Monday, March 27, 2006

சென்னை வந்தது ஜப்பான் - உதயமாகும் புதிய இந்தியா!

நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தேன், 'உதயமாகும் புதிய இந்தியா- நாளை நமதே' என்று. இந்த பதிவிலே நான் நமது அசுர வளர்ச்சியின் தாக்கத்தை உலகம் எப்படி ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதிலும் 'Deming Prize' பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன், அதன் சுட்டியையும் உங்களுக்கு சொல்லி இருந்தேன். ஆனால் இந்த வார ஆனந்த விகடனில் 'சென்னை வந்தது ஜப்பான்' என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படித்தீர்களா?. படிக்காதவர்களுக்கு இதோ அந்த பிரசுரம்.

சேரனின் வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் ஒரு மான்ட்டேஜ். அந்த காட்சியில் நம் நாடு முன்னேறிய நாடாக உருவெடுத்திருக்கும். வெள்ளைக்காரர்கள் எல்லாம் நம்மூர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வார்கள். நம் நாட்டு மக்கள் எல்லாம் துபாய் ஷேக் போல குகு படகுக் கார்களில் பவனி வருவார்கள். சேரனின் இந்தக் கனவு எந்த அளவுக்கு மெய்ப்படும், எவ்வளவு சீக்கிரம் மெய்ப்படும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால், சேரனின் கனவோடு மிகப் பொருந்திப் போகக்கூடிய காட்சி ஒன்றைக் கடந்த வாரம் சென்னை லூகாஸ் டி.வி.எஸ். தொழிற்சாலையில் பார்க்க முடிந்தது.

டொயோட்டோ கார் கம்பெனியில் ஆரம்பித்து ஜெ.டி.பி. கார்ப்பரேஷன், ரினாய் கார்ப்பரேஷன்... என ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோ மொபைல் கம்பெனிகளின் முதலாளிகள், உயர் அதிகாரிகள் என இருபத்தைந்து பேர் சென்னை, பாடியில் இருக்கும் லூகாஸ் டி.வி.எஸ். தொழிற்சாலைக்கு வந்திருந்தார்கள். அவர்களை அங்கே இழுத்து வந்தது எது தெரியுமா? தரம்!

திரைப்படத் துறைக்கு எப்படி ஆஸ்கர் விருதோ, அப்படித்தான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் துறைக்கு டெமிங் விருது (Deming Prize). இப்படிப்பட்ட மிகப் பெரிய விருதை ஜெயித்திருக்கும் லூகாஸ் டி.வி.எஸ். தயாரிக்கும் ஸ்டார்ட்டர் மோட்டார், டைனமோ, ஹெட் லாம்ப் ஆகிய உதிரிபாகங் களைத் தாங்கி ஓடாத காரோ, மோட்டார் சைக்கிளோ உலகத்திலேயே இல்லை என்கிற அளவுக்கு, உலகெங்கும் இந்த கம்பெனியின் தயாரிப்புகள் செல்கின்றன. இதுதான் ஜப்பானியர் களை இந்த கம்பெனி நோக்கி இழுத்ததா?

திரைப்படத் துறைக்கு எப்படி ஆஸ்கர் விருதோ, அப்படித்தான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் துறைக்கு லூகாஸ் டி.வி.எஸ். கம்பெனியிடம் ஜப்பானியர்கள் பாடம் படிக்க வருகிறார்கள் என்றால், இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா? இதற்கும் மேல் வலுவான காரணம் வேண்டும் அல்லவா?

இந்தக் கேள்வியை, அந்த ஜப்பானியக் குழுவுக்குத் தலைமையேற்று வந்திருந்த ததாஷி ஒனிஷியிடம் கேட்டோம்.

சென்ட்ரல் ஜப்பான் பகுதியில் இருக்கும் டொயோட்டா குரூப் கம்பெனிகக்கும், அவற்றைச் சார்ந்த கம்பெனிகக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் கம்பெனிகள் அனைத்துக்கும் தரக்கட்டுப் பாடு என்பதுதான் தாரக மந்திரம். தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் தொழிற் சாலைகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி... அதைத் தேடிச் சென்று பார்வையிடுவது மட்டுமல்ல, அதனிடமிருந்து பாடங்கள் படிப்பதும் எங்கள் வழக்கம். அந்த வகையில்தான் லூகாஸ் டி.வி.எஸ்.ஸுக்கு வந்திருக்கிறோம் என்றார் ததாஷி ஒனிஷி.

