியன் படம் வந்த புதுசுல எழுதி இருந்தாரு, அதாவது சாமி வந்து ஆடுறவங்க, குடிச்சிட்டு உலருறவன், எல்லாம் இந்த மாதிரி நோயின் வகையிலே உட்படுத்தபட்டவங்கதான்னு! இதை பத்தி என்னான்னு பீராயப்போயி நிறைய விளக்கங்கள் கிடைத்தது! (சும்மா, இந்த மாதிரி சினிமாவை பொழுது போக்கா பார்த்துட்டு போவேண்டியதுதானே, இதை பத்தி வேலை இல்லாம என்ன ஆராய்ச்சின்னு கேட்கிறவங்க, கீழே போய் வீடியோ கிளிப்ல தமிழ் சந்திரமுகி, தெலுங்கு சந்திரமுகி ஆட்டம் பார்த்துட்டு போயிடுங்க!)

நான் சின்னவயசிலே இந்த 'schizophrenia'ஆளை எங்க சொந்தத்தில்லேயே பார்த்திருக்கேன். எங்க பெரியம்மா வீட்ல இருந்த ஒரு அக்காவுக்கு இந்த மாதிரி ஏதோ செய்வினை செஞ்சு வச்சுட்டாங்கன்னு சொல்லி ஒரு ரூம்ல வச்சு, எப்பவுமே பூட்டி வச்சிருப்பாங்க, அதுவும் ரொம்ப 'wild'ஆ behave பண்ணும். எங்களை கண்டா எதையாவது தூக்கி அடிக்கும், எங்க அம்மா, இல்ல யாராவது புதுசா வந்தா கண்டபடி திட்டும், கேட்டா புத்தி சுவாதீனம் இல்லாம இருக்கு, அது அப்படிதாம்பாங்க! அப்ப ஒன்னும் புரியலை, இப்ப இந்த சப்ஜெக்ட்டை விளக்காமா பார்க்கும்போது பல உண்மைகள் புரிபடுது!(அப்புறம் அந்த அக்கா குணமாகி கல்யாணம் எல்லாம் ஆகி நல்லா இருக்காங்க அது வேறே விஷயம்!)

இந்த புத்த சுவாதீனத்தை இரண்டு வகையா பிரிக்கிறாங்க, ஒன்னு தீவிரமா இருக்கிற கேஸீ இன்னொன்னு சாத்வீகமான கேஸீ, அதாவது தீவிரமான்னா, 'Postive/Active Symptom' த்தோட புத்தி பேதழிச்சு போய் இருக்கிறவங்க. இவங்ககுள்ள பேய்யோ, பிசாசோ பூந்து செயல் படுதுன்னும், மத்தவங்களால உணரமுடியாத, கண்ணுக்கு புலப்படாத ஒன்னு அவங்களை ஆட்டுவிப்பதாவும், அவர்கள் செய்யும் செய்கைகளுக்கு விளக்கும், வியாக்கானம் அவங்களுக்கு யாரோ ஓதிக்கிட்டு இருக்கிறமாதிரியும், அவங்க கட்டுப்பாட்டு, சரியான முறையில் தன்னை இயக்க முடியாமல் தன்னை சீர்குழைக்கும் தன்மையுடன் செயல்படுவர்கள், உதாரணத்துக்கு சட்டை வேட்டியை கிழிச்சிக்கிட்டு, இல்லை போட்டுக்கிட்டு இருக்கிற உடுப்புகளை தாறுமாற அணிந்து, இல்லை பொது இடங்கள்ல கத்தி ரகளை பண்ணி, அதாவது இதெல்லாம் நாகரீகமில்லைன்னு அவங்களுக்கு புத்தி உறைக்காம போயி தாறுமாறா, நான் மேலே சொன்ன அந்த அக்கா மாதிரி!

இன்னொரு கேஸீ சாத்வீகம்னு சொன்னது, 'negative/passive Symptom' த்தோட உடையவங்க, அதாவது தன்னை சுத்தி என்னா நடக்குதுன்னு தெரியாம, உணர்ச்சிகளை இழந்து, சுத்தமா தங்களையே மறந்து, அதிகம் பேசாம, இல்லை பேசினா, சொன்னதையே திருப்பி சொல்லி, உலறிகொட்டிக்கிட்டு, முக உணர்ச்சியோ, இல்லை பாடி லாங்வேஜோ இல்லாம, செவ்வனேன்னு உட்கார்ந்து கிடக்கிறவங்க! ஆக இவெங்களுக்கு எல்லாம் வந்தது 'Split Personality Syndrome' கொண்ட நோயான்னா, அது தான் இல்லைன்னு சொல்றாங்க! சரி அப்படின்னா இந்த 'Split Personality' நோய் தான் என்னா?? ஒரு விதமான மனக்கோளாறு, இதுக்கு காரணம் அவர்களுக்கு சின்ன வயசிலே ஏற்பட்ட ஒரு வித மான விநோத அனுபவங்களால, பின்னாடி இப்படி ஆகி போறாங்கன்னு சொல்றாங்க. முக்காவாசி, சந்திரமுகி, அந்நியன் படங்கள்ல கூறப்பட்ட காரணம் போல!

ஆரம்பத்திலே இருந்த இந்த புத்தி சுவாதீனம் இல்லாத நோய்யைத்தான் பிற்பாடு புதுசா வேற மாதிரி கூப்பிட ஆரம்பிச்சு, இந்த 'Split personality', 'Multiple Personality' யா ஆன கதையாச்சுன்னு சொல்றாங்க! உண்மையிலே அப்படி ஒரு நோய் ஒன்னு இருக்கிறதா இல்லன்னு ஒரு சந்தேகத்தை கிளப்பிவிட்டுட்டாங்க, அதுவும் இப்ப லேட்டஸ்ட் சைக்கியாட்ரிஸ்ட் சிகிச்சையிலே, அதுமாதிரி ஒரு வியாதியே இல்லன்னு சொல்லி கண்டுபிடிச்சிருக்காங்கலாம். நம்ம சினிமாக்காரங்கதான் இந்த மாதிரி கதை பண்ணி, அதுவும் அமெரிக்காவிலேருந்து நம்ம சரவணன் டாக்டர் வந்து சந்திரமுகியை காப்பாத்துன்னும்னு சொல்லி படமெடுக்கிறாங்க! (நம்ம சினிமான்னு இல்லை, இங்கே ஹோலிவோட்லயும் இதே கூத்து தான், இதைவிட இன்னும் நிறைய, இது சம்பந்த பட்ட படங்கள், அதுவும் பாதிரியார், வந்து ஓதி பேய் விரட்டி, என்னவெல்லாம் கதை பண்ணுவாங்க, இப்ப சமீபத்திலே ஒரு படம், 'The Exorcism of Emily Rose' வந்தது, நீங்க எத்தனை பேரு பார்த்தீங்களோ, அதிலேயும் இந்த கூத்து தான்!)

சில இடங்கள்ல இந்த 'Split personality'வச்சி சுவாரசியமா கதை பண்ணி திரியறாங்கலாம், இந்த வெளியூர் போறப்ப, நம்ம மெளனக்கீதங்கள் பாக்கியராஜ் மாதிரி தப்பு பண்ணிட்டு வர்ற ஆம்பளைங்க, கேட்டா எனக்கு 'Split personality' வியாதி இருக்குன்னு சொல்லி தப்பிச்சிக்கிறாங்களாம், அதாவது வீட்ல இருக்கிறவரைக்கும் நல்ல புள்ளையா இருப்பாங்க, ஆனா வெளியீருன்னு போனா, அங்க வேற ஒரு ஆளா மாறி, 'புதுசா பொண்ணுங்களை அனுபவிப்போம், அது எங்களை அறியாம செஞ்சுது, உண்மையிலே பொண்டாட்டிக்கு துரோகம் செய்னுங்கிறது எங்க எண்ணமில்லை, ஏன்னா எனக்கு 'Split personality' வியாதி வந்துடுது, என்ன பண்ணறது'ன்னு கேட்கிறாங்களாம், இந்த கதை எங்க போய் சொல்றது? (விவரமா அந்தக் கதை படிக்க இதோ சுட்டி) கடைசியிலே இது சுஜாதா சொன்ன சாமி ஆடுற விளக்கத்தை மாதிரி இருக்கு, இதை எங்க போய் சொல்றது?

சரி, கடைசியா நான் சொல்ல வந்தது இந்த தெலுங்கு, தமிழ் சந்திரமுகிகளை பத்தி! மூலம் கொஞ்சம் டல்லு தான், என்னதான் இருந்தாலும் ரஜினி ரஜினிதான், அவரு தான் அந்த கடைசி காட்சியை தூக்கி நிறுத்திறாரு. என்னா ஸ்டைல், வேகம் (என்ன தான் ஹீரோத்தனமா நடிச்சாலும், அவரு ஆரம்பத்திலே நடிச்ச வில்லத்தனம் தான் இன்னைக்கும், இத்தனை வயசுக்கப்பறமும் அப்படியே இருக்கு, அதான் அவரோட கவர்ச்சியின் ரகசியம்!), அதனாலேயே தமிழ் சந்திரமுகி, சாரி தெலுங்கச்சி சந்திரமுகி வந்து போற சீனு அமர்க்கள படுது, நம்ம ஜோவும் நல்லாவே நடிச்சிருக்குமா, அந்த ஷோபனா நடிச்சதை விட! சரி வீடியோ கிளிப்பை பாருங்க, நான் சொல்றது உங்களுக்குப் புரியும்!