சரி, அப்படி என்ன அதிசயம் நடக்கிறது டி.வி.எஸ்.லூகாஸில்?

டோக்கியோவில் உள்ள ஆஸ்மோ கம்பெனியைச் சேர்ந்த சுட்டூமூ சுசுகி இதற்குப் பதில் சொன்னார். இன்று காலையில் லூகாஸ் டி.வி.எஸ். தொழிற் சாலையின் அனைத்துப் பிரிவுகக்கும் சென்று, இங்கே தயாரிக்கப்படும் பொருள்களைப் பார்த்தோம். பொருள் கள் மட்டுமல்ல, அவை இங்கே தயாராகும் முறைகூட உலகத் தரத்தோடு இருப்பதைக் கண்டோம்.

இங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் எவருமே ஏதோ தொழிற்சாலைக்கு வந்தோம், அன்றைய வேலையை முடித்தோம், கிளம்பினோம் என்றில் லாமல், மனித உயிர்களோடு சம்பந்தப் பட்ட வாகனங்கக்கான உதிரிபாகங் களைத் தயாரிக்கிறோம் என்கிற உணர்வோடு, தங்கள் வேலையை பயபக்தியோடு செய்கிறார்கள். இத்தகைய தொரு தொழில் பக்தியை நாங்கள் வேறு எங்கும் கண்டதில்லை!

சுட்டூமூ சுசுகியைக் கவர்ந்த வேறு ஒரு அம்சமும் இந்த கம்பெனியில் இருக்கிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில்கூடத் தொழிலாளர்கள் இங்கே வந்து தாங்கள் வேலை செய்யும் மெஷின்களை சர்வீஸ் செய்கிறார்கள். உற்பத்தியாகும் பொருளின் தரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் இயந்திரம் பழுதடைந்திருந்தால், அதைத் தாங்களே கண்டுபிடித்துச் சரி செய் கிறார்கள். தரக்குறைவான ஒரு பொருளைத் தான் தயாரிப்பது கம்பெனிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் தனக்கே கேவலம் என்று ஒவ்வொரு தொழிலாளியும் இங்கே கருதுகிறார். இதுதான் இந்த கம்பெனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து! என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார் சுட்டூமூ சுசுகி.

இங்கே இருக்கும் தொழிலாளர்களின் வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது இங்கே இருக்கும் பயிற்சிக்கூடம். தான் சம்பந்தப்பட்ட துறை யில்தான் என்றில்லை, ஆர்வம் இருந்தால் மற்ற துறைகளைப் பற்றியும் இங்கே ஒரு தொழிலாளி யால் பயிற்சி பெற முடியும். கம்ப்யூட்டர், லேட்டஸ்ட் உபகரணங்கள், பயிற்சித் திட்டம், பயிற்சியாளர்கள் என எதற்கும் இங்கே பஞ்சம் இல்லை. தேவை ஏற்பட்டால் வெளிநாடுகக்கு அனுப்பிக்கூட தொழிலாளர்கக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் தொடர்ந்து சாதிக்கக் களம் அமைத்துக் கொடுத்தவர் இந்த கம்பெனியின் மேலாண் இயக்குநர் டி.கே.பாலாஜி. அவர் சொன்ன கருத்துக்களில் மறைந்திருக்கிறது இந்த கம்பெனியின் வெற்றி ரகசியம்.

ஜீரோ டிபெக்ட் & அதாவது, நூறு டைனமோவை விற்பனை செய்தால் அதில் ஒன்றுகூடப் பழுதானதாக இருந்துவிடக்கூடாது என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஜப்பானியர் களோ ஜீரோ டிபெக்ட்டையும் தாண்டி மேலே சென்றுவிட்டார்கள். அது எப்படி என்கிறீர்களா? நோயில்லாமல் இருப்பதே பூரண ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகாது இல்லையா? அதே மாதிரி குறையில்லாமல் இருந்தால் மட்டும் போதாது... நாம் தயாரிக்கும் பொருள்கள் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். அதுவும் முக்கியம்!