வீடியோ கிளிப்பின் முதல் பகுதி



வீடியோ கிளிப்பின் இரண்டாம் பகுதி

9 comments:

said...

//இந்த வெளியூர் போறப்ப, நம்ம மெளனக்கீதங்கள் பாக்கியராஜ் மாதிரி தப்பு பண்ணிட்டு வர்ற ஆம்பளைங்க, கேட்டா எனக்கு 'Split personality' வியாதி இருக்குன்னு சொல்லி தப்பிச்சிக்கிறாங்களாம்//
:-)))))

நீநீநீங்க... வெளிகண்ட நாரதர் தானே, கட்டுரைப் படிச்சுமுடிச்சதும் எங்கேயோ போய்ட்டேன்

said...

சார்

நல்ல பதிவு.

நன்றாக எழுதியுள்ளீர்கள்..

சிறு குழுந்தைகள் இது போன்று மன நோய்களில் பாதிக்க வாய்பிருக்கிறதா?

said...

கல்லூரி காலத்தில் ஒரு டிக்கெட்டில் இரு சினிமா பார்த்த நினைவு வருகிறது. ரஜனியைவிட நீங்க கலக்கிட்டீங்க!!

said...

வாங்க பிரபா, நாரதராக்கிட்டீங்க நல்லது!

said...

சிவபாலன், சின்ன குழந்தையா இருக்கிறப்ப ஏறபட்ட பாதிப்புகளால தான் இந்த வியாதி வருது, அதெல்லையும் ஆண்களுக்கு இளம் வயதிலேயும் , பெண்களுக்கு கொஞ்சம் லேட்டாதான் வருமா, உலகத்திலே மொத்த ஜனத்தொகையிலே 1% இந்த 'schizophrenia'வாலே பாதிக்கப்பட்டவங்க இருக்காங்கன்னு ஒரு கணக்கு சொல்றாங்க!

said...

மணியன், நீங்க சொன்ன மாதிரி நானும் தாம்பரத்திலே அப்ப டூரிங் டாக்கிஸிலே ஒரு டிக்கட்டு எடுத்து இரண்டு படம் பார்த்திருக்கேன்!

said...

//நீநீநீங்க... வெளிகண்ட நாரதர் தானே, கட்டுரைப் படிச்சுமுடிச்சதும் எங்கேயோ போய்ட்டேன் //

மன்னிக்கணும், நாதர் நாரதர் ஆகிவிட்டது:-(

said...

வணக்கம் வெ.நாதர் ,
ஸ்பிலிட் பெர்சனாலிட்ய் இருந்தா கடன் வாங்க வசதியா இருக்கும்!1

said...

ரெண்டு கிளிப்பையும் கலந்து, ஒப்பீடு செய்ய ஏதுவாகக் கொடுத்ததுக்கு ஒரு "ஓ". அடடடடா.. அந்த இறுதிக் காட்சியில் மோகன்லாலின் நடிப்பு இருக்கே... பாடல் காட்சியிலும் படம் முழுவதும் ஷோபனாவின் நடிப்பு இருக்கே.. அந்தக் கதாபாத்திரம் மோகன்லாலுக்கு ரொம்பப் பொறுத்தமா இருந்தது இருக்கே... (இப்படி நான் அடுக்கறதிலேயே தெரியும் எனக்கு எந்தப் படம் ரொம்பப் பிடிச்சுதுன்னு :-)) 1994-லேயே மணிச்சித்திரத்தாழு பார்த்திருக்கேன், பயந்து பயந்து, அதே சமயம் ரசிச்சு ரசிச்சு. அதுக்குப் பக்கத்துல நிக்கமுடியாது நம்ம தமிழ் வெர்ஷன். தலைவருக்கு எதிரா எனக்கு ஒண்ணுமில்ல, அதே சமயம் படத்துக்குப் படம் ஒப்பிட்டால் மணிச்சித்திரத்தாழு wins outright. தல ரசிகர்கள் அடிக்கவர்றதுக்கு முன்னாடி... விடு ஜூட்ட் :-)