தரம்பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் காலம் போவது தெரியாமல் அந்த சப்ஜெக்டில் மூழ்கிவிடுகிறார் பாலாஜி. லூகாஸ்&டி.வி.எஸ். கம்பெனியின் மகத்தான வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

இதெ இதெத்தான் நான் சொல்ல வந்தேன் என் 'உதயமாகும் புதிய இந்தியாவிலே'

நாளை நமதே! ஜெய் ஹிந்த்!!

6 comments:

said...

வெளிகண்டநாதரே,

இந்த தரக்கட்டுபாடு ஒவ்வொரு துறையிலும் மற்றும் பொதுஒழுக்கத்திலும் நேர்ந்தால் சேரனின் கனவு நனவாகும். நாம் யாருக்கும் சளைத்தவர்களில்லை. நம் மக்கள் உலகத்தரத்துடன் வாழும் நாள் அதிக தூரமில்லை.

அப்போது நாம் பாடுவோம் "தனியொருவனுக்கு இணையமில்லையெனில் இச் ஜகத்தினை அழித்துடுவோம்'

அன்புடன்

கால்கரி சிவா

said...

நல்ல விஷயம் சார். ரொம்ப நல்ல விஷயம். இந்த மாதிரி ஒவ்வொரு நிறுவனமும் நம்ம ஊருல பெயர் வாங்குனா நம்ம நாட்டுக்கு ரொம்ப நல்லது. தனி மனிதர்கள் நம் நாட்டில் இருக்கும் சூழ்நிலைகளிலும் இந்த மாதிரி சாதிக்கும்போது நம் அரசியல்வாதிகள் தங்களுக்கு உள்ள மக்கள் பலத்தை வைத்துக் கொண்டு இன்னும் என்ன என்ன சாதிக்கலாம் என்று நினைத்தால் ஏக்கமாய் இருக்கிறது.

said...

:)
மிகவும் சந்தோஷமான செய்தி தான். இந்நேரத்தில் 2 விஷயங்களை சொல்லனும்
1. டி.வி.ஸ் குருபிற்கு பின்னர் டெமிங்கின் தரம் தாழ்ந்து விட்டது என பலர் கூறுகின்றனர். Highly coveted prize என்பதெல்லாம் பழசாகிவிட்டது. இந்திய கம்பனிகள் மானாவரியாய் Deming வாங்க ஆரம்பித்து விட்ட்ன. (நான் ஒரு டெமிங் விருது பெற்ற கம்பனியில் 1 வருடம் எஞ்சினியராக இருந்தவன்)
2. இதற்கு கூட ஒரு நடிகையின் குட்டிப்பாவாடை படத்தை போட வேண்டிய நிலை விகடனுக்கா! ஐயகோ!

said...

அப்படி நினைச்சாதான் பராவாயில்லையே குமரன். எத்தனை காலம் ஆனாலும் இந்த அரசியல்வாதிங்க திருந்த போறதில்லை. முன்னேற்றமுன்னனு வரதெல்லாம், இந்த மாதிரி தனிமனிதன் கொண்ட பொதுஜனம் தான் நான் ஏற்கனவே 'உதயமாகும் புதிய இந்தியாவில' சொன்ன மாதிரி!

said...

நன்றிங்க புலம்பல்ஸ், வராம பார்த்துக்கிறேன்!

said...

அப்படியா நந்தன்! 'Deming Prize' பரிசின் வீச்சை இப்பக்கூட இரெண்டு மாச முன்ன 'Times' மேகஸீன்ல படிச்சதா ஞாபகம்! ஆமா நீங்க சொன்ன மாதிரி நிறைய இந்திய கம்பெனிகள் அந்த coveted prize வாங்கி இருக்கு!

குட்ட பாவடை சனரஞ்சகமாச்சுங்களே, அது இல்லாமலா! இந்த ஊர்லயும் பிரட் விக்க ஒரு பொண்ணு கார்மேலே ஆடுற லோலாய பார்த்தீங்களா!